2020 பெத்திரீனியா நிலநடுக்கம்
2020 கொரோவாசிய நிலநடுக்கம் (2020 Croatia earthquake) அல்லது பெத்திரீனியா நிலநடுக்கம் (Petrinja earthquake) 2020 திசம்பர் 29 அன்று கிட்டத்தட்ட பிப 12:20 ம.ஐ.நே (11:20 ஒ.ச.நே) குரோவாசியாவின் சிசாக்-மொசுலாவினா மாவட்டத்தில் இடம்பெற்ற 6.4 Mw (6.2 ML) அளவு நிலநடுக்கம் ஆகும். இதன் நிலநடுக்க மையம் பெத்ரீனியா நகரில் இருந்து 3 கிமீ (1.8 மைல்) மேற்கு-தென்மேற்குப் பகுதியில் நிலைகொண்டிருந்தது.[1] இதன் ஆகக்கூடிய செறிவு ஐரோப்பிய நுண்புவியலைவு அளவுகோளில் VIII (பெரும் பாதிப்பு) முதல் IX (நாசம்) ஆகக் கணக்கிடப்பட்டது.[2][3] இந்நிகழ்விற்கு முன்னதாக முந்தைய நாளில் மூன்று முன்னதிர்வுகள் ஆகக்கூடியது 5.2 Mw அளவில் இடம்பெற்றிருந்தது.[4] இந்த நிலநடுக்கத்தின் பின்னர் 4.8 Mw வரையான பல பின்னதிர்வுகள் இடம்பெற்றன.[3] இந்நிலநடுக்கத்தினால் ஏழு பேர் உயிரிழந்ததாகவும், 26 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. பெத்ரீனியா நகரில் பல கட்டடங்கள் முற்றாக இடிந்து வீழ்ந்தன.[5] நகரின் அரைவாசிப் பகுதி சேதமடைந்ததாக நகர முதல்வர் தாரிங்கோ தும்போவிச் அறிவித்தார்.[6][7][8][9] இந்நிலநடுக்கத்தின் தாக்கம் வடக்கு குரோவாசியா, மற்றும் அயல் நாடுகளான சுலோவீனியா, ஆஸ்திரியா, பொசுனியா எர்செகோவினா, செர்பியா, அங்கேரி, சிலோவாக்கியா, இத்தாலி ஆகியவற்றின் பல பகுதிகளிலும், அத்துடன் மொண்டெனேகுரோ, ஜெர்மனி, செக் குடியரசு வரை உணரப்பட்டது. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia