சில்க் ஸ்மிதா
சில்க் சுமிதா (Silk Smitha)(2 திசம்பர் 1960 - 23 செப்டம்பர் 1996) என்பவர் இந்திய திரைப்பட நடிகை ஆவார்.[1] 1970களில் ஒரு ஒப்பனைக் கலைஞராக இவர் திரைத்துறை வாழ்க்கையைத் தொடங்கினார். சில்க் ஸ்மிதா தமிழ் நடிகர் வினுசக்கரவர்த்தியால் வண்டிச்சக்கரம் என்கிற திரைப்படத்தில் சிலுக்கு என்கிற சாராயம் விற்கும் பெண் கதாபாத்திரத்தில் முதன்முறையாக அறிமுகப்படுத்தினார். அந்தப் பெயரே இவருக்கு சினிமாவில் நிலைத்துவிட்டது.[2] இவரது 17 வருட சினிமா வாழ்க்கையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 450ற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தார்.[3][4] வாழ்க்கை வரலாறுஇந்தியாவின் ஆந்திரமாநிலம் ஏலூரு என்ற இடத்தில் பிறந்தவர் விஜயலட்சுமி. பிறப்பால் ஆந்திரமாநிலத்தை சேர்ந்தவராயினும் இவரது பூர்வீகம் தமிழ் நாட்டின் கரூர் ஆகும். இவர் வறுமையின் காரணமாக பள்ளிப்படிப்பை நான்காம் வகுப்போடு நிறுத்திக்கொள்ள வேண்டியதாயிற்று. இவரது வசீகர தோற்றத்தின் காரணமாக பலரது தொல்லைகளுக்கு ஆளானார். இதனால் இவரது குடும்பத்தார் இவருக்கு சிறுவயதிலேயே திருமணம் முடித்துவைத்தனர். இவரது குடும்பவாழ்க்கையில் ஏற்பட்ட துன்பத்தின் காரணமாக இவர் சென்னைக்கு பிழைப்பு தேடியும் புது வாழ்க்கை தேடியும் ஓடிவந்து இவரது உறவினர் வீட்டில் தங்கினார்.[5][6] திரைத்துறை வாழ்க்கைஇவர் தனது திரைத்துறை வாழ்க்கையை இரண்டாம் நிலை நடிக நடிகைகளுக்கான ஒப்பனை கலைஞராக தொடங்கினார். பின் தமிழ் நடிகரும் இயக்குனருமான வினுச்சக்ரவர்த்தியின் மூலம் வண்டிச்சக்கரம் என்கிற ஒரு தமிழ்த் திரைப்படத்தில் சில்க் என்கிற ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இந்தப் படத்தில் இவரை ஸ்மிதா என்கிற புது புனைப்பெயரில் அறிமுகப்படுத்தினார். வினுச்சக்கரவர்த்தியின் மனைவி சில்கிற்கு ஆங்கிலம் பயிற்றுவித்தார். அதே நேரத்தில் சில்க் வேறு ஒருவரிடம் நடனமும் கற்றுகொண்டார். வண்டிச்சக்கரத்தில் நடித்தபின்பு இவரது கதாபாத்திரமான சில்க் என்கிற பெயரும் ஸ்மிதா என்கிற பெயரும் இணைந்து இவரது அடையாளம் ஆயின. பின்னர், ஸ்மிதா "இணையே தேடி" என்கிற திரைப்படம் மூலம் 1979இல் மலையாளத் திரைப்பட உலகிற்கு அறிமுகமானார். வண்டிச்சக்கரம் படத்தின் மூலம் கிடைத்த வெற்றியினால் ஸ்மிதா புகழின் உச்சத்துக்கே சென்றார்.[7] அந்த படத்தில் அவர் ஏற்ற கதாபாத்திரத்தின் தாக்கத்தின் காரணமாக அவரால் வேறு விதமான வித்தியாசமான கதாபாத்திரங்களை எளிதாகப் பெறமுடியவில்லை. பின்னர் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் சில இந்தித் திரைப்படங்களிலும் நடித்தார். இவரது கவர்ச்சியான தோற்றத்திற்கும் மூன்று முகம் திரைப்படத்தில் அவர் ஏற்றிருந்த துணிவான கதாபாத்திரத்தினாலும் இவர் தமிழ் தவிர தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய துறைகளிலும் புகழ்பெற்றார்.[5] இவரது கவர்ச்சி நடனம் மட்டுமே இடம்பெற்ற அமரன் போன்ற படங்கள் பெரிய அளவில் வெற்றியை ஈட்டின.[8] 1980களில் இவரது நடனம் இடம்பெறாத தமிழ்த் திரைப்படங்களே இல்லை என்கிற அளவிற்கு உயர்ந்தார். இவர் நடிப்பில் பல பரிமாணங்கள் கடந்திருந்தாலும் இவரை நாளிதழ்களும் சில திரைப்படங்களும் கவர்ச்சி நடிகையாகவே அடையாளப்படுத்தின.[5] இருப்பினும், அலைகள் ஓய்வதில்லை(1981), நீங்கள் கேட்டவை, தாலாட்டு கேக்குதம்மா போன்ற திரைப்படங்களில் இவர் ஏற்று நடித்த நல்ல கதாபத்திரங்களின் மூலம் தனக்கு கவர்ச்சி மட்டுமின்றி அனைத்துவிதமான நடிப்பின் பரிணாமங்களும் வரும் என நிரூபித்தார். லயனம்(1989) என்கிற திரைப்படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் இவரது மற்றொரு வித்தியாசமான பரிணாமத்தினை உலகிற்கு எடுத்து காட்டியது. இந்தப்படம் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவரது மற்றொரு நல்ல படமான பாலு மகேந்திராவின் மூன்றாம் பிறை மிகப்பெரிய வெற்றியை பெற்றது. கமலஹாசன், ஸ்ரீதேவியுடன் இணைந்து இவர் நடித்த இந்தப் படம் இந்தியிலும் சத்மா என்கிற பெயரில் மீண்டும் படமாக்கப்பட்டது. மறைவு1996இல், ஸ்மிதா சென்னையில் அவருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் பிணமாக கண்டுபிடிக்கப்பட்டார். ஸ்மிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக செய்தி வெளியானது. இந்த நிகழ்விற்கு முன்பு இவர் திரைப்படத் தயாரிப்பாளராக முயற்சித்து வந்ததாகவும் அதில் ஏற்பட்ட கடனாலும், மேலும் காதல் தோல்வியினால் ஏற்பட்ட குடிப்பழக்கத்தினாலும், மன இறுக்கத்திற்கு ஆளானதாக நம்பப்படுகிறது. ஆனாலும் இவரது மரணத்தினைச் சுற்றி பல சர்ச்சைகள் இருந்து வருகின்றன.[9][10] நவீன கலையில்இவரது வாழ்க்கையை மையமாக வைத்து 2011ஆம் ஆண்டு தி டர்டி பிக்சர் என்ற திரைப்படம் வெளியானது. இத்திரைப்படம் இந்தியாவில் பல மொழிகளில் வெளியிடப்பட்டது. இப்படம் இவரது பிறந்தநாளான டிசம்பர் 2 அன்று வெளியானது. நடித்ததில் சிறந்த படங்கள்
மேலும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia