இளந்தமிழர் இலக்கியப் பட்டறை நிறைவு நாள் நிகழ்வில் தமிழ் வளர்ச்சி, இந்து சமயம் அறநிலையங்கள், செய்தி மக்கள் தொடர்புத்துறைச் செயலாளர் முனைவர். மூ. இராஜாரம் பேசிய போது எடுத்த படம். படத்தில் திருச்சிராப்பள்ளி கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் மனோகரன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் என். ஆர். சிவபதி, மணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர், தமிழ் வளர்ச்சி இயக்குநர் முனைவர் கா. மு. சேகர் ஆகியோர் உள்ளனர்.
இளந்தமிழர் இலக்கியப் பட்டறை என்பது தமிழ்நாடு அரசின்தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஆண்டு தோறும் இளம் படைப்பாளர்களுக்கு அவர்களுடைய படைப்பாற்றல் திறனை அதிகரிக்கும் நோக்கத்துடன் ஒரு வார காலத்திற்கு அளிக்கும் ஒரு பயிற்சித் திட்டமாகும். இத்திட்டத்திற்கு தமிழ் வளர்ச்சித் துறை நடத்திய பேச்சு, கவிதை, கட்டுரைப் போட்டிகளில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். 2012 ஆம் ஆண்டில் கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் பயிற்சி அளிக்கப்பட்டது. 2013 ஆம் ஆண்டில் இத்திட்டம் பள்ளி மாணவர்களுக்கும் சேர்த்து விரிவாக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஆண்டொன்றுக்கு ரூபாய் பத்து இலட்சம் செலவிடுகிறது. சென்னை, வேலூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் சுழற்சி முறையில் துறை சார்ந்த வல்லுநர்களை அழைத்துப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
முதல் பயிற்சிப் பட்டறை
2012 ஆம் ஆண்டில் முதல் பயிற்சிப் பட்டறை திருச்சிராப்பள்ளியில் திருவரங்கம் எனுமிடத்தில் 22-09-2012 முதல் 28-09-2012 வரை நடத்தப் பெற்றது. இந்த பட்டறையில் தமிழ்நாட்டிலுள்ள 32 மாவட்டங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 106 மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். ஏழு நாட்கள் நடைபெற்ற இந்நிகழ்வில் 42 வகையான தலைப்புகளில் கீழ் அத்துறையின் சிறந்த வல்லுநர்களைக் கொண்டு பயிற்சியளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் தினமும் காலையில் யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. மாலையில் கலை மற்றும் பண்பாட்டுத் துறையின் சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.இப்பயிற்சிக்கு தமிழ்நாடு அரசு ரூபாய் பத்து இலட்சம் செலவிட்டது.
முதல் பட்டறையின் படத் தொகுப்பு
நிறைவுநாள் நிகழ்வில் மாணவி ஒருவரின் உரை
பட்டறைக்குத் தேர்வு செய்யப் பெற்ற மாணவர்களின் ஒரு பகுதி
பட்டறைக்குத் தேர்வு செய்யப் பெற்ற மாணவியர்களின் ஒரு பகுதி
திருவள்ளுவர் எழுதிய தமிழ் எனும் தலைப்பில் தமிழறிஞர் தி.து. சுந்தரம் என்பவரால் வைக்கப் பெற்றிருந்த பதாகை.
இரண்டாம் பயிற்சிப் பட்டறை
2013 ஆம் ஆண்டு இளந்தமிழர் இலக்கியப் பட்டறையை பள்ளிக்கல்வி, விளையாட்டுகள், இளைஞர் நலன் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் வைகைச் செல்வன் தொடக்கி வைத்துச் சிறப்புரையாற்றுகிறார்
2013 ஆம் ஆண்டில் இரண்டாம் பயிற்சிப் பட்டறை சென்னை, அடையாறு, இந்திராநகரிலுள்ள இளைஞர் விடுதியில் 01-08-2013 முதல் 07-08-2013 வரை நடத்தப் பெறுகிறது. இந்த பட்டறையில் தமிழ்நாட்டிலுள்ள 32 மாவட்டங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட பள்ளி மாணவ மாணவியர் 100 பேர்களும், கல்லூரி மாணவ மாணவியர்கள் 100 பேர்களும் என 200 பேர் கலந்து கொண்டனர். ஏழு நாட்கள் நடைபெற்ற இந்நிகழ்வில் 34 வகையான தலைப்புகளில் கீழ் அத்துறையின் சிறந்த வல்லுநர்களைக் கொண்டு பயிற்சியளிக்கப்பட்டது.[1] இப்பயிற்சிக்கு தமிழ்நாடு அரசு ரூபாய் பத்து இலட்சம் செலவிட்டது.