இந்தியாவில் மக்கள் பிரதிநிதிகளான இந்நாள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரணை செய்ய சிறப்பு நீதிமன்றங்களை நியமிக்க இந்திய உச்ச நீதிமன்றம் 2017ல் உத்தரவிட்டது.[1]அதன்படி 65 மற்றும் அதற்கு மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள மாநிலங்களில் 12 சிறப்பு நீதிமன்றங்களை அமைப்பதற்கு மத்திய அரசு வழிவகுத்தது. டிசம்பர் 2018ல் தில்லியில் 2 சிறப்பு நீதிமன்றங்களும், உத்தரப் பிரதேசம், பிகார், மேற்கு வங்காளம், மத்தியப் பிரதேசம், மகாராட்டிரா, கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம், தெலங்காணா, கேரளா மற்றும் தமிழ்நாட்டில் தலா 1 சிறப்பு நீதிமன்றங்கள் நிறுவப்பட்டது.[2][3]
போதிய நீதிமன்றங்கள் தேவைப்படும், குற்ற வழக்கில் தொடர்புடைய மக்கள் பிரதிநிதி உள்ள மாவட்ட நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றத்தால், சிறப்பு நீதிமன்றத் தகுதி வழங்கப்படுகிறது. மாநிலங்களில் உள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றங்களின் விசாரணைகள் மற்றும் தீர்ப்புகளை உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் கண்காணிப்பர்.
இந்த நீதிமன்றங்களின் செயல்பாடுகள் குறித்து கருத்துரை கூற இந்திய உச்ச நீதிமன்றம் மூத்த வழக்கறிஞர் ஒருவரை அமிகஸ் கியூரி எனும் நீதிமன்ற நண்பரை நியமித்தது. நீதிமன்ற நண்பரின் ஆலோசனகளின்படி, மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்குகளை சிறப்பு நீதிமன்றங்கள் விரைவாக விசாரிக்க வேண்டும். இதற்கு தேவையான நீதிபதிகளை அந்தந்த மாநில உயர் நீதிமன்றங்கள் நியமிக்க வேண்டும். மற்றொரு நீதிபதியை நியமித்த பிறகே, சிறப்பு நீதிமன்ற நீதிபதியை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும். அதுபோல் விசாரணை முடிந்து தீர்ப்பு அளிக்க வேண்டிய வழக்குகள் நிலுவையில் இல்லாதபட்சத்திலேயே, சிறப்பு நீதிமன்ற நீதிபதியை மாற்ற வேண்டும்.
4 டிசம்பர் 2018 அன்று முதல், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி பிகார் மற்றும் கேரளாவில் மட்டும் மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றங்களில் நடைபெறும் குற்ற வழக்குகளின் செயல்பாடுகளை இந்திய உச்ச நீதிமன்றத்தால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மக்கள் பிரதிநிதிகள் மீதான நிலுவையில் உள்ள வழக்குகள்
முன்னாள் மற்றும் இந்நாள் மக்கள் பிரதிநிதிகள் மீது தமிழ்நாட்டில் 249 குற்ற வழக்குகளும்; மகாராட்டிராவில் 472 குற்ற வழக்குகளும்; மத்தியப் பிரதேசத்தில் 304 குற்ற வழக்குகளும்; புதுச்சேரியில் 23 குற்ற வழக்குகளும் நிலுவையில் உள்ளது.
தமிழ்நாட்டில் குற்ற வழக்குகள்
தமிழ்நாட்டின் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் & முன்னாள் உறுப்பினர்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றம் அளித்துள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் மட்டும் மக்கள் பிரதிநிதிகளான இந்நாள் & முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது 249 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதில் 50 வழக்குகள் ஐந்து ஆண்டுகளுக்கு மேற்பட்டவை ஆகும்.[4]தற்போது மக்கள் பிரதிநிதிகள் மீது குற்ற வழக்குகளை அதிகரித்துள்ளதால், மாவட்ட முதன்மை நீதிமன்றங்களை, சிறப்பு நீதிமன்றங்களாக செயல்பட உச்ச நீதிமன்றம் அனுமதிக்கிறது.
சிறப்பு நீதிமன்றங்களில் மக்கள் பிரதிநிதிகள்
இதனையும் காண்க
மேற்கோள்கள்