2019 அயோத்தி சிக்கலுக்கு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, பல்லாண்டுகளாக நிலவி வந்த இந்து - முஸ்லீம்களிடையே நடைபெற்ற அயோத்தி சிக்கல் வழக்கினை, 9 நவம்பர் 2019 அன்று இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உள்ளிட்ட ஐந்து நீதிபதிகள் அடங்கிய குழு ஒருமனதாக தீர்ப்பு வழங்கி முடித்து வைத்தனர்.[3] இந்திய உச்ச நீதிமன்றம், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை, இந்திய அரசால் புதிதாக நிறுவப்படும் அறக்கட்டளையிடம் வழங்கியும், அந்நிலத்தில் (ராம ஜென்ம பூமியில்) இராமர் கோயில் கட்டவும் உத்தரவு இட்டுள்ளது. மேலும் அயோத்தியில் முஸ்லீம்கள் தொழுகை நடத்துவதற்கு கட்டிடங்கள் கட்டிக் கொள்ள, ஐந்து ஏக்கர் நிலத்தை அரசு விலையின்றி உத்தரப் பிரதேச வக்ப் வாரியத்திற்கு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
பின்னணி
அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பு
6 டிசம்பர் 1992 அன்று சங்பரிவார் அமைப்புகள் ஒன்று கூடி, அயோத்தியில் உள்ள ராம ஜென்ம பூமி மீது எழுப்பியதாக கருதப்பட்ட பாபர் மசூதியை இடித்தனர். பின்னர் இந்திய அரசு சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சீல் வைத்தனர். சர்ச்சைக்குரிய இந்நிலத்திற்கு உரிமை கோரி இந்து மற்றும் முஸ்லீம் அமைப்புகள், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அலகாபாத் உயர் நீதிமன்றம் 30 செப்டம்பர் 2010 அன்று, சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை மூன்று சரிபகுதிகளாகப் பிரித்தனர். ஒரு பகுதி குழந்தை இராமருக்கும், இரண்டாவது பகுதி நிர்மோகி அகாராவிற்கும், மூன்றாவது பகுதி சன்னி வக்பு குழுவுக்கும், பிரித்து வழங்கித் தீர்ப்பளித்தனர்.
மேலும் உயர்நீதிமன்றத் தீர்ப்பில், சர்ச்சைக்குரிய நிலத்தில், இந்துக்களில் சமய நம்பிக்கைகளின் படி, இராமர் பிறந்தார் என்பதை ஏற்றுக் கொண்டுள்ளது. மேலும் இராமர் கோயிலை இடித்து விட்டு பின்னர் அதன் மீது, பாபர் மசூதி கட்டப்பட்டது என்றும், மேலும் பாபர் மசூதி, இசுலாமிய மசூதிக் கட்டிடக் கலை விதிகளின் கட்டப்படவில்லை என்றும் தீர்ப்பில் கூறியுள்ளனர்.[4][5]
வழக்கின் தலைப்புகள்
1950-இல் சர்ச்சைக்குரிய இடத்தில் இந்துக்கள் வழிபட உத்தரவைக் கோரி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் கோபால் சிங் விசாரத் என்பவர் வழக்கு தொடுத்தார். 1953-இல் நிர்மோகி அகாரா என்ற இந்துத் துறவியர் அமைப்பு[6] சர்ச்சைக்குரிய நிலத்திற்கு தங்களிடம் வழங்கக் கோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். மூன்றாவதாக உத்தரப் பிரதேச சன்னி வக்பு வாரியம், சர்ச்சைக்குரிய நிலத்தை தங்களிடம் ஒப்படைக்கக் கோரி வழக்கு தொடுத்தனர்.
அலகாபாத் உயர் நீதிமன்றம், சர்ச்சைக்குரிய அயோத்தி நில வழக்கை 2002 முதல் 2010 வரை விசாரித்தனர். 30 செப்டம்பர் 2010-இல் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு, சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை, வழக்கு தொடுத்த அமைப்புகளுக்கு மூன்றில் ஒரு பங்கு வீதம் பிரித்து வழங்கினர்.
சர்ச்சைக்குரிய நிலப்பகுதியில் மூன்றில் ஒரு பகுதியை இராமர் கோயிலுக்கும், ஒரு பகுதியை நிர்மோகி அகாராவிற்கும், மற்றொரு பகுதியை சன்னி வக்பு வாரியத்திற்கு வழங்கித் தீர்ப்பளித்தனர்.[7][8] அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேற்படி மூன்று குழுக்களும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.[9][10]
சர்ச்சைக்குரிய அயோத்தி நிலச் சிக்கலுக்கு, அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு இந்திய உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. பின்னர் உச்ச நீதிமன்றம் இவ்வழக்கை ஏற்று தொடர்ந்து நாற்பது நாட்கள் விசாரணை செய்து, 6 ஆகஸ்டு 2019 அன்று இறுதி விசாரணையை முடித்துக் கொண்டு, தீர்ப்பை ஒத்து வைத்தது.[11] to 16 October 2019.[12] 9 நவம்பர் 2019 அன்று இந்திய உச்ச நீதிமன்றம் அயோத்தி பிரச்சினைக்கு இறுதித் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பின் படி, சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில், இந்திய அரசு ஒரு அறக்கட்டளை நிறுவி, அதன் மூலம் அயோத்தியில் இராமர் கோயில் கட்ட வேண்டும் என்றும், இசுலாமியர்கள் தொழுகை நடத்த அயோத்தியில் ஐந்து ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியத்திற்கு அரசு ஒதுக்கித் தர வேண்டும் என தீர்ப்பு கூறியது.[13]
உச்ச நீதிமன்ற தீர்ப்பு வருவதற்கு முந்தைய தடைகள்
அயோத்தி வழக்கில் 9 நவம்பர் 2019 அன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறுவதற்கு பதினைந்து நாட்களுக்கு முன்னரே, கலவரங்கள் நிகழாமல் இருக்க அயோத்தி முழுவதும் காவல் துறை தடையுத்தரவு அமல் படுத்தியது. துணை இராணுவப் படையினர் அயோத்தி முழுவதும் கண்காணித்தனர்.[14]
உத்தரப் பிரதேசம் மற்றும் இராஜஸ்தான் மாநிலத்தில் பல பகுதிகளில் இணைய சேவை முடக்கப்பட்டது.[15][16] மேலும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பினால் கலவரம் ஏற்படும் என கணிக்கப்பட்ட 31 மாவட்டங்களையும், 673 தனிநபர்களையும் காவல் துறையினர் நெருக்கமாகக் கண்காணித்தனர்.[17] உத்தரப் பிரதேசம் மாநிலம் முழுவதும் 144 தடையுத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டது.[18]
9 நவம்பர் 2019 அன்று இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உள்ளிட்ட ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு, அயோத்தி வழக்கில் ஒரு மனதாக தீர்ப்பு வழங்கினர்.[22][23] The judgement can be summarised as follows:[24][25][26][27]
மூன்று மாத காலத்திற்குள் இந்திய அரசு ஒரு அறக்கட்டளையை நிறுவி, அவ்வமைப்பு மூலமாக இராமர் கோயில் கட்ட வேண்டும். மேலும் இந்திய அரசு சர்ச்சைக்குரியதாகக் கருதப்பட்ட 2.77 ஏக்கர் நிலத்தை அறக்கட்டளையிடம் ஒப்படைக்க வேண்டும்.
அயோத்தியில் இசுலாமியர்கள் தொழுகை நடத்த மசூதி கட்டுக் கொள்ள ஐந்து ஏக்கர் நிலத்தை இந்திய அரசு அயோத்தியில் ஒதுக்கி சன்னி வக்பு வாரியத்திற்கு வழங்க வேண்டும்
அயோத்தி சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பாக 2010-இல் அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சரியன்று என உச்ச நீதிமன்றம் அறிவித்தது.
இந்தியத் தொல்லியல் ஆய்வகம் சர்ச்சைக்குரிய நிலத்தில் நடத்திய அகழாய்வுகளில் கண்டெடுத்த தொல் பொருட்கள் மூலம், இசுலாமியர் அல்லாத சமயத்தவரின் கட்டிட அமைப்பு மீது பாபர் மசூதி கட்டப்பட்டுள்ளது என்ற கூற்றை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.
ஏற்கனவே உள்ள ஒரு கட்டிடத்தின் கீழிருந்த ஒரு பண்டைய மத கட்டமைப்புகளை, நட்பற்ற சக்திகளால் இடிக்கப்பட்டது என்பதை நீதிமன்றம் ஏற்கவில்லை என்பதை தனது 1,045 பக்க தீர்ப்பில் விளக்கியுள்ளது. குறிக்கவில்லை.[28]
சீக்கிய குருமார்களில் முதல் குருவான குருநானக், கிபி 1510 மற்றும் 1511 ஆண்டுகளில் அயோத்தி சென்று குழந்தை இராமரை வழிபட்டதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
மேலும் 1857-இல் நிகாங் சீக்கியப் பிரிவினர் அயோத்தி பாபர் மசூதியில் உள்ள குழந்தை இராமரை வழிபட்டதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.[29]
சர்ச்சைக்குரிய நிலத்தின் மீதான தங்கள் முழு ஆதிக்கத்தை நிலைநாட்ட சன்னி வக்பு வாரியம் உள்ளிட்ட இசுலாமிய அமைப்புகள் தவறிவிட்டதாக தீர்ப்பில் கூறப்பட்டது.
சர்ச்சைக்குரிய பாபர் மசூதி வளாகத்தில், இராமர் பிறந்தார் என்ற மாறாத நம்பிக்கையுடன் தொடர்ந்து இந்துக்கள் குழந்தை இராமர் சிலையை நிறுவி வழிபட்டது முக்கிய ஆதாரமாக நீதிமன்றம் எடுத்துக் கொண்டது. பாபர் மசூதி வளாகத்தின், வெளிமுற்றப் பகுதியில் இராமர் சிலையை வைத்து வழிப்பட்ட பகுதிக்கும், உள்முற்றத்தில் தொழுகை நடத்தும் பகுதிக்கும் இடையே 1856–1857 ஆண்டுகளில் முஸ்லீம்கள் இரும்புத் தடுப்புகள் அமைத்து பிரித்ததன் மூலம், பாபர் மசூதியின் உள்முற்றம் வரை இந்துக்கள் புழங்கியதாக விளங்குகிறது.
இவ்வழக்கில் ஒரு மனுதாரரான நிர்மோகி அகாரா அமைப்பிற்கு, சர்ச்சைக்குரிய நிலத்தில் பங்கு உரிமை ஏதும் கிடையாது.[30] இருப்பினும், நிர்மோகி அகாரா அமைப்பினர் இராமர் கோயில் அறக்கட்டளையிடம் தனது முறையீட்டை எடுத்துரைக்கலாம்.
சியா வக்பு வாரியத்தினர் பாபர் மசூதி வளாகத்தின் உரிமையை, சன்னி வக்பு வாரியத்திடமிருந்து தங்களிடம் வழங்கக் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இத்தீர்ப்பின் மேல் முறையீடு குறித்த பதினெட்டு மனுக்கள் அனைத்தையும் 12 டிசம்பர் 2019 அன்று உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.[31]
உள்நாட்டில் எதிர்வினைகள்
ஆதரவு
சன்னி மத்திய வக்பு வாரியம் இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்பதாகவும், தீர்ப்பிற்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்வதில்லை எனக்கூறிவிட்டனர்.[32]
தில்லி ஜும்மா மசூதி இமாம் உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு ஆதரவு தெரிவித்துள்ளதுடன், இது குறித்து வருங்காலங்களில் சர்ச்சைகள் நடைபெறக் கூடாது என்றார்.[33]
அரசியல் கட்சிகளின் ஆதரவுகள்
இந்தியாவில் பல பெரிய அரசியல் கட்சிகள் உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்றனர்.[34] உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் இந்தியாவின் பெரிய இரு சமயத்தினரிடையே சமாதானம் மற்றும் ஒற்றுமை நிலவும் என பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.[35] இத்தீர்ப்புக்கு ஆதரவளித்த இந்திய தேசிய காங்கிரசு கட்சி, நாட்டில் அமைதியும், சமாதானமும் நிலவ வேண்டும் எனக்கேட்டுக் கொண்டது.[36]
தில்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பிகார் முதல்வர் நிதிஷ் குமார், மத்தியப் பிரதேச முதல் கமல்நாத், திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் ஆகிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்றனர்.[37][38]
எதிர்ப்புகள்
இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் ஊடகமாக நேசனல் ஹெரால்டு இதழ், தீர்ப்பை விமர்சனம் செய்து இரண்டு கட்டுரைகள் எழுதியது.[39][40][41] இவ்விமர்சனக் கட்டுரைகளுக்கு பாரதிய ஜனதா கட்சி மற்றும் பிற ஊடகங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த பின்னர், ஹெரால்டு இதழின் நிர்வாகி மன்னிப்புக் கோரியதுடன், இதழிலிருந்து தீர்ப்பின் விமர்சனக் கட்டுரைகள் நீக்கப்பட்டது.[41][42]