பாக்கித்தானில் சமயச் சிறுபான்மையினருக்கு எதிராக தீவிரவாதத்தில் ஈடுபடும் பல அமைப்புக்களுக்கு பாக்கித்தானிய தாலிபான் மேற்பார்ப்பு அமைப்பாக விளங்குகின்றது. இவர்களால் பாக்கிதானின் மக்கள்தொகையில் 2% வரையிலுள்ள கிறித்தவர்கள் மீது அடிக்கடி தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.[4]
2013இல் நடந்த தற்கொலைத் தாக்குதலில் வரலாற்றுச் சிறப்புமிக்க அனைத்துப் புனிதர் தேவாலயத்தில் 75 பேர் கொல்லப்பட்டனர்.[6][7] மார்ச் 2015இல் லாகூர் தேவாலயக் குண்டுவெடிப்பில் குறைந்தது 15 பேர் உயிரிழந்தனர்.[8] அப்போது தாலிபான் இதற்கு பொறுப்பேற்றதுடன் மேலும் பல தாக்குதல்கள் நடத்தப்படும் எனவும் எச்சரித்தது.[8]
பாக்கித்தானிய தாலிபானின் ஒரு பிரிவான ஜமாத்-உல்-அரார், முதலில் குழுவிலிருந்து பிரிந்து பின்னர் மார்ச் 2015இல் மீண்டும் இணைந்தது.[4][9][10] ஜமாத்-உல்-அரார் குழுதான் நவம்பர் 2014இல் வாகா எல்லைத் தாக்குதலை நடத்தியது; இதில் 60 பேர் கொல்லப்பட்டனர்; 100க்கும் கூடுதலானோர் காயமுற்றனர்.[11]
குண்டு வெடிப்பு
மாலை 6:30க்கு குண்டுவெடிப்பு நடைபெற்றது; அவசர உதவி 1122 தொடர்பாளர் மாலை 6:44க்கு அழைப்பு வந்ததாகவும் உடனே 23 மருத்துவ உதவுகை ஊர்திகள் அனுப்பப்பட்டதாகவும் கூறினார்.[12] 40க்கும் மேற்பட்ட உயிரற்ற உடல்கள் லாகூரின் ஜின்னா மருத்துவகத்தை வந்தடைந்தன.[13] மருத்துவ உதவுகை ஊர்திகள் பற்றாது போனமையால் வாடகையுந்துகளும் தானிகளும் காயமுற்றோரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டன.[13] 2015ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இரண்டு இலாகூர் தேவாலயங்களில் குண்டுவெடிப்பை நடத்தியிருந்த பாக்கித்தானிய தாலிபானின் ஜமாத்-உல்-அரார் தற்போதைய குண்டுவெடிப்பிற்கும் உரிமை கோரியது.[14][15] ஜமாத்-உல்-அராரின் தொடர்பாளர் எசனுல்லா எசான் கிறித்தவர்களை குறிவைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக உறுதிபடுத்தினார்.[5]