2020 இந்திய விவசாயிகளின் போராட்டம் (2020 Indian farmers' protest ) என்பது விவசாய அமைப்புகளால் 2020 ஆம் ஆண்டில் இந்திய நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டமாகும்.[2]
பின்னணி
2020 ஆம் ஆண்டில் மத்திய காலத்தில், இந்திய அரசு விவசாய விளைபொருள்களுக்கான விற்பனை, பதுக்கல், விவசாய சந்தைப்படுத்தல் மற்றும் ஒப்பந்த விவசாய சீர்திருத்தங்களை கையாளுதல் தொடர்பாக மூன்று அவசர சட்டங்களை அமல்படுத்தியது.[3]
அதில் ஒரு மசோதா மக்களவையில் 2020 செப்டம்பர் 15 அன்று நிறைவேறியது, மேலும் 2 மசோதாக்கள் 2020 செப்டம்பர் 18 அன்று நிறைவேற்றப்பட்டது.[4] பின்னர், 2020 செப்டம்பர் 20 அன்று 2 மசோதாக்களையும், மூன்றாவது மசோதாவை செப்டம்பர் 22 அன்றும் மாநிலங்களைவையில் நிறைவேறியது.[5][6]இந்தியக் குடியரசுத் தலைவர் 2020 செப்டம்பர் 28 அன்று தனது ஒப்புதலை வழங்கினார். இதன் மூலம் இவைகள் சட்டமாக்கப்பட்டன.[7]
இந்தச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்ட பின்னர் இந்தியா முழுவதும் பல விவசாயிகள் இந்த சட்ட சீர்திருத்தங்களுக்கு எதிராக போராட்டங்களைத் தொடங்கினர். இந்த பண்ணை சட்டங்களுக்கு எதிராக செப்டம்பர் 25, 2020 அன்று இந்தியா முழுவதும் உள்ள வேளாண் தொழிற்சங்கங்கள் பாரத் பந்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தனர்.[8] மிகவும் பரவலான போராட்டங்கள் பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் நடந்தன [9] ஆனால் உத்தரபிரதேசம், கர்நாடகா,[10]தமிழ்நாடு,[11]ஒடிசா,[12]கேரளா[13] மற்றும் பிற மாநிலங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.[14] இந்த போராட்டங்களினால் ரயில்வே சேவைகள் பஞ்சாபில் ஒரு மாதத்திற்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.[15] விவசாயிகள் சட்டங்களுக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் இருந்து டெல்லிக்கு அணிவகுத்துச் சென்றனர்.[16] இதனால் அரியானா காவல்துறையினர் அவர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீரினை பீய்ச்சி அடித்தனர்[17] .இந்தச் சட்டங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் உடனடியாக நடைபெற வேண்டும் என்று எதிர்ப்பாளர்கள் கோரிக்கை விடுத்தபோதிலும், இது குறித்து விவாதிக்க 2020 டிசம்பர் 3 தேதியை இந்திய மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
போராட்டம் காரணமாக விவசாயிகள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறவேண்டும்.
வேளாண்மை குறித்த சுவாமிநாதன் அறிக்கையை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.[18]
50% டீசல் விலையைக் குறைக்க வேண்டும்.
போராட்டத்தின் விளைவுகள்
தமிழ்நாடு
டெல்லியில் விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் போராட்டங்கள் நடைபெற்றது. மேலும் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு சார்பில் டிசம்பர் 2 அன்று தமிழகம் முழுவதும் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றுவருகிறது.[19]
தேசிய அளவில்
திசம்பர் 1 அன்று சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் சோம்வே சாங்வான் பாஜக அரசுக்குக் கொடுத்த ஆதரவை விலக்கிக்கொண்டார்.[20] பாஜக கூட்டணி கட்சியான ஜனநாயக ஜனதா கட்சிகுறைந்தபட்ச ஆதரவு விலைக்கு இந்த சட்டத்தால் பாதிப்பு வாராது என்பதை எழுத்து மூலம் உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது.[21]
திசம்பர் 4 அன்று மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி வரும் திசம்பர் 8ஆம் தேதி அகில இந்திய அளவில் வேலைநிறுத்தத்துக்கு பாரதிய கிசான் சங்கம் என்ற விவசாய சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. மத்திய அரசு தனது 3 சட்டங்களையும் திரும்ப்பெறும்வரை நாங்கள் பின்வாங்க மாட்டோம்," என்று அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஹன்னன் மொல்லா தெரிவித்தார்.[22]
மத்திய அரசு பேச்சுவார்த்தை
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் தொடர்ந்து 8வது நாளாக விவசாயிகள் போராடி வருகின்றனர். விவசாய பிரதிநிதிகளுடன் மத்திய அரசு பலகட்ட பேச்சுவார்த்தை நடத்திய நிலையிலும் இந்த விவகாரத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.[23]
08 திசம்பர் 2020 அன்று 12வது நாளாக விவசாயிகள் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்தி வரும் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 35 விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார், இது ஐந்தாவது சுற்று பேச்சுவார்த்தையாகும் இருப்பினும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை.[24]
05 சனவரி 2021 அன்று விவசாயிகளுடனான மத்திய அரசின் 7வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் அறிவித்தள்ளனர். பேச்சுவார்த்தையில் 40 விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் மத்திய அரசு சார்பில் வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ரயில்வே, வர்த்தகம் மற்றும் உணவு அமைச்சர் பியூஷ் கோயல், பஞ்சாப் நாடாளுமன்ற உறுப்பினரான வர்த்தகத் துறை இணை அமைச்சர் சோம் பிரகாஷ் ஆகியோர் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.[25]
08 சனவரி 2021 அன்று விவசாயிகளுடனான மத்திய அரசின் 8வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. 7 கட்ட பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாத நிலையில் 8வது கட்ட பேச்சுவார்த்தையில் 40 விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் மத்திய அரசு சார்பில் வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.[26]
15 சனவரி 2021 அன்று விவசாயிகளுடனான மத்திய அரசின் 9வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து 50 நாட்களுக்கும் மேலாக விவசாய அமைப்புகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றன 8 கட்ட பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாத நிலையில் மேலும் முன்னதாக விவசாயிகள் பிரச்னை தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இதுகுறித்து விசாரிக்க 4 பேர் கொண்ட குழுவை அமைத்த நிலையில் 9வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.[27]
20 சனவரி 2021 அன்று விவசாயிகளுடனான மத்திய அரசின் 10வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. வேளாண் சட்டங்களை 18 மாதங்களுக்கு நிறுத்தி வைப்பதாகவும், சுமுக தீர்வு காண ஒரு கூட்டுக்குழுவை அமைப்பதாகவும் ஒரு திட்டத்தை மத்திய அரசு முன்வைத்தது. ஆனால் அதை ஏற்க மறுத்த விவசாயிகள் அடியோடு ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். 10வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.[28]
22 சனவரி 2021 அன்று விவசாயிகளுடனான மத்திய அரசின் 11வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. டெல்லியில் உள்ள விக்யான் பவனில் மத்திய அரசு மற்றும் விவசாயிகள் சங்கங்கள் தரப்பில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் விவசாய அமைப்புகளின் தலைவர்கள் ,மத்திய மந்திரிகள் நரேந்தர் சிங் தோமர்,பியூஸ் கோயல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.[29]
6 மார்ச் 2021 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் தொடர்ந்து விவசாயிகள் போராட்டம் நேற்றுடன் 100-வது நாளை எட்டியது. தலைநகர் டெல்லியின் எல்லைப் பகுதியான திக்ரி, காஜிபூர், சிங்கு எல்லைகளில் டிராக்டர்களை வீடுகளாக மாற்றி தங்கி போராட்டத்தில் இருந்து பின்வாங்காமல் கடும் குளிர், மழை, வெயிலை பொருட்படுத்தாமல் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.[30]
பன்னாட்டு அளவில்
கனடா பிரதமர்ஜஸ்டின் துரூடோ வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தார், மேலும் இந்திய அரசு அமைதியான போராட்டத்தை கையாளும் விதத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.[31]
அமைப்புக்கள்
ஐக்கிய நாடுகள் அவை: அந்தோனியோ குத்தேரசு, பொதுச் செயலாளர், விவசாயிகள் நடத்தும் அமைதியான போராட்ங்களை அனுமதிக்குமாறு இந்திய அரசுக்கு அழைப்பு விடுத்தார், மேலும் அரசாங்கத்தின் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமை அனைவருக்கம் உண்டு என்றும் தெரிவித்தார்.[32]
விருதுகள் திரும்ப கொடுத்தல்
விவசாயிகளின் போராட்டத்திற்கு வழங்கப்படும் அலட்சியத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் பஞ்சாப் முதலமைச்சர்பிரகாஷ் சிங் பாதல் தனக்கு வழங்கப்பட்ட பத்ம விபூசண் விருதினை குடியரசுத் தலைவரிடம் திரும்ப கொடுத்தார்.[33] பஞ்சாப், ஹரியாணாவைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பலர் தாங்கள் பெற்ற பதக்கங்கள், விருதுகளை மத்திய அரசிடம் திருப்பி அளிக்கப் போகிறோம் எனத் தெரிவித்திருந்தனர். 35-இற்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்ற விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் 2020 திசம்பர் 7 அன்று குடியரசுத் தலைவரைச் சந்தித்து விருதுகளை திருப்பி அளிக்கச் சென்றனர். இவர்களில் 1982 ஆம் ஆண்டு அர்ஜுனா விருது பெற்ற கர்தார் சிங், 1987 ஆம் ஆண்டு பத்ம சிறீ விருது பெற்ற குர்மெயின் சிங், 1984 ஆம் ஆண்டு அர்ஜுனா விருது பெற்ற ராஜ்பிர் கவுர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். விருதுகளைத் திருப்பி அளிக்கப்போவதாகச் சென்ற இந்த வீரர்களை குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் செல்லும் முன் காவல்துறையினர் தடுத்து திருப்பி அனுப்பி வைத்தனர்.[34]
அகில இந்திய அளவிலான வேலைநிறுத்தம்
புதிய வேளாண் சட்டங்களை இரத்து செய்யக் கோரி 2020 திசம்பர் 8 அன்று நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு விவசாய அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. போராட்டம் காலை 11 மணிக்கு தொடங்கி பிற்பகல் 3 மணிக்கு நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. போராட்டத்திற்கு 18 கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன.[35]
உழவு இயந்திர படைத்தகை
சனவரி 26, 2021 இல் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் உழவு இயந்திரத்தில் புதுதில்லியில் படைத்தகை செய்தனர். செங்கோட்டையில் அத்துமீறி நுழைந்து அங்கு கொடியேற்றினர்.[36]
படைத்தகைக்குப் பின்னர்
சனவரி 26 இல் நடைபெற்ற படைத்தகையில் நடந்த கலவரத்திற்குப் பின்னர் , போராட்டம் நடைபெற்று வரும் மூன்று எல்லைகளிலும் தில்லி காவலர்கள் பள்ளங்களையும்,பைஞ்சுதைகளால் ஆன தடுப்புச் சுவர்களையும் , ஆணிப் படுக்கைகளையும் வைத்து தடுப்புகளை ஏற்படுத்தினர்.[37][38] தடுப்புகளின் மூலம் விவசாயிகள், உள்ளூர் வாசிகள் மற்றும் பத்திரிகையாளர்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தினர்.[39][40] காசிப்பூர் எல்லையில் குடிநீர் மற்றும் மின்சாரவசதி ஆகிய கொடுக்கப்படவில்லை என விவசாய தலைவர்கள் குற்றம் சாட்டினர்.[41][42]
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது பல்வேறு விவசாயிகள் சங்கங்கள் மற்றும் அமைப்புகள் சார்பில் இந்தியாவன் தலைநகருக்குள் விவசாயிகளை அனுமதிக்க வேண்டி. பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு ஒரு அமைப்பை உருவாக்க உச்சநீதிமன்றம் மத்திய அரசிடம் கேட்டுக்கொண்டது, மேலும் இந்த போராட்டம் இந்தியா முழுவதும் பிரச்சனையாக மாறாமல் விரைவாக சுமூகமான நிலையை எட்ட கேட்டுக்கொண்டது.[43]
ஜனவரி 11, 2021 அன்று இந்தியாவின் தலைமை நீதிபதி விசாரணையின்போது, "நாங்கள் விவசாயம் மற்றும் பொருளாதாரம் குறித்த வல்லுநர்கள் அல்ல. நீங்கள் (அரசாங்கம்) இந்தச் சட்டங்களை நிறுத்தி வைக்கிறீர்களா, அல்லது நாங்கள் நிறுத்திவைக்க நேரிடும். இதில் உங்களுக்கு உள்ள கௌரவப் பிரச்சினை என்ன? [. . . ] நீங்கள் தீர்வின் ஒரு பகுதியா அல்லது பிரச்சினையின் ஒரு பகுதியா என்பது எங்களுக்குத் தெரியாது [. . . ] ஒருநாள் இந்தப் போராட்டத்தில் அசம்பாவிதங்கள் ஏற்படக்கூடும் என்ற அச்சம் எங்களுக்கு உள்ளது. ஏதாவது தவறு நடந்தால் நாம் ஒவ்வொருவரும் பொறுப்பேற்க வேண்டும் [. . . ] பெரும்பான்மையானவர்கள் சட்டங்கள் நல்லது என்று சொன்னால், அவர்கள் அதை குழுவிடம் சொல்லட்டும். " [44] அரசாங்கம் விவசாயிகள் எதிர்ப்பு போராட்டத்தினைக் கையாளும் விதத்தில் நாங்கள் ஏமாற்றம்டைந்துள்ளோம்" என்று நீதிபதிகள் கூறினர். சட்டப்படி நீங்கள் என்ன ஆலோசனை செயல்முறை பின்பற்றினீர்கள் என்பது எங்களுக்குத் தெரியாது. பல மாநிலங்கள் கிளர்ச்சியில் உள்ளன. " [45] "பெரும்பான்மையான விவசாயிகள்" சட்டங்களை ஆதரித்தனர் என்ற தலைமை அரசு வழக்குரைஞர் துஷார் மேத்தாவின் கூற்றையும் நீதிமன்றம் நிராகரித்தது,[46][47]
ஜனவரி 12, 2021 அன்று இந்திய உச்சநீதிமன்றம் வேளாண் சட்டங்களுக்கு இடைக்காலத் தடை விதித்து, எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளின் குறைகளை ஆராய ஒரு குழுவை அமைத்தது.எஸ். ஏ. பாப்டே உழவர் சங்கங்களை ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொண்டார்.[48]
உயிரிழப்புகள் மற்றும் இழப்புகள்
இதுவரை 41 பேர் உயிரிழப்புகள் நடந்துள்ளது, அதில் இரண்டு பேர் தற்கொலைகள், 4 பேர் சாலை விபத்துகள், 10 பேர் மாரடைப்பு, 1 நபர் குளிர் காரணமாக இறந்துள்ளனர். 100 க்கும் மேற்ப்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.[49][50]
04 சனவரி 2021 நிலவரப்படி இதுவரை 60 41 பேர் உயிரிழப்புகள் நடந்துள்ளது. கடும் குளிர், மழை, பனி மூட்டம் ஆகியவை கடுமையாக இருந்தும் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறாவிடில் ஒரு வருடம் ஆனாலும் இந்த போராட்டம் ஓயாது என்று திட்டவட்டமாக தெரிவித்து தொடர்ந்து 40ஆவது நாளாக இன்றும் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். சாலைகளில் சமைத்து சாப்பிட்டுக்கொண்டு ட்ராக்டர்களை வீடுகளாக மாற்றி தங்கிக் கொண்டு விவசாயிகள் போராடி வருகின்றனர்.[51]
இழப்புகள்
27 திசம்பர் 2020 நிலவரப்படி இதுவரை 1,338 தொலைதொடர்பு கோபுரங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளது.[52]
டிவிட்டரில் போராட்டப் பின்னணி
கனடாவைச் சேர்ந்த பொயட்டிக் ஜஸ்டிஸ் பவுண்டேஷன்[53] (Poetic justice Foundaion) எனும் அமைப்பு, டுவிட்டர் மூலம் வேளாண்மை போராட்டத்தை தீவிரப்படுத்த, பன்னாட்டு அளவில் பிரபலமானவர்களை ஈடுபடுத்தியதுடன், டிவிட்டரில் இந்தியக் குடியரசு நாளன்றும் மற்றும் அதற்கு பிறகும் வேளாண் போராட்டத்தின் திட்டங்களை வகுக்கும் டூல்கிட் ஒன்றை வெளியிட்டுள்ளது.[54]
சட்ட நீக்கம்
நவம்பர் 19, 2021 அன்று ஒரு தொலைக்காட்சி உரையில், இந்தியப் பிரதம அமைச்சர் நரேந்திர மோடி, டிசம்பரில் வரவிருக்கும் குளிர்கால நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் தனது அரசாங்கம் மூன்று சட்டங்களை ரத்து செய்யும் என்று கூறினார். அவர் தனது அறிக்கையில், சட்டத்தின் நன்மைகளை விவசாயிகளிடம் சென்று சேர்க்க இயலாதது குறித்து பின்வருமாறு கூறினார்: "விவசாயிகளுக்கு பலன்களை விளக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது, ஆனாலும் நாங்கள் தோல்வியடைந்துள்ளோம். குரு பூராப் பண்டிகையை முன்னிட்டு, மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது." [55][56][57] 2022ல் பஞ்சாப் மற்றும் உத்தரபிரதேசத்தில் நடக்கவிருக்கும் மாநில தேர்தல்கள் மோடியின் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் மற்றும் கருத்துக் கணிப்பாளர்கள் கருத்து தெரிவித்தனர்.[58] பாரதிய கிசான் யூனியனின் தேசிய செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திகாயித், சட்டங்கள் ரத்து செய்யப்பட்டவுடன் மட்டுமே போராட்டங்கள் நிறுத்தப்படும் என்றார்.[56]