டி. வி. சதானந்த கௌடா
டி. வி. சதானந்த கவுடா (D. V. Sadananda Gowda, சதானந்த கௌடா, கன்னடம்,துளு:ಡಿ.ವಿ.ಸದಾನಂದ ಗೌಡ) (பிறப்பு:18 மார்ச் 1953) இந்தியாவின் பதினைந்தாவது மக்களவையின் உறுப்பினர். கர்நாடக மாநிலத்தின் உடுப்பி சிக்மகளூர் தொகுதியிலிருந்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர். கர்நாடக மாநில லோக் ஆயுக்தா நீதியரசர் சந்தோஷ் எக்டே சுமத்திய ஊழல் குற்றச்சாட்டுக்களின் பின்னணியில் முந்தைய முதலமைச்சர் பி. எஸ். எதியூரப்பா பதவி விலகியதை அடுத்து ஆகத்து 3, 2011 அன்று பாரதிய ஜனதா கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களால் இரகசிய வாக்களிப்பு மூலம் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[3][4] முன்னதாக தென்னிந்தியாவில் பாஜக ஆட்சி அமைந்திட முதன்மையானவர்களில் ஒருவராக சூன் 2007 முதல் தேசிய அளவில் அறியப்பட்டார். பாரதிய ஜனதாக் கட்சியின் மேலிட ஆணைப்படி சூலை 8,2012 அன்று முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார். இளமைசதானந்த கௌடா வெங்கப்பா கௌடாவிற்கும் கமலாவிற்கும் மகனாக 1953ஆம் ஆண்டு சுலியா வட்டத்தில் உள்ள மண்டேகொலு சிற்றூரில் பிறந்தார்.[5][6][7] புத்தூரில் உள்ள புனித பிலோமினாக் கல்லூரியில் அறிவியல் பட்டம் பெற்று உடுப்பி வைகுந்த பாலிகா கல்லூரியில் சட்டம் பயின்றார். கல்லூரி நாட்களிலேயே அரசியலில் நாட்டம் கொண்டு சட்டக்கல்லூரி மாணவர் சங்கத்தின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் பாரதிய ஜனதா கட்சியின் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிசத்தின் மாவட்ட செயலாளராகவும் பணியாற்றினார். 1976ஆம் ஆண்டு சுலியா மற்றும் புத்தூரில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். சிறிது காலம் உத்தர கன்னட மாவட்டத்தின் சிர்சியில் அரசு வழக்கறிஞராகவும் பணியாற்றினார். அரசியலில் முழுமையாக ஈடுபட இந்த வேலையிலிருந்து பின்னர் பதவிவிலகினார்.[8] அரசியல் பணிவாழ்வுதமது அரசியல் வாழ்க்கையை முந்தைய ஜன சங்கத்தின் உறுப்பினராகத் துவங்கினார். சுலியா சட்டப்பேரவைத் தொகுதியின் கட்சி தலைவராகவும் தட்சிண கன்னட பாஜக யுவ மோர்ச்சாவின் தலைவராகவும் தட்சிண கன்னட பாஜக துணைத்தலைவராகவும் மாநில பாஜக யுவ மோர்ச்சா செயலாளராகவும் (1983-88) மாநில பாஜக செயலாளராகவும் (2003-04) தேசிய செயலாளராகவும் (2004) பொறுப்புகள் ஏற்றுள்ளார். தட்சிண கன்னடத்தின் புத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்து 1994ஆம் ஆண்டிலும் 1999ஆம் ஆண்டிலும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது இரண்டாவது சட்டப்பேரவையில் துணை எதிர்கட்சித் தலைவராகவும் பணியாற்றினார்.மாநில அரசின் பல்வேறு குழுக்களில் உறுப்பினராகவும் பங்கெடுத்துள்ளார்.2003ஆம் ஆண்டு மாநில பொதுக் கணக்கு குழுத் தலைவராக நியமிக்கப்பட்டார்.[9] 2004ஆம் ஆண்டு மங்களூரு மக்களவைத் தொகுதியிலிருந்து பதினான்காவது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரசின் வீரப்ப மௌலியை 32,314 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[10] 2009ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் உடுப்பி=சிக்மகளூரு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு காங்கிரசிடமிருந்து தொகுதியை கைப்பற்றினார்[11]. தனி வாழ்க்கைசதானந்த கௌடா டட்டி சதானந்தாவுடன் மணம் புரிந்து இரு மகன்களைப் பெற்றார். மூத்த மகன் கௌசிக் கௌடா 2003ஆம் ஆண்டில், மருத்துவ மாணவராக இருந்தபோது, புத்தூர் அருகே ஏற்பட்ட ஓர் சாலை விபத்தில் மரணமடைந்தார். இரண்டாவது மகன் கார்த்திக் கௌடா தற்போது நிட்டி பொறியியல் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகிறார்.[12] மேற்கோள்கள்
வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia