2024 பாரசீக வளைகுடா வெள்ளம் (2024 Persian Gulf floods) என்பது 2024-இல், பாரசீக வளைகுடா பகுதிகளில் பெய்த பலத்த மழையின் விளைவாக இப்பகுதி முழுவதும் திடீரென ஏற்பட்ட வெள்ளம் ஆகும். பல மாநிலங்களில் ஒரே நாளில் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்குச் சமமான மழைப் பதிவாகியுள்ளது. இதனால் ஏற்பட்ட வெள்ளம் இப்பகுதி முழுவதும் குறிப்பிடத்தக்கத் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஓமான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இந்த வெள்ளத்தினால் அதிகமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளாகும். இதன் விளைவாக ஓமானைச் சேர்ந்த 19 பேர் உட்படக் குறைந்தது 24 பேர் இறந்தனர்.[1][2] தென்கிழக்கு ஈரான், யெமன் மற்றும் சவுதி அரேபியா கிழக்கு மாகாணம், அதே போல் வளைகுடா நாடுகளான பகுரைன் மற்றும் கத்தார் ஆகியவையும் பலத்த மழை மற்றும் அடுத்தடுத்த வெள்ளத்தால் பாதிப்பினைச் சந்தித்தன.
பின்னணி
பாரசீக வளைகுடா பகுதியானது, வெப்பமான மற்றும் வறண்ட வானிலைக்குப் பெயர் பெற்றது; இருப்பினும் கனமழையால் ஏற்படும் வெள்ளமும் சமீபத்திய ஆண்டுகளில் வழக்கமாக ஏற்பட்டுள்ளது.[3] வறண்ட பாலைவனக் காலநிலை மற்றும் அதிக வெப்பநிலை காரணமாக, ஐக்கிய அரபு அமீரகத்தில் தண்ணீர்ப் பற்றாக்குறையை எதிர்த்துப் போராட மேக விதைப்பு பயன்படுத்தப்படுகிறது.[4] தீங்கு விளைவிக்கும் விதைப்பு பொருட்களைப் பயன்படுத்துவது சுற்றுச்சூழல் தாக்கத்திற்கு வழிவகுக்கும் என்பதால் செயற்கை மழைப்பொழிவு விமர்சிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஐக்கிய அரபு அமீரகம் வெள்ளி அயோடைடு போன்ற தீங்கு விளைவிக்கக்கூடிய இரசாயனங்களுக்குப் பதிலாக இயற்கை உப்புகளைப் பயன்படுத்தப்படுகின்றது.[5] ஐக்கிய அரபு அமீரகம் பூமியில் வெப்பமான மற்றும் வறண்ட பகுதிகளில் ஒன்றாக இருப்பதால், மழை மேம்பாட்டு அறிவியலுக்கான ஐக்கிய அரபு அமீரகத்தின் ஆராய்ச்சித் திட்டம் நாட்டில் எதிர்பார்க்கப்படும் நீர்ப் பற்றாக்குறையைச் சமாளிக்கப் புதுமையான தீர்வுகளில் முதலீடு செய்து வருகிறது.[6] பிற விமர்சகர்கள் அசாதாரண வானிலையைப் பருவநிலை மாற்றத்துடன் இணைத்துள்ளனர்.[7][8] மேக விதைப்பு ஒரு குறைந்த விளைவை மட்டுமே ஏற்படுத்தும் என்றும் மேக விதைப்பில் கவனம் செலுத்துவது "தவறானது" என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.[9] இப்பகுதி சமீபத்திய ஆண்டுகளில் வெப்ப அலைகள் மற்றும் சூறாவளிகளால் பாதிக்கப்பட்டுள்ளது.[10] மேலும் வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் அதிகரித்து வருவதால், வளைகுடாவில் வெள்ளம் ஏற்படும் அபாயமும் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.[11]
