கதிரவேலு சிற்றம்பலம்
கதிரவேலு சிற்றம்பலம் (C. Sittampalam, சி. சிற்றம்பலம், செப்டம்பர் 13, 1898 - பெப்ரவரி 3, 1964), இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். விடுதலை பெற்ற இலங்கையின் முதலாவது அமைச்சரவையின் அஞ்சல், தொலைத்தொடர்பு அமைச்சராகவும் இருந்தவர்.[1][2] ஆரம்ப காலம்சிற்றம்பலம் 1898 செப்டம்பர் 13 ஆம் நாள் பிறந்தவர். யாழ்ப்பாணத்தின் பிரபலமான குடும்பம் ஒன்றில்பிறந்தவர். இவரது தந்தை ஆறுமுகம் கதிரவேலு குற்றவியல், மற்றும் மாவட்ட நீதிபதியாக இருந்தவர். இந்து சாதனம் பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவர். தந்தையின் சகோதரர் ஆறுமுகம் கனகரத்தினம் யாழ்ப்பாணத்தின் முதல் நகரசபைத் தலைவராக இருந்தவர். கனகரத்தினம் மகா வித்தியாலயத்தைத் தோற்றுவித்தவர். சிற்றம்பலத்தின் தந்தைவழிப் பாட்டனார் விஸ்வநாதர் காசிப்பிள்ளை முடிக்குரிய வழக்கறிஞராகப் பணியாற்றியவர், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியைத் தோற்றுவித்தவர்களில் ஒருவர்.[1] சிற்றம்பலத்தின் சகோதரர் சி. பொன்னம்பலம் யாழ்ப்பாண நகரின் முதலாவது முதல்வராக இருந்தவர். ஆரம்பக் கல்வியை கொழும்பு ரோயல் கல்லூரியில் கற்றார்.[1] ரோயல் கல்லூரியில் பயின்ற போது கல்லூரி இதழின் ஆசிரியராகவும், இலக்கியக் கழகத்தின் செயலாளராகவும் சேவையாற்றினார். கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் பட்டமும் பெற்றார். இங்கிலாந்து மிடில் டெம்பிலில் பாரிஸ்டரானார்.[1] சிற்றம்பலம் கமலாம்பிகை சுப்பிரமணியம் என்பவரைத் திருமணம் புரிந்தார். தேவலட்சுமி பாலசுந்தரம், புஷ்பலக்சுமி, அர்ச்சுனா, யோகலக்சுமி, மல்லிகாலக்சுமி ஆகியோர் இவர்களுக்குப் பிறந்தவர்கள்[3]. அரசியலில்இலங்கையில் மாவட்ட நீதிபதியாகவும், பின்னர் மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய இடங்களுக்கு அரச அதிபராகவும் பணியாற்றினார். அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் மன்னார் தேர்தல் தொகுதியில் 1947, 1வது நாடாளுமன்றத் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1948 இல் அன்றைய டொன் ஸ்டீபன் சேனாநாயக்கவின் முதலாவது அரசில் அஞ்சல், தொலைத்தொடர்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[1][4] சிறிது காலம் தொழிற்துறை, மற்றும் மீன்பிடித்துறை அமைச்சராகவும் பணியாற்றினார். 1952 தேர்தலிலும் சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1956 தேர்தலில் மன்னார் தொகுதியில் போட்டியிட்டு இலங்கைத் தமிழரசுக் கட்சி வேட்பாளர் வி. ஏ. அழகக்கோனிடம் தோற்றார். சிற்றம்பலம் தகவல்தொடர்பு அமைச்சராக இருந்த போது பல முக்கிய வானொலி நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தினார். இவற்றில் பௌத்த மக்களுக்காக பிரித் ஓதும் நிகழ்வை வானொலியில் அறிமுகப்படுத்தியமையைக் குறிப்பிடலாம்.[1] பல கிராமங்களில் உப அஞ்சல் நிலையங்களை ஆரம்பித்தார்.[1]. சிற்றம்பலத்தின் நினைவாக 2004 ஆம் ஆண்டில் இலங்கை அரசு அஞ்சல்தலையை வெளியிட்டுக் கௌரவப்படுத்தியது. வெளி இணைப்புகள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia