செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்
Mottoநுண்பொருள் காண்பது அறிவு
Established2006
Chairmanமு. க. ஸ்டாலின்
Locationபெரும்பாக்கம், சென்னை, தமிழ் நாடு,  இந்தியா
Addressசெம்மொழிச் சாலை, பெரும்பாக்கம், சென்னை - 600100
Websitecict.in

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (அ) செம்மொழித் தமிழ் உயராய்வு மையம் (Central Institute of Classical Tamil) என்பது தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக இந்தியக் கல்வி அமைச்சகத்தின் கீழ் அமைக்கப்பட்ட ஒரு ஆய்வு நிறுவனமாகும். இந்திய அரசால் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட பின்பு, 2006, மார்ச்சு முதல் 2008, மே 18-தேதி வரை மைசூரிலுள்ள இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தில் செம்மொழித் தமிழ் உயராய்வு மையம் (Centre of Excellence for Classical Tamil - CECT) என்னும் பெயரில் செயற்பட்டுவந்தது. [1]அதன் பின்னர், இந்நிறுவனம் 2008 மே 19-ஆம் தேதி முதல் சென்னையில் இயங்கிவருகிறது.[2][3] இந்த மையத்தின் வழியாகத் தமிழ் மொழி வளர்ச்சிக்கான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பொ.ஊ. 600-இக்கு முந்தைய காலத்தைச் செவ்வியல் காலமாகக் கொண்டு பண்டைத்தமிழ்ச் சமூகம் பற்றிய ஆய்வை நிகழ்த்தும் வகையில் இது நிறுவப்பட்டது. பண்டைத் தமிழ்ச் சமூகத்தின் அனைத்துக் கூறுகளையும் வெளிப்படுத்தும் வகையில் ஆவணப்படுத்துவதையும் பாதுகாப்பதையும் இந்நிறுவனம் தன் நோக்கமாகக் கொண்டுள்ளது.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் ஜனவரி 21 2009 அன்று தமிழ்நாடு சங்கப் பதிவுச் சட்டம் உட்பிரிவு 10-இன் கீழ் (1975 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டம் 27) பதிவு செய்யப்பட்டது. ஆட்சிக்குழு, கல்விக்குழு, நிதிக்குழு, உயர்நிலைக்குழு, தலைவர், துணைத்தலைவர், செயலர், அலுவல்சார் உறுப்பினர்களைக் கொண்ட தன்னாட்சி நிறுவனமாகும்.

உயர்நிலைக் குழு

கல்வி அமைச்சக நிறுவனத்தின் திட்டங்களையும் செயல்பாடுகளையும் நடைமுறைப்படுத்த ஐம்பெருங்குழு, எண்பேராயம் அடங்கிய உயர்நிலைக் குழுவை அமைத்துள்ளது.

தலைவர்

தமிழக முதலமைச்சராக இருப்பவர்களே செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தலைவராகவும் இருக்கின்றனர்.

செயலர்

  • இயக்குநர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை.

அலுவல் சார் உறுப்பினர்கள்

  • நிதி ஆலோசகர், கல்வி அமைச்சகம், இந்திய அரசு, புதுதில்லி.
  • இணைச்செயலாளர் (மொ),கல்வி அமைச்சகம், இந்திய அரசு, புதுதில்லி.

திட்டங்களும் செயற்பாடுகளும்

தமிழின் தொன்மை, தனித்தன்மை, தமிழர்களின் நாகரீகம், பண்பாடு ஆகியவற்றின் சிறப்புகளைக் கவனத்தில் கொண்டு பல திட்டங்களைத் தீட்டி இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

  • பல்துறை அறிஞர்களை ஒருங்கிணைத்துத் தமிழின் தொன்மை குறித்து ஆய்வு செய்தல்.
  • தமிழ், பிற திராவிட மொழிகள் மீது ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து விரிவாக ஆய்தல்.
  • பண்டைத் தமிழ் இலக்கணம், இலக்கியம், தொல்லியல் சார்ந்த செய்திகளைக் குறும்படங்களாக உருவாக்குதல்
  • இணையவழிச் செம்மொழித் தமிழ் கற்பித்தல்
  • திராவிட மொழிகளின் வரலாற்று ஒப்பாய்வும் தமிழ் வழக்காறுகள் குறித்த ஆய்வும் மேற்கொள்ளல்.
  • உலக அளவில் ஆய்வுக்களங்களை உருவாக்கிப் பன்னாட்டு அறிஞர்களை ஆய்வில் ஈடுபடுத்தல்
  • பழந்தமிழ் நூற்களை வெளியிடவும் அவற்றை முறையே ஆங்கிலத்திலும் பிற இந்திய மொழிகளிலும் மொழிபெயர்த்து வெளியிடவும் நிதி வழங்குதல்.
  • தமிழாய்வில் நிலைத்த பணிபுரியும் நிறுவனங்களுக்கு ஆய்வுத் திட்டங்களை வழங்குதல்.
  • செம்மொழி தொடர்பான முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்கும் முனைவர் பட்ட மேலாய்வாளர்களுக்கும் உதவித்தொகை வழங்குதல்
  • செம்மொழித் தமிழாய்வில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு நல்கியோருக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பு செய்தல்.
  • 41 பழந்தமிழ் நூல்களின் செம்பதிப்புகளை வெளியிடுதல்
  • அந்த நூல்களை முக்கிய ஐரோப்பிய, இந்திய மொழிகளில் மொழிபெயர்த்தல்

-இவை போன்று இன்னும் பல செம்மொழித் தமிழ் வளர்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

செவ்வியல் நூல்கள்

செவ்வியல் நூல்கள் என வரையறுக்கப்பட்டவை அனைத்தும் பொ.ஊ. 6-ஆம் நூற்றாண்டிற்கு முந்தியவை. தனித்தன்மை கொண்டவை. 41 செவ்வியல் நூல்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.

நற்றிணை
குறுந்தொகை
ஐங்குறுநூறு
பதிற்றுப்பத்து
பரிபாடல்
கலித்தொகை
அகநானூறு
புறநானூறு
திருமுருகாற்றுப்படை
பொருநராற்றுப்படை
சிறுபாணாற்றுப்படை
பெரும்பாணாற்றுப்படை
முல்லைப்பாட்டு
மதுரைக்காஞ்சி
நெடுநல்வாடை
குறிஞ்சிப்பாட்டு
பட்டினப்பாலை
மலைபடுகடாம்
நாலடியார்
நான்மணிக்கடிகை
இன்னா நாற்பது
இனியவை நாற்பது
கார் நாற்பது
களவழி நாற்பது
ஐந்திணை ஐம்பது
ஐந்திணை எழுபது
திணைமொழி ஐம்பது
திணைமாலை நூற்றைம்பது
பழமொழி நானூறு
சிறுபஞ்சமூலம்
திருக்குறள்
திரிகடுகம்
ஆசாரக்கோவை
முதுமொழிக்காஞ்சி
ஏலாதி
கைந்நிலை

பத்து முதன்மைத் திட்டப் பணிகள்

செம்மொழித் தமிழின் தொன்மையையும் தனித்தன்மையையும் புலப்படுத்தும் பத்து முதன்மைத் திட்டப்பணிகள் வகுக்கப்பட்டுள்ளன.

பழந்தமிழ் நூல்களின் செம்பதிப்பு

தொன்மைக்காலம் முதல் பொ.ஊ. 6-ஆம் நூற்றாண்டு வரையிலான 41 நூல்களையும், மரபுவழி மூலபாடச் செம்பதிப்புகளாகச் சுவடிகள், பழம்பதிப்புகள், உரை மேற்கோள்கள் கொண்டு ஒப்பிட்டு உருவாக்குதல்.

பழந்தமிழ் நூல்களை மொழிபெயர்த்தல்

41 நூல்களுக்கும் மொழிபெயர்ப்புகள் தொகுக்கப்பட்டு வெளியிடப்படும். புதிதாக இவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் பணிகளும் மேற்கொள்ளப் பெறும். 22 டிசம்பர் 2021 அன்று புது தில்லியில் தொல்காப்பியம் நூலின் இந்தி மொழிபெயர்ப்பும் மற்றும் தொல்காப்பியம் மற்றும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களை கன்னட மொழியில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டது.[4]

வரலாற்று அடிப்படையில் தமிழ் இலக்கணம்

தொன்மைக்காலம் தொடங்கி இக்காலம் வரையிலான தமிழ் இலக்கண ஆய்வு மேற்கொள்ளப்படும். இதற்கென இலக்கியங்கள், உரைநடைகள், கல்வெட்டுகள் ஆகியவற்றின் மொழிநடை கருத்தில் கொள்ளப்படும்.

தமிழின் தொன்மை - ஒரு பன்முக ஆய்வு

பண்டைத் தமிழரின் சமூகம், பண்பாடு, மொழி ஆகியவற்றின் இயல்புகளை வெளிக்கொணரும் வகையில் தமிழின் தொன்மை பற்றிய பன்முக ஆய்வு நிகழ்த்தப் பெறும்.