வெள்ளத்திற்குப் பிறகு, புளூம்பெர்க் போன்ற சில செய்தி நிறுவனங்கள், கனமழையை ஐக்கிய அரபு அமீரகத்தின் செயற்கை மழைத் திட்டத்துடன் தொடர்புப்படுத்தி கருத்துக்கள் வெளியிட்டன.[12] பெரிய அளவிலான வானிலை முறை முன்கூட்டியே கணிக்கப்பட்டதாலும், மேக விதைப்பால் பாதிக்கப்பட முடியாத அளவுக்கு அதிகமாக இருந்ததாலும், அதிக மழைப்பொழிவுக்கு மேக விதைப்பு தான் காரணம் என்பதை ரீடிங் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மறுத்தனர். மேக விதைப்பின் விளைவுகள் பொதுவாகக் குறுகிய காலத்திற்கு மட்டுமே நீடிக்கும். சில மணிநேரங்களுக்கே இவை நீடிக்கும் என்று அவர்கள் கூறினர்.[13] பெரிய இடியுடன் கூடிய மழை பெய்ததால் பலத்த மழை பெய்ததாக ரீடிங் பல்கலைக்கழகத்தின் வானிலை ஆய்வாளர்களும் தெரிவித்தனர். ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய வானிலை மையத்தின் துணை இயக்குநர் உமர் அல் யாசிதி, இந்த நிறுவனம் "இந்த நிகழ்வின் போது எந்த செயற்கை மழைக்கான நடவடிக்கைகளையும் நடத்தவில்லை" என்றார்.[14] மேக விதைப்புக்கான இணைப்பை மற்ற செய்தி வர்ணனையாளர்களும் நிராகரித்துள்ளனர். தொழில்நுட்பம் ஓரளவு மழையை அதிகரிக்கிறது என்றும், ஐக்கிய அரபு அமீரகத்தின் மேக விதைப்புத் திட்டம் நாட்டின் கிழக்குப் பகுதியில், அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட பெருநகரப் பகுதிகளிலிருந்து விலகி உள்ளது என்றும் கூறினார்.
தாக்கம்
பகுரைனின் மனாமாவில் வெள்ளம்
ஓமான்
ஓமானில், வெள்ளத்தால் குறைந்தது 19 பேர் கொல்லப்பட்டனர்.[15] இதில் 10 பள்ளிக் குழந்தைகள் மற்றும் அவர்களின் வாகன ஓட்டுநர் ஆகியோர் அடங்குவர். ஏப்ரல் 14 அன்று சமத் அல்-ஷானில் வெள்ள நீரில் வாகனம் அடித்துச் செல்லப்பட்டது.[16][17] மீட்புப் பணியாளர்கள் சகாமில் ஒரு பெண்ணின் உடலைக் கண்டுபிடித்தனர்.[18] பரவலாக வெள்ளம் ஏற்பட்ட சர்கியா வடக்கு ஆளுநரகம் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதியாகும். மஸ்கட் பன்னாடு வானூர்தி நிலையத்திலிருந்து சில வானூர்தி பயணங்கள் இரத்து செய்யப்பட்டன. சில பயணங்கள் தாமதமானது.[11]
ஐக்கிய அரபு அமீரகம்
ஐக்கிய அரபு அமீரகம் 24 மணி நேர காலப்பகுதியில் சாதனை படைத்த மழையைக் கண்டது. இது 1949-இல் பதிவுகள் தொடங்கியதிலிருந்து அமீரக வானிலைத் தரவுகளை விஞ்சியது. தேசிய வானிலை ஆய்வு மையத்தின்படி, கத்ம் அல் ஷக்லா பகுதியில் அதிக மழைப் பதிவாகியுள்ளது. இருபத்து நான்கு மணி நேரத்தில் அல் ஐனில் 254.8 mm (10.03 அங்) மழைப் பெய்துள்ளது.[19] அமீரகத்தின் ஏழுப்பகுதிகளிலும் பரவலாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.[20] வெள்ளத்திற்கு முன்னதாக, ஒரு மதிப்பிடப்பட்ட மழை 40 mm (1.6 அங்), வரை 100 mm (3.9 அங்) ஐக்கிய அரபு அமீரகத்தின் சில பகுதிகளில் மதிப்பிடப்பட்டது.[21]
ரஃஸ் அல் கைமா நகரம் உள்ள ஓர் ஆற்றுப் பள்ளத்தாக்கில் வெள்ளத்தில் 70 வயதான அமீரக மூத்தோர் ஒருவரின் வாகம் அடித்துச் செல்லப்பட்டதில் அவர் இறந்தார்.[22] மூன்று பிலிப்பீன்சு தொழிலாளர்களும் இந்த வெள்ளத்தில் இறந்தனர். வெள்ளத்தில் சிக்கிய வாகனத்திற்குள் இருவரும் மூன்றாவது நபர் வெள்ளத்தால் ஏற்பட்ட வாகன விபத்தினால் உயிர் இழந்தார்.[23] ரஃஸ் அல் கைமா மற்றும் அல் ஐனில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் குடியிருப்பாளர்கள் வீட்டிலேயே இருக்கவும், முற்றிலும் அவசியமானாலன்றி வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்கவும் எச்சரிக்கப்பட்டனர்.[20] மின் தடை காரணமாக இணையத் தொடர்பும் துண்டிக்கப்பட்டது.[24] நாடு முழுவதும், பள்ளிகள் மற்றும் தனியார்த் துறையினர் வாரத்தின் எஞ்சிய நாட்களில் (திங்கள் தவிர) வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.[25][20]
துபை மெட்ரோ சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இதனால் சுமார் 200 பயணிகள் பல நிலையங்களில் சிக்கித் தவித்தனர்.[26] துபாய்-அபுதாபி, துபாய்-சார்ஜா மற்றும் துபாய்-அஜ்மான் வழித்தடங்களில் நகரங்களுக்கு இடையான பேருந்து சேவையும் நிறுத்தப்பட்டது.[27] துபாய் பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் இரண்டு நாள் காலப்பகுதியில் மொத்தம் 1,244 வானூர்தி பயணங்கள் இரத்து செய்யப்பட்டும், 41 வானூர்திகள் திசைதிருப்பப்பட்டன.[28] துபாயிலிருந்து ஏப்ரல் 16 அன்று புறப்படத் திட்டமிடப்பட்ட அனைத்து பிளைதுபாய் வானூர்திகளும் இரத்து செய்யப்பட்டன.[20][29] துபாய் வானூர்தி நிலையத்தில், மொத்தம் 6.45 அங் (164 mm) அங்குலம் (164 மிமீ) மழை பெய்தது.[30]
அல் ஐனில் விளையாடவிருந்த அமீர்க அல் ஐன் மற்றும் சவுதி அல் கிலால் கால்பந்து குழுக்களுக்கு இடையிலான ஏஎப்சி ஆசிய வாகையாளர் தொடர் அரையிறுதி கால்பந்து போட்டி வெள்ளம் காரணமாக ஒரு நாள் ஒத்திவைக்கப்பட்டது.[31]
ஏப்ரல் 15 மற்றும் 16ஆம் தேதிகளில் பலத்த மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்தது, இதன் விளைவாகப் பரவலான வெள்ளம் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் சாலைகளில் விடப்பட்டன.[32] பகுரைன் வானிலை ஆய்வு மையத்தின் கூற்றுப்படி, 48 மணி நேரத்தில் சராசரியாக 67.6 mm (2.66 அங்) மிமீ மழைப் பதிவாகியுள்ளது. இது பகுரைன் வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட இரண்டாவது மிக அதிக மழைப்பொழிவு ஆகும்.[33] பகுரைன் உள்துறை அமைச்சகம் குடியிருப்பாளர்களை வீட்டிலேயே இருக்குமாறு பொதுப் பாதுகாப்பு எச்சரிக்கையை வெளியிட்டது.[34] வெள்ளத்தின் விளைவாகப் பள்ளிகள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களை மூடுவதாகக் கல்வி அமைச்சகம் அறிவித்தது. காற்றின் வேகம் மணிக்கு 70 கிமீ/மணி இருந்ததாக மதிப்பிடப்பட்டது.[35] மழை காரணமாக சிட்ரா நகரில் ஒரு பல்பொருள் அங்காடியின் கூரை இடிந்து விழுந்தது.[36]
கத்தார்
பலத்த மழை மற்றும் பலத்த காற்று பெரும்பாலும் மதீனத் ஆஷ் ஷமல் மற்றும் அர்-ரூயஸ் நகரங்களை மையமாகக் கொண்டு நாட்டின் வடக்குப் பகுதிகளில் மட்டுமே இருந்தது. தோகாவில் பரவலாக மழை பதிவாகியுள்ளது.[37] மோசமான வானிலை காரணமாகப் பள்ளிகள் மற்றும் பொது அலுவலகங்கள் மூடப்பட்டன. இன்றைய தினம் சேவைகள் அனைத்தும் இணையவழி மாற்றப்பட்டன.[38][37]
ஈரான்
தென்கிழக்கு ஈரானில் பலத்த மழை மற்றும் திடீர் வெள்ளம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீசுத்தான் பலுச்சிசுத்தான், கோர்மோசுகான் மற்றும் கெர்மான் மாகாணங்கள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. கெர்மான் மாநிலத்தில் 3 பேர் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.[39]
சவுதி அரேபியா
கிழக்கு மாகாணத்தில் பலத்த மழைப் பதிவாகியுள்ளது .[40] பரவலான வெள்ளம் மாகாணத்தை, குறிப்பாகத் தலைநகர் தம்மத்தைப் பாதித்தது. இதன் விளைவாகச் சுரங்கப்பாதை சாலை மூடப்பட்டது. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன.[41]
குவைத்து
குவைத்தின் வானிலை ஆய்வு நிறுவனம் ஏப்ரல் 16ஆம் தேதி அதிக மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று எச்சரித்தது இருந்தது.[34]
யெமன்
யெமனில் பெய்த தீவிர மழை மற்றும் திடீர் வெள்ளம் காரணமாக கார்த்ராமாகுட்டில் ஏப்ரல் 17 அன்று, ஒரு மரணமும் உடமைகளுக்குப் பரவலான சேதமும் ஏற்பட்டது. துறைமுகத்திற்கு அருகில் உள்ள மலைகளில் பெய்த பலத்த மழை காரணமாக முகல்லாவில் நிலச்சரிவு ஏற்படக் காரணமாக அமைந்தது.[42]
நடவடிக்கைகள்
ஏப்ரல் 17 அன்று, பட்டத்து இளவரசரும் பகுரைனின் பிரதமருமான சல்மான் பின் ஹமாத் அல் கலீஃபா குடியிருப்பாளர்களுக்கு மழை தொடர்பான சேதங்களை மதிப்பீடு செய்து இழப்பீடு வழங்குவதற்கான திட்டங்களை அறிவித்தார்.[43] கனமழையை எதிர்கொள்ள, வெள்ளத்தில் மூழ்கிய தெருக்களிலிருந்து மழைநீரை அகற்றி அல்-லூசி ஏரியில் செலுத்துவது உள்ளிட்ட வெள்ள நிவாரண முயற்சிகளை ஒருங்கிணைக்க, பணிகள் அமைச்சகம் மற்றும் பகுரைனின் நான்கு நகராட்சி சபைகளுக்கும் இடையே ஒரு நாடு தழுவிய அவசரக் கூட்டுப் பணிக்குழு அமைக்கப்பட்டது.[32]
ஓமன் காவல்துறை 152 நடவடிக்கைகளை மேற்கொண்டது. நாடு முழுவதும் வெள்ளத்தில் சிக்கித் தவித்த 1,630 நபர்களை மீட்டது.[44]
இரங்கல்
இசுலாமிய ஒத்துழைப்பு அமைப்பின் பொதுச்செயலாளர் கிசைன் பிராகிம் தாகா வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரங்கல் தெரிவித்தார்.[45]