ஈராக்கிய குர்திஸ்தான்
ஈராக்கிய குர்திஸ்தான் (Iraqi Kurdistan) அல்லது குர்திஸ்தான் பிராந்தியம் (Kurdistan Region, குர்து: ههرێمی کوردستان, ஹெரேமி குர்திஸ்தான்), என்பது ஈராக்கின் ஒரு தன்னாட்சிப் பகுதியாகும்.[4] இதன் எல்லைகளாக கிழக்கே ஈரான், வடக்கே துருக்கி, மேற்கே சிரியா, தெற்கே ஈராக்கின் ஏனைய பகுதிகள் ஆகியன அமைந்துள்ளன. இப்பிராந்தியத்தின் தலைநகர் அர்பில். குர்திஸ்தான் பிராந்திய அரசு இதனை அதிகாரபூர்வமாக நிருவகித்து வருகிறது. பல ஆண்டுகள் போரின் பின்னர் 1970 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் குருதிய எதிர்க்கட்சிகளுக்கும் ஈராக்கிய அரசுக்கும் இடையில் ஏற்பட்ட உடன்பாட்டை அடுத்து குர்திஸ்தான் பிராந்தியம் உருவாக்கப்பட்டது. 1980களில் இடம்பெற்ற ஈரான் – ஈராக் போர், ஈராக்கிய இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட அன்ஃபால் இனப்படுகொலைகள் போன்றவை இப்பிராந்திய மக்களையும் இதன் இயற்கையையும் மிகவும் பாதித்தது. சதாம் உசேனுக்கு எதிரான 1991 மக்கள் எழுச்சி நடத்ததை அடுத்து பெரும்பாலான குருதியர்கள் அண்டை நாடுகளான ஈரான், மற்றும் துருக்கியில் புகலிடத்திற்காக இடம்பெயர்ந்தனர். 1991 ஆம் ஆண்டில் இடம்பெற்ற வளைகுடாப் போரை அடுத்து குர்திய அகதிகள் மீண்டும் நாட்டுக்குள் திரும்பி வருவதற்காக வடக்கே வான்பரப்பிற்குத் தடை விதிக்கப்பட்டது. குர்தியர்கள் அரசுப் படையினருக்கு எதிராகத் தொடர்ந்து போரிட்டு வந்ததால், 1991 அக்டோபரில் ஈராக்கிய குர்திஸ்தான் என்று அப்பிராந்தியத்தில் நிகழ்வுநிலை அரசு அமைக்க வழிவகுத்தது. ஆனாலும் குருதியர்களின் முக்கிய இரு அரசியல் கட்சிகளும் தனிநாட்டை அறிவிக்கவில்லை, மாறாக ஈராக்கின் ஒரு பகுதியாகவே அது பார்க்கப்பட்டது. ஈராக் மீதான ஆக்கிரமிப்பு, 2003, மற்றும் அதன் பின்னரான அரசியல் நிகழ்வுகளை அடுத்து 2005 ஆம் ஆண்டில் ஈராக்கில் புதிய அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் படி ஈராக்கிய குர்திஸ்தான் ஈராக்கின் நடுவண் ஆட்சிக்குட்பட்ட ஒரு தன்னாட்சி அமைப்புள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டது. அரபு மொழியும், குருதீசிய மொழியும் ஈராக்கின் இணைந்த ஆட்சி மொழிகளாக அறிவிக்கப்பட்டன. ஈராக்கிய குர்திஸ்தானின் பிராந்திய நாடாளுமன்றத்தில் 111 உறுப்பினர்கள் உள்ளனர்.[5]
இவற்றையும் பார்க்கவும்மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia