சூரியன் (திரைப்படம்)
சூரியன் (Suriyan) 1992 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ் அதிரடித் திரைப்படம் ஆகும், இத்திரைப்படத்தை எழுதி இயக்கியவர் பவித்ரன் ஆவார். இத்திரைப்படத்தில் சரத்குமார் மற்றும் ரோஜா செல்வமணி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை கே. டி. குஞ்சுமோன் தயாரித்துள்ளார். இத்திரைப்படத்தில் ஷங்கர் உதவி இயக்குநராக பணிபுரிந்துள்ளார். பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றதோடு சரத்குமாருக்கு கதாநாயகனாக நடித்து மிகப்பெரும் வெற்றியையும் தந்த திரைப்படமாக அமைந்தது. இத்திரைப்படம் ஒரு மிகப்பெரும் வசூல் சாதனையைப் படைத்த திரைப்படமாகவும் தமிழத்திரையுலகில் ஒரு புதிய பாணி அதிரடித் திரைப்படமாககூம் அமைந்தது. இத்திரைப்படம் தெலுங்கில் மண்டே சூர்யுடு என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டது.[1] கதைக்களம்ஒரு நாள், பொள்ளாச்சிக்கு அருகில் உள்ள டாப் சிலிப்பில் ஒரு மனிதன் அதிகக் குளிரால் பாதிக்கப்பட்டு நடுங்கிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறார் செட்டியார் அம்மா (மனோரமா) பார்க்கிறார், அவரை மீட்டெடுத்து, சிகிச்சையளித்து தன் சொந்த மகனைக் கவனிப்பது போல் பார்த்துக் கொள்கிறார். அவ்வாறு மீட்டெடுக்கப்பட்டவர் பெயர் சூரியன். அவர் ஒரு இந்திய காவல் பணி அலுவலர். அவர் தனது அடையாளத்தை மறைத்து மொட்டை என்ற பெயருடன் அழைக்கப்படுவதை விரும்புகிறார். சூரியன் மிகப்பெரிய நிலச்சுவான்தாரான கூப்பு கோனாரின் மகள் ரோஜாவிற்கு ஓட்டுநராக வேலையில் அமர்த்தப்படுகிறார். ரோஜா அவரை அவமரியாதை செய்யும் விதமாக நடத்துகிறார். சூரியனின் உண்மையான அடையாளத்தை அறிந்த பின் தன் தவற்றை உணர்கிறார். சூரியன் ஏன் அவ்வாறான ஒரு தலைமறைவு வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்கான காரணம் புரியாமல் ரோஜா குழப்பமடைகிறார். சூரியன் தனது பழைய கதையைக் கூறுகிறார். பாதுகாப்புப் பணியில் சூரியன் பணியமர்த்தப்பட்டு பணிபுரிந்து கொண்டிருந்த போது பெங்களூருவில் நடைபெற்ற ஒரு சர்வதேச மாநாட்டின் போது இந்தியாவின் உள்துறை அமைச்சர் சூரியனிடம் ஒரு பேரம் பேசுகிறார். அதாவது இந்தியப் பிரதமரை படுகொலை செய்வதற்கான உத்தி ஒன்றை சூரியன் உருவாக்கித் தர வேண்டுமென்றும், அதற்கு ஈடாக சூரியனுக்கு சில ஆயிரம் டாலர்களைத் தருவதாகவும் கூறுகிறார். சூரியன் ஆத்திரமடைந்து உள்துறை அமைச்சரைக் கொன்று விட்டுத் தப்பி விடுகிறார். இதன் காரணமாக சூரியன் காவல் துறையினால் தேடப்பட்டு வருகிறார். சூரியன் தப்பி ஓடிய பின் டாப்சிலிப்பை அடைகிறார். உள்துறை அமைச்சர் தனது கூலிப்படையினரிடம் மேற்கொண்ட உரையாடலின்படி பிரதமரை கொல்வதற்கான முயற்சிக்கும் டாப் சிலிப்பிற்கும் தொடர்பு இருப்பது தெரிந்தே அவர் அந்த இடத்தில் தன் அடையாத்தை மறைத்துக் கொண்டு வாழ்ந்து வருகிறார். உள்துறை அமைச்சரின் கூலிப்படையைச் சேர்ந்த மிக்கியின் நடவடிக்கைகளை காட்டுப்பகுதியில் கண்காணித்து வருகிறார். உண்மை கண்டுபிடிக்கப்பட்டால் தான் தான் நிரபராதி என்பதை நிரூபிக்க முடியும் என்பதற்காகவும், பிரதமரைக் கொல்ல மேற்கொள்ளும் முயற்சி தடுக்கப்பட வேண்டும் என்பதற்காகவும் தன் நிலையைத் தொடர்கிறார், சூரியன் கொண்டுள்ள நாட்டுப்பற்று மற்றும் அர்ப்பணிப்பு உணர்வினைக் கண்டு ரோஜா அவரிடம் காதல் கொள்கிறார். தனது தந்தையின் விருப்பத்திற்கெதிராக ரோஜா வீட்டை விட்டு வெளியேறி சூரியனை (மொட்டையை) மணக்கிறார். இதற்கிடையில், சூரிய்ன காட்டிற்குள் நடக்கும் சில நடவடிக்கைகளில் சந்தேகம் கொள்கிறார். அதில் ஈடுபடுவோரைத் தொடர்ந்து கண்காணித்து சில ஆதாரங்களை சேகரிக்கிறார். இறுதியாக மிக்கி கூப்பு கோனாரின் பாதுகாப்பில் இருந்து கொண்டு பொள்ளாச்சிக்கு பிரதமர் வரும் போது அவரைக் கொல்வதற்கான திட்டம் தீட்டப்படுவதை அறிகிறார். காவல்துறை சூரியனைத் தேடிக்கண்டுபிடித்து கைது செய்கின்றனர். மிக்கியும் கூப்புக் கோனாரும் சூரியன் அவர்களது இரகசியங்கை அறிந்துள்ளதால் அவரைக் கொல்லத் திட்டமிடுகின்றனர். சூரியனை சிறையில் சந்திக்கும் போது இரகசியமாக ஒரு வெடிகுண்டை வைக்கிறார்கள். ஆனால், துரதிருஷ்டவசமாக கூப்புக்கோனார் அந்த வெடிகுண்டு தாக்குதலில் இறக்கிறார். அங்கிருந்து தப்பித்த சூரியன் மிக்கியைத் தேடிக்கண்டுபிடித்து பிரதமரைக் காப்பாற்றுகிறார். இறுதியில் தன்னைக் கொல்ல நடைபெற்ற சதியிலிருந்து காப்பாற்றியமைக்கு சூரியனிடம் பிரதமர் நன்றி தெரிவிக்கிறார். பாடல்கள்இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். பாடல்களுக்கான வரிகளை வாலி எழுதியிருந்தார். "பதினெட்டு வயது" பாடல் "கந்த சஸ்தி கவசம்" என்ற இந்து பக்திப் பாடலை அடிப்படையாகக் கொண்டது. தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்ட “மாண்டே சூர்யுடுவின்” பாடல் வரிகளை ராஜஸ்ரீ எழுதியிருந்தார்.
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia