செருமனியில் நிரந்தரமாக அல்லது தற்காலிகமாகத் தங்கியவர்களுக்கும் செருமனி உணவை உண்டவர்களுக்கும் அல்லது HUS பிணியாளர்களுடன் அணுக்கம் கொண்டவர்களுக்கும் ஏப்ரல் 21, 2011 முதல் திடீர்த்தொற்றிற்கான வெளிப்பாடு.[1]
2011 ஈ.கோலை ஓ104:எச்4 தொற்று நிகழ்வு'
சிவப்பணுச் சிதைவு-சிறுநீரகச் செயலிழப்புக் கூட்டறிகுறி உள்ள பிணியாளரிடம் சைசோசைட்கள் (Schizocyte) காணப்படுதல்
ஈ.கோலை ஓ104:எச்4 பாக்டீரியாத் தொற்று நிகழ்வுமே 2011 இல் செருமனியில் தொடங்கியது. அனைவரின் உணவுப்பாதையிலும் பொதுவாகக் காணப்படும் ஈ.கோலை அல்லது எசரிக்கியா கோலை என்று அழைக்கப்படும் பாக்டீரியாவின் ஒருசில வகைகள் உணவு நச்சுமைக்கான பெரும்பான்மைக் காரணிகளுள் ஒன்றாக உள்ளன.[2]. இத்தகைய நச்சுத்தன்மையுடைய ஈ கோலை வகைத் தொற்றால் சிவப்பணுச் சிதைவு - சிறுநீரகச் செயலிழப்புக் கூட்டறிகுறி பலரில் ஏற்பட்டதை அவதானிக்கப்பட்டதை அடுத்து இந்நிகழ்வு செருமனியில் பரவியது கண்டறியப்பட்டது. சிவப்பணுச்சிதைவு - சிறுநீரகச்செயலிழப்புக் கூட்டறிகுறி (சி.சி.கூ) ஒரு உடனடி மருத்துவப் பரிகாரம் வழங்கப்படவேண்டியதொன்றாகும். இதனால் 5 சூன் வரை 22 நபர் இறந்துள்ளனர்[3], மற்றும் ஏறத்தாழ 500 பேர் மருத்துவமனையில் சி.சி.கூவுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
செருமனியில் இது எசரிக்கியா கோலையின் ஒரு வகை எனக் கருதப்பட்டது; திட்டவட்டம் இல்லாத செய்திகள் எசுப்பானியத்தில் இருந்து தருவிக்கப்பட்ட வெள்ளரிக்காய்களால் ஏற்பட்டது எனத் தெரிவித்தன[7], ஆனால் எசுப்பானிய வெள்ளரிக்காய்கள் இந்நிகழ்வுக்குரிய ஈ.கோலையின் மூலம் அல்ல என்பது நிரூபிக்கப்பட்டது[8]. எசுப்பானிய வெள்ளரிக்காய்களுக்கும் ஈ.கோலைக்கும் இடையே உள்ள இத்தவறான தொடர்புள்ள செய்தியைக் கண்டித்து எசுப்பானியம் தனது கோபத்தைத் தெரிவித்தது[9]. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பச்சைக் காய்கறிகள் இறக்குமதி செய்வதை சூன் 22 வரைக்கும் உருசியா தடைசெய்திருந்தது.[10]
மூலம்
2011 மே 26 இல் செருமானிய அறிக்கையின்படி எசுப்பானியத்து மாசுற்ற வெள்ளரிக்காய்களே இதற்குக்காரணம் என்றிருந்தது, ஆனால் இவ்வறிக்கை தவறானது எனப் பின்னர் தெரியவந்தது. 2011 மே 27 இல் ஐரோப்பிய ஆணையம் இரண்டு எசுப்பானிய பைங்குடில்களே இதற்குக் காரணம் என நம்பப்படுகின்றது என்றும் அவை மூடப்பட்டுள்ளன என்றும் அவை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன எனவும் தெரிவித்தது[11][12]. அண்டாலுசியப் பகுதியில் அமைந்துள்ள சந்தேகத்துக்குரிய பைங்குடில்களின் மண், நீர் மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன[13]. அண்டாலுசிய வெள்ளரிக்காய்களின் மாதிரியில் ஈ.கோலை மாசுபாடு இருக்கவில்லை[14][15][16]. காய்கறிகளின் இறக்குமதிப் போக்குவரத்தில் அல்லது அவை அம்பெர்க்கில் விநியோகிக்கும் போது மாசுற்று இருந்திருக்கலாம், இதன்படி செருமனியே இதன் மூலம் என்றும் நம்பப்படுகின்றது[17][18].
2011 மே 31 இல், எசுப்பானியத்தில் இருந்து காய்கறிகளின் இறக்குமதிப் போக்குவரத்தில் எங்காவது ஒரு புள்ளியில் இவை மாசுற்றிருக்கலாம் என ஐரோப்பிய ஒன்றிய உத்தியோக அறிக்கை தெரிவித்தது. எசுப்பானிய அறிக்கை இது எசுப்பானியத்தில் ஏற்பட்டதுக்கு எதுவித ஆதாரமும் இல்லை எனத் தெரிவித்தது[12].
2011 மே 31 இல் நடாத்தப்பட்ட ஆய்வுகூடச் சோதனையில் ஆராயப்பட்ட நான்கு வெள்ளரிக்காய்களில் இரண்டில் நச்சுமை ஏற்படுத்தும் ஈ.கோலை வகை இருக்கவில்லை, மற்றைய இரண்டிலும் உள்ள பாக்டீரியாக்கள் இன்னமும் இனம் காணப்படவில்லை.
மரபணுத்தொகை வரிசை முறைப்படுத்தற்படி இவை புதிய மீ-நச்சுமை வகையைச் சார்ந்த பாக்டீரியாக்கள் என அறியப்பட்டது[19][20][21].
2011 சூன் 2 இல், ஐக்கிய இராச்சியத்திலும் செருமனியிலும் அறியப்பட்ட புதிய வகை பாக்டீரியங்கள் மூலம் இந்நிகழ்வு ஏற்பட்டுள்ளது என்று உறுதிப்படுத்தப்பட்டது[22].
செருமனியின் லோவர் சக்சொனியில் விவசாய அமைச்சின் பேச்சாளர் சூன் 5இல் முளை அவரைகளால் ஈ.கோலை திடீர்த் தொற்று ஏற்பட்டுள்ளது என்று ஐயம் கொள்வதாகவும் அவற்றை உண்ணவேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.[23] லோவர் சக்சொனியில் உள்ள பண்ணையே இதன் மூலமாக இருக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது,[24][25] ஆனால் சூன் 6இல் சோதனைகள் மூலம் இதனை உறுதிப்படுத்தமுடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. பண்ணையில் எடுக்கப்பட்ட 40 மாதிரிகளில் 23இல் பாக்டீரிய இருப்பு இல்லாதிருந்தது.[26] இதற்கு மாறாக, ரொபேர்ட் கொச் நிறுவனத்தின் தலைமையால் சூன் 10இல் முளை கொண்டுள்ள அவரைகளே இத்திடீர் நிகழ்வுக்குக் காரணம் என்று உறுதிப்படுத்தப்பட்டது.[27][28]
பாதிப்படைந்தவர்கள்
வழமையான இத்தகைய திடீர் நிகழ்வில் சிறார்களே பாதிப்படைவதுண்டு, காரணம் அவர்களின் நோய்த்தடுப்பாற்றல் குறைவு என்பதே, ஆனால் ஈ.கோலை ஓ104:எச்4 திடீர்த் தொற்று நிகழ்வில் பெரும்பாலும் பாதிக்கப்பட்டோர் பெண்கள் ஆவர். இது போல முன்னர் ஐக்கிய அமெரிக்காவில் ஏற்பட்ட ஈ.கோலை வகை திடீர்த் தொற்று நிகழ்விலும் பெண்களே பெரும்பான்மையாகப் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதற்குரிய காரணம் தெரியவில்லை.[29].
முன் எச்சரிக்கைகள்
2011 ஆம் ஆண்டு சூன் மாதம் 3 ஆம் தேதி வரைக்கும் இந்நிகழ்வின் காரணம் தெரியவில்லை, எனினும் தடுப்பதற்கான பொதுவான வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.[30] ஈ.கோலை மாந்தருள் மாசுற்ற உணவு, நீர் வழியாக நுழைகின்றது; மலக்கழிவுகள் மூலம் மண்ணில் அல்லது மாசுற்ற நீரால் பயிர்களுக்கு நீர்வார்க்கப்படும் போது ஈ.கோலை குறிப்பிட்ட பயிர்களுக்குள் செல்கின்றது, இதனை உணவாக உட்கொள்வதன்மூலம் தொற்று ஏற்படுகின்றது. நபரில் இருந்து நபருக்குத் தொற்றுதலை கைகழுவுதல் மூலமும், காய்கறிகளை நன்கு கழுவி அவற்றின் தோலை உரித்து, நன்கு சமைத்தல் மூலமும் தடுக்கலாம். காய்கறிகளுக்குள் பாக்டீரியா நுழைந்தால் கழுவுதல் மூலம் மட்டும் அவற்றை அகற்ற முடியாது.
பாதிப்புற்ற நாடுகள்
22 சூன் 2011 வரையிலான நாடுவாரியான நிகழ்வுகள் எண்ணிக்கை[4][31]