அறிவியல் என்பது பொதுவாக அறிவின் அடிப்படையில் ஏதொன்றையும் முறைப்படி அணுகி யாரும் சரிபார்த்து உறுதி செய்யும் வண்ணம் உண்மைகளைக் கண்டு நிறுவப்பெறும் அறிவுத்துறையாகும். இது பெரும்பாலும் இரு பெரும் பிரிவுகளாக வகுக்கப்படுகிறது. இயற்கையில் உள்ள புறபொருட்களின் அமைப்பு மற்றும் இயக்கங்கள் பற்றியதை, இயற்கைப்பொருள் அறிவியல் என்றும், மக்கள் குழுமங்கள், வாழ்க்கை, அரசியல், மொழியியல் முதலியன குமுக அறிவியல் அல்லது சமூக அறிவியல் என்றும் பிரிக்கப்படுகின்றது. அறிவியலை அடிப்படைத் தூய அல்லது தனி அறிவியல் என்றும் பயன்பாட்டு அல்லது பயன்முக அறிவியல் என்றும் பிரிப்பதும் உண்டு. கணிதவியலை இயற்கைப்பொருள் அறிவியலில் ஒரு உட்துறையாகக் கருதுவோரும் உண்டு, அதனைத் தனியானதொரு அடிப்படை அறிவியல் துறையாகக் கொள்வாரும் உண்டு.
திண்மம் என்பது இயற்பியலில்பொருள்களின் இயல்பான நான்குநிலைகளில் ஒன்றாகும். திண்மப்பொருள் என்பது திடப்பொருள் என்றும் அழைக்கப்படும். திண்மப்பொருள் தனக்கென ஓருருவம் கொண்டது. இப்பொருளில் உள்ள அணுக்கள் ஒன்றுக்கொன்று நிலையான தொடர்பு கொண்டுள்ளன. சூழலின் வெப்பநிலையில் அணுக்கள் அதிர்ந்து கொண்டு இருந்தாலும், அணுக்கள் தங்களுக்கிடையே இருக்கும் தொடர்புகள் மாறுவதில்லை. ஒரு திண்மத்தில் உள்ள அணுக்களுக்கு இடையே உள்ள தொலைவும் ஏறத்தாழ அணுவின் விட்டத்திற்கு ஒப்பிடக்கூடியதாக (ஒப்பருகாக) இருக்கும்.ஒரு திண்மத்தில் உள்ள அணுக்கள் எம்முறையில் அமைந்திருக்கின்றன என்பதைப் பொருத்து திண்மங்கள் படிகம், பல்படிகத் திண்மம்,சீருறாத் திண்மம் என பலவாறு பகுக்கப்படுகின்றன.
உயரிய வாயுக்களை ஒரு கண்ணாடிக் குழாயில் அடைத்து அதில் 5 kV மின்னழுத்தத்தில் 20 mA மின்னோட்டத்தை 25 kHz அதிர்வெண்ணில் தரும்போது இதுபோன்ற ஒளிர்தல் நிகழும். இந்நிகழ்வே இந்த வாயுக்கள் பொதுவான குமிழ் விளக்குகளில் பயன்படுத்தப்படக் காரணம் ஆகும். படத்தில் இடமிருந்து வலமாக ஹீலியம், நியான், ஆர்கான், கிரிப்டான், செனான் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
கரோலஸ் லின்னேயஸ் (1707-1778) சுவீடன் நாட்டைச் சேர்ந்த, உயிரினங்களைப் பற்றி ஆய்வு செய்த முன்னோடி அறிவியலாளர். இவர் தாவரவியலாளராகவும், விலங்கியலாளராகவும், மருத்துவராகவும் திகழ்ந்தார். புதிய, தற்கால அறிவியல் வகைப்பாட்டு முறைக்கும், பெயர்முறைக்கும் அடிப்படையை உருவாக்கியவர் இவரே. தற்கால சூழிணக்கவியல் அல்லது சூழிசைவு இயலின் முன்னோடிகளில் ஒருவராக இவர் கருதப்படுகிறார். லின்னேயசு உயிரினங்களை ஒரு படிமுறை அமைப்பில் வகுத்தார். திணை, வகுப்பு, வரிசை, பேரினம், இனம் என படிநிலைகள் இவரது வகைப்பாட்டில் அமைந்திருந்தன. திணைகள் மேலும் தாவரங்கள்), விலங்குகள் என இரண்டாகப் பகுக்கப்பட்டிருந்தன. இத்திணைகள் ஒவ்வொன்றும் வகுப்புகளாகவும், வகுப்புகள் வரிசைகளாகவும், வரிசைகள் பேரினங்களாகவும், பேரினங்கள் இனங்களாகவும் வகுக்கப்பட்டன.