தெற்கு வாசல்
தெற்கு வாசல் (South Gate) என்பது இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் மதுரை மாவட்டம் தன்னகத்தே கொண்டுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1][2][3] கடல் மட்டத்திலிருந்து சுமார் 161 மீட்டர் உயரத்தில், 9°54'39.2"N, 78°07'07.3"E (அதாவது, 9.910900°N, 78.118700°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு தெற்கு வாசல் பகுதி அமைந்துள்ளது. புகழ்மிக்க மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில், தெற்கு வாசல் பகுதியிலிருந்து சுமார் ஒரு கி.மீ. தூரத்திலேயே அமைந்திருக்கிறது. மதுரை மாநகரானது, மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் பகுதியை நடுநாயகமாகக் கொண்டு, அதைச் சுற்றி நான்கு திசைகளிலும், ஊர்களையும், வீதிகளையும் அமையப் பெற்றுள்ளது. நான்கு திசைகளிலும் கோட்டைகள் கட்டப்பட்டிருந்தன. தெற்குத் திசையில் தெற்கு வாசல், கிழக்குத் திசையில் கீழ வாசல் என ஊர்கள் அமைந்துள்ளன. மேலும், கீழ வெளி வீதி, மேல வெளி வீதி, வடக்கு வெளி வீதி, தெற்கு வெளி வீதி மற்றும் கீழ் மாசி வீதி, மேல மாசி வீதி, வடக்கு மாசி வீதி, தெற்கு மாசி வீதி என திசைகளுக்கு ஒப்பாற் போல் வீதிகள் அமையப் பெற்றுள்ளன.[4] தெற்கு வாசல் பகுதியில் காவல் நிலையம் ஒன்று உள்ளது.[5] மதுரை, கீழ வாசல், நெல்பேட்டை, செல்லூர், கோரிப்பாளையம், தல்லாகுளம், செனாய் நகர், யானைக்கல், ஆரப்பாளையம் மற்றும் காளவாசல் ஆகியவை தெற்கு வாசல் பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய ஊர்களாகும். தெற்கு வாசல் பகுதிக்கு, மதுரை - பெரியார் பேருந்து நிலையம், மதுரை - அண்ணா பேருந்து நிலையம், மதுரை - ஆரப்பாளையம் பேருந்து நிலையம் மற்றும் மதுரை எம்.ஜி.ஆர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் ஆகியவற்றிலிருந்து பேருந்து சேவைகள் உள்ளன. மதுரையிலிருந்து காரியாபட்டி வழியாக அருப்புக்கோட்டை செல்லும் பாதையில், தெற்கு வாசல் பகுதியிலிருந்து வில்லாபுரம் பகுதியை இணைக்கும் வண்ணம், இரயில்வே பாதைக்கு மேலே, சுமார் அரை கி.மீ. நீளமும், 12 மீட்டர் அகலமும் கொண்ட குறுகிய பாலம் ஒன்று ரூ.75 இலட்சம் மதிப்பீட்டில் 1989-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. போக்குவரத்து நெரிசல் கொண்ட இப்பகுதியில் பாலத்தில் போதிய இடமில்லாமல், வாகன நெரிசல் தொடர்கிறது.[6] தெற்கு வாசல் பகுதி வழியாக, அதிக அளவில், மதுரை மாநகராட்சிப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தெற்கு வாசல் பகுதியில் போக்குவரத்து நெரிசல் எப்போதும் அதிகமாகக் காணப்படுகிறது.[7] போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் பொருட்டு, புதிய பாலம் ஒன்று, ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள பாலத்திற்கு அருகில் கடந்து செல்லுமாறு, நெல்பேட்டை பகுதியில் ஆரம்பித்து அவனியாபுரம் பகுதி வரை சுமார் 5 கி.மீ. தூரத்திற்கு அமையுமாறு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.[8] தெற்கு வெளி வீதி, கீழ வெளி வீதி, கீழ மாசி வீதி, தெற்கு மாசி வீதி போன்றவை தெற்கு வாசலுக்கு அருகிலுள்ள மக்கள் நெருக்கம் மிக்க முக்கியமான வீதிகளாகும். தெற்கு வாசல் பகுதியிலிருந்து சுமார் 2 கி.மீ. தூரத்திலேயே மதுரை சந்திப்பு தொடருந்து நிலையம் அமைந்துள்ளது. அவனியாபுரத்தில் அமைந்துள்ள மதுரை வானூர்தி நிலையம், இங்கிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவிலுள்ளது. மதுரையில் ஜவுளிக் கடைகள் அதிகமுள்ள பகுதிகளில் தெற்கு வாசல் பகுதியும் அடங்கும்.[9] இப்பகுதியில் தெற்கு வாசல் பக்கோடா கடை என்ற பாரம்பரிய மிக்க பக்கோடா கடை ஒன்று உள்ளது. இக்கடை 55 வருடங்கள் பழமையானது மற்றும் இக்கடையின் அசல் பெயர் உத்தண்டன் பக்கோடா கடை என்பதாகும்.[10] தெற்கு வாசல் பகுதியில் அமைந்துள்ள பொன்னோடை கருப்பண்ணசாமி கோயில், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகிறது.[11] தெற்கு வாசல் பகுதியானது, மதுரை தெற்கு (சட்டமன்றத் தொகுதி)க்குட்பட்டதாகும். இதன் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக 2021-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றவர் மு. பூமிநாதன். மேலும் இப்பகுதி, மதுரை மக்களவைத் தொகுதி சார்ந்தது. இதன் மக்களவைத் தொகுதி உறுப்பினராக சு. வெங்கடேசன், 2019-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றார். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia