2015 நேபாள நிலநடுக்கம் (2015 Nepal earthquake) 2015 ஏப்ரல் 25 ஆம் நாள் சனிக்கிழமை உள்ளூர் நேரம் 11:56 மணிக்கு (6:11:26 ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்) இடம்பெற்ற 7.8 Mwநிலநடுக்கத்தைக் குறிக்கும். நேபாளத்தின் லாம்சுங் மாவட்டத்தின் கிழக்கு-தென்கிழக்கே 15 கி.மீ. (9.3 மைல்) தூரத்தில் மையம் கொண்டிருந்த இவ்வதிர்வு 15 கி.மீ. (9.3 மைல்) ஆழத்தில் இடம்பெற்றது.[1]1934 நிலநடுக்கத்தின் பின்னர் நேபாளத்தில் இடம்பெற்ற மிக மோசமான நிலநடுக்கம் இதுவாகும். குறைந்தது 7,000 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பான்மையானோர் நேபாளத்திலும், வேறு சிலர் அண்டை நாடுகளான இந்தியா, சீனா, வங்காளதேசம் ஆகிய நாடுகளிலும் இறந்துள்ளனர். தலைநகர் காட்மாண்டூவில் பல-நூற்றாண்டுகள் பழமையான யுனெசுக்கோஉலகப் பாரம்பரியக் கட்டடங்கள் பல அழிந்துள்ளன.
நேபாளத்தின் பல இடங்களிலும் தொடர்ச்சியான பின்னதிர்வுகள் இடம்பெற்றன. ஏப்ரல் 26 உள்ளூர் நேரம் 12:54:08 மணிக்கு 6.7 அளவு பின்னதிர்வு இடம்பெற்றுள்ளது.[3]
நிலநடுக்கம்
நிலநடுக்கம், மற்றும் பின்னதிர்வுகளைக் காட்டும் படம்.
நிலநடுக்கம் கிட்டத்தட்ட 20 செக்கன்கள் வரை நீடித்திருந்தது.[5] ஆரம்பத்தில் நிலநடுக்க அளவு 7.5 Mw என்ற அளவிலேயே ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வத் துறை அறிவித்திருந்தது. பின்னர் 7.9 Mw ஆக அதிகரித்த நிலையிலும், இறுதியில் 7.8 Mw என்ற அளவுக்கும் குறைக்கப்பட்டது. சீன நிலநடுக்க மையம் இதனை 8.1 Ms ஆக அறிவித்தது. இந்திய வானிலையியல் துறை இரண்டு நிலநடுக்கங்கள், முறையே 06:11, 06:45 ஒசநே நேரங்களில், இடம்பெற்றதாக அறிவித்திருந்தது. முதலாவது 7.9 ரிக்டர் அளவிலும், இரண்டாவது 6.6 ரிக்டர் அளவிலும் இடம்பெற்றது. நேபாளத்தின் பரத்பூர் என்ற நகரமே நிலநடுக்கம் நடந்த புள்ளிக்கு மிக அருகாமையில் இருந்த முக்கிய நகரமாகும். இது நிலநடுக்க மையத்தில் இருந்து 53 கி.மீ. தூரத்தில் இருந்தது. 4.5 Mw அளவில் மேலும் 28 பின்னதிர்வுகள் இடம்பெற்றிருந்தன.[6]
நிலவியல்
இமயமலைப் பகுதியில் தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்பின் வரைபடம்
நடு ஆசியாவில்யூரேசியக் கண்டத் தட்டும் அதன் கீழேயுள்ள இந்தியக் கண்டத் தட்டும் உரசும் தெற்கு எல்லைப் பகுதியில் நேபாளம் அமைந்துள்ளது.[7] 2,400 கி.மீ. (1,500 மைல்) நீள இமயமலையின் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியை நேபாளம் கொண்டுள்ளது. புவியியல் ரீதியாக, நேபாள இமயமலைப் பகுதி ஐந்து கண்டத்தட்டு வலயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.[8] இவை (1) தெராய் சமவெளி (2) உப இமயம் (சிவாலிக் மலைத் தொடர்), (3) சிறிய இமயம் (மகாபாரதத் தொடர், மற்றும் மத்திய பள்ளத்தாக்குகள்) (4) உயர் இமயம், (5) உள் இமயம் (திபெத் தெத்தீசு) என்பவையாகும்.[9]
இந்த நிலநடுக்கத்தின் பாதிப்பால், இமயமலையிலுள்ள எவரெஸ்ட் மலைச்சிகரத்தின் கீழ்-முகாமில் பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் 18 பேர் கொல்லப்பட்டனர்; 60இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்[19].
அனைத்துலக மனிதாபிமான உதவிகள்
பாதிக்கப்பட்ட நாடுகள்
வங்காளதேசம் — நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு பிரதமர் சேக் அசீனா ஆழ்ந்த வருத்தங்களைத் தெரிவித்துக் கொண்டார்.[20] பத்து டன்கள் துயர் துடைப்பு நிவாரணப் பொருட்கள், கூடாரங்கள், உணவுப் பொருட்கள், குடிநீர், போர்வைகள் போன்றவை வங்காள தேச விமானப்படையைச் சேர்ந்த விமானம் மூலமாக அனுப்பி வைக்கவும் அவர் கட்டளையிட்டார். 34 பேர்களைக் கொண்ட 6 இராணுவ மருத்துவக் குழுக்கள், வெளியுறவு அமைச்சைச் சேர்ந்த அதிகாரிகள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். அந்த விமானம் 50 வங்காள தேசிகள், 14 பேர் அடங்கிய வங்காள தேச பெண் காற்பந்து வீராங்கனைகளுடன் திரும்பி வந்தது.[21][22][23] தவிர, நேபாளத்தில் சிக்கிக் கொண்டு இருக்கும் வங்காளதேசிகளைத் திருப்பிக் கொண்டு வருவதற்கு வங்காளதேசத்தின் தேசிய விமான நிறுவனமான பீமன், ஒரு ஏர்பஸ் விமானத்தையும், ஒரு போயிங் 737 ரக விமானத்தையும் அனுப்பி உள்ளது.[24]
இந்தியா — இந்தப் பேரிடருக்கு முதல் நாடாக உதவிக் கரம் நீட்டிய நாடு இந்தியா. பேரிடர் நடந்த பதினைந்தே நிமிடங்களில், மீட்பு சீரமைப்புப் பணிகளில் முழுமூச்சாக களம் இறங்கியது. அதற்கு மைத்திரி நடவடிக்கை(Operation Maitri) என்று பெயர். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உடனடியாகத் துயர் துடைப்பு மீட்புக் குழுவினரை நேபாளத்திற்கு அனுப்பி வைத்தார். மருத்துவக் குழுவும் அதில் அடங்கும். தேசிய பேரிடர் நிவாரணப் படையில் இருந்து 450 அதிகாரிகளும், குறிப்பிட்ட அளவிற்கு மோப்ப நாய்களும் அனுப்பி வைக்கப் பட்டனர். இந்திய விமானப் படையில் இருந்து கூடுதலாகப் பத்து போர் விமானங்களும் அனுப்பி வைக்கப்பட்டன.[25] அதன் பின்னர் இந்தியா, 43 டன்கள் நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்தது. அதில் கூடாரங்கள் உணவுப் பொருட்கள் அடங்கும்.[26] நேபாளப் பிரதமருடன் பேசிய நரேந்திர மோடி, இந்தியாவின் ஆதரவையும் உதவியையும் உறுதிபடுத்தினார்.[27] மேஜர் ஜெனரல் ஜே.எஸ். சாந்து தலைமையில், இந்திய இராணுவம் மூன்று உயர் இராணுவத் தளபதிகளை நேபாளத்திற்கு அனுப்பி வைத்தது. இந்திய இராணுவ அதிகாரிகள், ஓய்வு பெற்ற நூற்றுக் கணக்கான குர்கா இராணுவ வீரர்களுடன் ஒன்றிணைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.[28] மைத்திரி நடவடிக்கையில், இந்திய விமானப் படையின் இலுசின் Il-76, லோக்ஹீட் C-130J ஹெர்குலிஸ், போயிங் C-17 குளோப் மாஸ்டர், Mi-17 ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. வானத்தில் இருந்து நிவாரணப் பொருட்களைப் போடுவதற்கு எட்டு Mi-17 ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப் படுகின்றன.[29][30] இந்திய விமானப் படையினர் 500 இந்தியர்களை, நேபாளத்தில் இருந்து வெளியேற்றம் செய்து இருக்கிறது.[31][32][33] இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தன்னுடைய மான் கி பாட் எனும் தேசிய உரையில், நேபாளத்தில்ன் ஒவ்வொருவரின் கண்ணீரும் துடைக்கப்படும் என்று உறுதி கூறினார்.[34] இதற்கிடையில், இந்திய இராணுவத்தின் மலையேற்றக் குழுவினர் 19 மலையேறிய வீரர்களின் உடல்களை மீட்டுள்ளனர். தவிர, இமயமலையில் சிக்கிக் கொண்ட 61 பேரையும் காப்பாற்றி உள்ளனர்.
சீனா — சீனப் பிரதமர் லீ கெச்சியாங் நேபாளியப் பிரதமர் சுசில் கொய்ராலாவிற்கு தம்முடைய ஆழ்ந்த மனவருத்தங்களைத் தெரிவித்து உள்ளார்.[35] தங்களால் இயன்ற உதவிகளைச் செய்யத் தயாராக இருப்பதாக, நேபாளிய அதிபர் ராம் பரன் யாதவ் அவர்களுக்கும் உறுதி கூறினார்.[36] சீனா தன்னால் இயன்ற எல்லா உதவிகளையும் செய்யும் என்றார்.[37] சீன அனைத்துலக தேடல் மீட்புக் குழு 68 உறுப்பினர்கள், 6 மோப்ப நாய்களையும் நேபாளத்திற்கு அனுப்பியுள்ளது.[38][39][40] கூடாரங்கள், போர்வைகள், மினி இயக்கிகள் என 3.3 மில்லியன் அமெரிக்க டாலர்கள் உதவிப் பொருட்களாக அனுப்பி வைத்து உள்ளது.[41] பேரிடரில் பாதிக்கப்பட்ட சீன நாட்டவர்களுக்கு அவசர உதவிகளைச் செய்வதற்கு நேபாளத்தில் உள்ள சீனத் தூதரகம் முடுக்கி விடப்பட்டு உள்ளது.[42]
மற்ற நாடுகள்
அல்ஜீரியா — 70 மீட்புப் பணியாளர்கள், மருந்து வகைகள், இதர உதவிப் பொருட்களை அல்ஜீரியா நேபாளத்திற்கு அனுப்பி வைத்து உள்ளது.[43]
ஆத்திரேலியா — உடனடி அவசரத் தேவைகளுக்கு ஆஸ்திரேலியா 5 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் உதவியை அறிவித்து உள்ளது. அரசு சாரா ஆஸ்திரேலிய அமைப்புகளுக்கு 2.5 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள்; ஐக்கிய நாட்டுச் சபையின் பங்காளிகளுக்கு 2 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள்; ஆஸ்திரேலிய செஞ்சிலுவைச் சங்கத்திற்கு 5 இலட்சம் மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.[44] இதைத் தவிர, இரு மீட்புப் பணியாளர்கள் குழுவையும் அனுப்பி வைத்து உள்ளது.[45]
பெல்ஜியம் — தேடல் மீட்புக் குழுக்களை பெல்ஜியம் அனுப்பி உள்ளது.[45]
பூட்டான் — தன்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்ட பூட்டானிய பிரதமர் செரிங் தோப்கே, அந்த நிலநடுக்கத்தால் பூட்டானில் பெரும் சேதங்கள் ஏற்படவில்லை என்று கூறினார். பூட்டானிய மன்னர் ஜிக்மே கேசர் நாம்கியல் வாங்சுக் தலைமையில் 63 மருத்துவக் குழுவினர் காட்மாண்டுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். பூட்டானிய சுகாதார அமைச்சரும் அங்கு அனுப்பப்பட்டு இருக்கிறார். மறுசீரமைப்பு பணிகளுக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கப்படுவதாகவும் அறிவித்தார்.[46][47][48][49][50] பூட்டான் நாட்டின் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று பூட்டானிய பிரதமர் செரிங் தோப்கே அறிவித்தார்.[51]
பிரேசில் — நேபாள மக்களுக்கும் நேபாள அரசாங்கத்திற்கும் பிரேசில் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டது. மீட்புக் குழுவினைஅயும் அனுப்பி உள்ளது.[52]
பல்கேரியா — நேபாள நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, பல்கேரிய அதிபர் ரோசன் பிளெவ்நெலிவ் தம்முடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டார்.[53]
கனடா — பிரதமர் ஸ்டீவன் ஹார்ப்பர், நேபாள மக்களுக்கும் வட இந்தியாவில் பாதிக்கப் பட்டவர்களுக்கும் ஆழ்ந்த வருத்தங்களைத் தெரிவித்துக் கொண்டார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டிக் கொண்டார். இந்தப் பேரிடரில் கனடா எவ்வாறு உதவிகள் செய்ய முடியும் என்பதை ஆராய்ந்து வருவதாகவும் கூறினார்.[54] 5 மில்லியன் கனடிய டாலர்களை வழங்குவதாகக் கனடிய வெளியுறவு, வர்த்தக அமைச்சர் ரோப் நிக்கல்சன் அறிவித்தார்.[55] முப்பது பேர் அடங்கிய ஒரு பேரிடர் உதவிக் குழு நேபாளத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.[56] கனடாவின் பல்வேறு மனிதச் சமூக அமைப்புகள் நேபாளத்தின் மறுசீரமைப்பிற்கு உதவ முன்வந்துள்ளன. உதவிநிதி சேர்ப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன.[57] புதிதாகத் தோற்றுவிக்கப்பட்டு உள்ள நேபாள நிலநடுக்கப் பேரிடர் நிதிக்கு வழங்கப்படும் ஒவ்வொரு டாலருக்கும், ஈடாக ஒரு டாலரை வழங்க கனடிய நடுவண் அரசு முன் வந்துள்ளது.[58] நிலநடுக்கம் நடந்த போது நேபாளத்தில் 462 கனடியர்கள் இருந்ததாகப் பதிவு செய்யப்பட்டு உள்ளனர்.[59]
கொலம்பியா — நேபாள மக்களுடன் கூட்டு ஒருமைப்பாடு இருப்பதாகவும், நிவாரண உதவிகள் உடனடியாக அனுப்பி வைக்கப்படும் என்று கொலம்பிய நாட்டு அதிபர் கூறி இருக்கிறார்.[60]
செக் குடியரசு — நேபாளத்திற்கு 20 மில்லியன் செக் கிரவுன் (791,378 அமெரிக்க டாலர்) வழங்குவதாக செக் குடியரசு அறிவித்துள்ளது.[61] Foreign Minister Lubomír Zaorálek expressed his deepest condolences to families and friends of victims.[62]
டென்மார்க் — 5 மில்லியன் குரோன் நிதியுதவி. கூடுதலான உதவிகளும் செய்யப்படும். உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றான நேபாளத்தில் ஏற்பட்டுள்ள இந்த அவலநிலைக்கு மனம் வருந்துவதாக டென்மார்க் மேம்பாட்டு அமைச்சர் மோகன்ஸ் ஜென்சன் அறிவித்தார். டென்மார்க் நாட்டின் மனிதநேய அமைப்புகள் நன்கொடைகளைத் திரட்டி வருகின்றன.[63]
எகிப்து — எகிப்திய அரசாங்கம் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்தது. நேபாள நாட்டு மக்களின் துயரத்தில் எகிப்து பங்கெடுத்துக் கொள்கிறது என்றும், விரைவில் உதவிகள் அனுப்பி வைக்கப்படும் என்றும் அறிவித்தது.[64]
எசுத்தோனியா — எஸ்டோனிய பேரிடர் புனரமைப்பு குழு 15 பேர் அடங்கிய தொண்டூழியர்களையும், மருத்துவ ஊழியர்களையும் அனுப்பி உள்ளது. எஸ்டோனிய அரசாங்கம் நிதி திரட்டும் இயக்கத்தையும் தொடக்கி உள்ளது.[65]
பின்லாந்து — பின்லாந்து செஞ்சிலுவைச் சங்கம் நிதி திரட்டும் இயக்கத்தைத் தொடக்கி உள்ளது. நிவாரண தொண்டூழியர்களை அனுப்பி உள்ளது.[66]
பிரான்சு — நேபாளிய மக்கள், நேபாளிய அரசாங்கத்துடன் பிரான்சு அரசாங்கம் ஒருமைப்பட்டு கொண்டு இருப்பதாகவும், ஒரு நெருக்கடி மையத்தை பிரான்சு வெளியுறவு அமைச்சு தொடக்கி இருப்பதாகவும் பிரான்சு அறிவித்தது. நிவாரண புனரமைப்புக் குழு புதுடில்லிக்கு அனுப்பப்பட்டது.[67] 11 புனரமைப்புக் குழுவினரையும் கூடாரங்கள் உணவுப் பொருட்களையும் காட்மாண்டுவிற்கு அனுப்பி வைத்தது.[68]
செருமனி — நிலநடுக்கம் நடந்த அன்றைய தினமே உதவிகள் செய்வதாக அறிவித்தது.[69] 52 பேர் அடங்கிய புனரமைப்பு ஊழியர்கள், மருத்துவர்கள், ஆய்வாளர்களை அனுப்பி வைத்தது.[70]
கிரேக்க நாடு — துயர் துடைப்பு நிவாரணக் குழுவினரை அனுப்பி வைத்தது.[45]