கன்னத்தில் காணப்படும் ஒரு புத்திழையக் கட்டியாகும். இது வியர்வைச் சுரப்பியிலுள்ள ஒரு கேடில்லாத கட்டியாகும்.
கட்டி (tumor) என்பது இழையங்களில் ஏற்படக்கூடிய அசாதாரணமான, அளவுக்கதிகமான வளர்ச்சியால் ஏற்படும் புத்திழையம் (neoplasm) அல்லது திண்ம இழையமாகும். இந்த வளர்ச்சியானது அருகில் சூழவுள்ள இழையங்களிலிருந்து வேறுபட்டிருப்பதுடன், அதற்குரிய தூண்டல் நீக்கப்பட்டாலும்கூட, தொடர்ந்த அசாதாரண வளர்ச்சியையே காட்டும்.[1][2][3] இந்த அசாதாரண வளர்ச்சியானது, (எப்பொழும் இல்லையெனினும்) பொதுவாக திணிவு கூடி வீக்கமடைந்து காணப்படும் நிலையில் இது கட்டி எனப்படும்.[4]
கட்டிகளை நான்கு வகைப்படுத்தலாம். கேடுதரும் கட்டிகள் (Malignant tumour) புற்றுநோய்க் கட்டிகளாக இருக்கும். கட்டிகள் எல்லாமே புற்றுநோய்க் கட்டிகள் அல்ல. கேடில்லாத கட்டிகளும் (Benign tumour) உடலில் தோன்றும். அத்துடன் கேடுதருவதற்கு முதல் நிலையிலுள்ள, அதாவது புற்று நோயாக மாறக்கூடிய கட்டிகளும் (en:Carcinoma in situ) உண்டு. இவை தவிர, சரியாக அறிய முடியாத, குறிப்பிடும்படியாக இல்லாத கட்டிகளும் உண்டு. இவற்றில் புற்று நோய்க் கட்டிகள் பற்றிய படிப்பே மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றது. இது பற்றிய கற்கை நெறி புற்றுநோயியல் எனப்படும்.
பொதுவாக அசாதரணமாக ஏற்படும் இவ்வகையான இழைய மிகைப்பெருக்கத்திற்குக் காரணம் மரபணு திடீர்மாற்றம் ஆகும். குருதிப் புற்றுநோய் போன்ற சில புத்திழையங்கள் தவிர, ஏனைய புத்திழைய வளர்ச்சிகள் எல்லாவற்றிலும் கட்டிகள் தோன்றும். உயிரகச்செதுக்கு மூலமோ, அல்லது அறுவைச் சிகிச்சை மூலம் அகழ்ந்தெடுக்கப்படும் இழைய மாதிரிகளை நோயியலாளர்கள் பார்வையிட்டு அவை கேடுதரும் புற்றுநோய்க் கட்டிகளா அல்லது கேடில்லாத கட்டிகளா எனத் தீர்மானிப்பார்கள்.