தமிழ் வழக்காறுகள் ஆய்வுத் திட்டம்

வட்டாரம், தொழில் சார்ந்த தமிழ் வழக்காறுகள் தொகுக்கப்படும். அகராதிகளில் பதிவு செய்யப்படாத இலட்சத்திற்கும் மேற்பட்ட வழக்குச் சொற்கள் திரட்டப்படும்.

தமிழும் பிற மொழிகளும்

தமிழை இந்திய மொழிகளோடும் பிற உலக மொழிகளோடும் ஒப்பிட்டு ஆராய்தல்.

பழந்தமிழ் ஆய்விற்கான மின் நூலகம்

அரிய சுவடிகள், கையெழுத்துச் சுவடிகள், நூல்கள் ஆகியவற்றைத் தேடித் தொகுத்து மின்பதிப்பு ஆக்குவதோடு தமிழ் ஆய்வாளர் ஆய்வுத் தரவுகளை எளிதில் பெற்றுக் கொள்ள மின் நூலகம் வடிவமைக்கப்படுகிறது.

இணையவழிச் செம்மொழியைக் கற்பித்தல்

உலகெங்கும் உள்ளோர் பழந்தமிழ் நூல்களை எளிய முறையில் இணைய வழியே கற்றுப் பயன்பெறப் பாடத்திட்டம் வகுக்கப் பெற்றுள்ளது.

பழந்தமிழ் நூல்களுக்கான தரவகம்

41 பழந்தமிழ் நூல்களும் அவற்றிற்கான எழுத்துப் பெயர்ப்பு, மொழிபெயர்ப்பு, உரைகள், அருஞ்சொற்பொருட்கள், இலக்கணக் குறிப்புகள் முதலியனவும் கணினியில் உள்ளீடு செய்யப்படும். இந்நூற்கலைப் பற்றிய அனைத்துக் குறிப்புகளையும் அறிய தொழில்நுட்ப ஏந்துகள் உருவாக்கப்படும்.

பழந்தமிழ்க் குறுங்காட்சிப் படங்கள்

தமிழின் அரிய வரலாற்றுக் கருவூலங்களான இலக்கணம், இலக்கியம், கல்வெட்டு, நாணயம், கலை, பண்பாடு, அயலகத் தமிழ் உறவு குறித்த காட்சிக் குறும்படங்கள் உருவாக்கப்படுகின்றன.

நூலகம்

செம்மொழி நூலகத்தில் 40, 000 அரிய நூல்களும், பழந்தமிழ் ஆய்வுக்கு உதவும் மின்படியாக்கப்பட்ட நூல்களும், ஓலைச்சுவடிகளும், இதழ்களும் தொகுத்து வைக்கப்பட்டுள்ளன.

உதவித் தொகைகள்

முனைவர் பட்ட ஆய்வு உதவித் தொகை

செம்மொழித் தமிழாய்வில் ஈடுபட்டுள்ள இளம் ஆய்வாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் இந்நிறுவனம் முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்கு மாத உதவித் தொகை ₹12,000/-(பன்னிரண்டாயிரம்) இரண்டாண்டுகளுக்கு வழங்குகிறது. ஆய்வு தொடர்பான பிற செலவுகளுக்கு ஆண்டுக்கு ₹ 12,000/-(பன்னிரண்டு ஆயிரம்) வழங்குகிறது.

முனைவர் பட்ட மேலாய்வு உதவித் தொகை

முனைவர் பட்டம் பெற்ற பின் பழந்தமிழாய்வில் ஈடுபட விரும்பும் முனைவர் பட்ட மேலாய்வாளர்களுக்கு மாத உதவித் தொகை ₹18 ஆயிரத்தை வழங்குகிறது. ஒவ்வோராண்டும் பிற செலவினங்களுக்காக ₹30 ஆயிரம் வழங்குகிறது.

குறுகிய காலத் திட்டப் பணிகள்

பழந்தமிழ்ச் சமுதாயத்தின் தொன்மையையும் தனித்தன்மையையும் தமிழ் மொழியின் செவ்வியல் தன்மையையும் வெளிப்படுத்தும் வகையில் ஆய்வு மேற்கொள்ளும் ஆய்வறிஞர்களுக்கும், ஆய்வு நிறுவனங்களுக்கும் நிறுவனம் நிதியுதவி அளிக்கிறது.

செம்மொழித் தமிழ் விருதுகள்

இந்த மையத்தின் வழியாகச் செம்மொழித் தமிழில் சிறப்பாகப் பணியாற்றியவர்களுக்குத் தொல்காப்பியர் விருது, குறள் பீடம் விருது, இளம் ஆய்வாளர் விருது போன்றவை ஒவ்வொரு வருடமும் வழங்கப்பட்டு வருகின்றன.[5]

தொல்காப்பியர் விருது

தமிழியல் ஆய்வில் ஈடுபட்டு ஒப்பிலாப் பங்களிப்பை வழங்கியுள்ள இந்தியத் தமிழறிஞருக்கு ஒவ்வோராண்டும் சான்றிதழும் நினைவுப் பரிசும் ₹5 இலட்சம் பரிசுத் தொகையும் அடங்கிய “தொல்காப்பியர் விருது” வழங்கப்படுகிறது. இந்த விருதுக்குச் சான்றிதழ், நினைவுப்பரிசு மற்றும் ஐந்து இலட்சம் ரூபாய் பணம் ஆகியவை ஒரு முறை இந்தியர் ஒருவருக்கு அளிக்கப்படும். இந்த விருது ஆண்டிற்கு ஒரு முறை அளிக்கப்படுகிறது.

குறள் பீடம் விருது

தமிழியல் ஆய்வில் ஈடுபட்டு ஒப்பிலாப் பங்களிப்பை வழங்கியுள்ள இந்தியத் தமிழறிஞர் ஒருவருக்கும், பிற நாட்டுத் தமிழறிஞர் ஒருவருக்கும் ஒவ்வோராண்டும் சான்றிதழும் நினைவுப் பரிசும் ₹5 இலட்சம் பரிசுத் தொகையும் அடங்கிய “குறள்பீடம் விருது”கள் வழங்கப்படுகிறது. இந்த விருதுக்குச் சான்றிதழ், நினைவுப்பரிசு மற்றும் ஐந்து இலட்சம் ரூபாய் பணம் ஆகியவை ஒரு முறை அளிக்கப்படும். இந்த விருது ஆண்டிற்கு இருவருக்கு அளிக்கப்படும்.

இளம் ஆய்வாளர் விருது

தமிழியல் ஆய்வில் ஈடுபட்டுள்ள 30 - 40 அகவைக்குட்பட்ட இளம் அறிஞர்களை ஊக்குவிக்கும் வகையில் மதிப்புச் சான்றிதழும் நினைவுப் பரிசும் ₹1 இலட்சம் பரிசுத் தொகையும் அடங்கிய “இளம் அறிஞருக்கான விருது”கள் ஒவ்வோராண்டும் ஐந்து நபர்களுக்கு வழங்கப்படுகிறது.

கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது

முன்னாள் தமிழக முதலமைச்சரான மு. கருணாநிதி, அவருடைய சொந்த நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாய் வழங்கி “கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் அறக்கட்டளை” ஒன்றை நிறுவனத்தில் நிறுவியுள்ளார். அறக்கட்டளை மூலம் ஆண்டுதோறும் தகுதி வாய்ந்த தமிழறிஞருக்கு இந்தியாவிலேயே மிக மதிப்புயர்ந்த ₹10 இலட்சம் பரிசுத் தொகையும், பாராட்டிதழும், ஐம்பொன்னாலான நினைவுப் பரிசும் அடங்கிய விருது அளிக்கப்படுகிறது.[6]

வெளியீடுகள்

  • நூல்கள் வெளியிடப்படுகின்றன.
  • ஒலிப்பேழைகள் வெளியிடப்படுகின்றன. தொல்காப்பியம் முற்றோதல், பத்துப்பாட்டு முற்றோதல், மரபிசையில் சங்கப்பாடல்கள் எனும் தலைப்பில் ஒலிப்பேழைகள் வெளியிடப்பட்டுள்ளன.

ஆதாரம்

  • செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வெளியிட்ட துண்டுப் பிரதி.

மேற்கோள்கள்

  1. "CECT". Archived from the original on 2007-01-03. Retrieved 2021-10-21. (ஆங்கில மொழியில்)
  2. "வரவேற்கிறோம்". செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம். Retrieved 10 ஆகத்து 2018.
  3. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குநர் நியமனம். தினமணி நாளிதழ். 06 ஜுன் 2020. 2008-ஆம் ஆண்டு மே 19-ஆம் தேதி முதல் சென்னை தரமணியில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது {{cite book}}: Check date values in: |year= (help)CS1 maint: year (link)
  4. தொல்காப்பியம் & பதினெண் கீழ்க்கணக்கு நூல்களை மொழிபெயர்த்து இந்தி, கன்னடத்தில் மொழிகளில் வெளியிட்ட செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்
  5. https://cict.in/cictinneww/mugappu/kudiarasu-thalaivar-viruthukal/
  6. https://cict.in/cictinneww/mugappu/kalaigar-viruthukal/

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya