தொண்டரடிப்பொடியாழ்வார்
தொண்டரடிப்பொடியாழ்வார் (Thondaradippodi Alvar) வைணவ நெறியைப் பின்பற்றிப் பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர் ஆவார்.[1][2] ஆழ்வார் வரிசைக் கிரமத்தில் பத்தாவதாக வரும் இவருக்கு 'விப்ர நாராயணர்' என்பது இயற்பெயர் ஆகும். திருவரங்கத்திலேயே வாழ்ந்திருந்து அத்தல இறைவனாகிய அரங்கநாதனுக்கு பாமாலை மற்றும் பூமாலை சாற்றும் சேவையைத் தன் வாழ்நாள் முழுதும் சிரமேற்கொண்டு செய்து வந்தார். ஆழ்வார்களின் வசனங்கள் நாலாயிர திவ்ய பிரபந்தம் என்று போற்றப்படுகிறது. இந்தப் பிரபந்தம் ஓதப்படும் 108 வைணவ கோயில்கள் திவ்ய தேசம் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவரது படைப்புகளில் திருப்பள்ளி எழுச்சி பத்து வசனங்களைக் கொண்டதாகவும், திருமாலை நாற்பது வசனங்களைக் கொண்டதாகவும் உள்ளது. இவை இரண்டும் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் உள்ள 4000 சரணங்களில் கணக்கிடப்பட்டுள்ளன. தொண்டரடிப்பொடி மற்றும் பிற ஆழ்வார்களின் படைப்புகள் வைணவத்தின் தத்துவ மற்றும் இறையியல் கருத்துகளுக்குப் பங்களித்தன. மூன்று சைவ நாயன்மர்களுடன் சேர்ந்து, அவர்கள் தென்னிந்திய பிராந்தியத்தின் ஆளும் பல்லவ மன்னர்களைப் பாதித்தனர். இதன் விளைவாகத் தென்னிந்தியாவில் பௌத்தம் மற்றும் சமண மதத்தை வளரவிடாமல் தடுத்தனர் என்பது வரலாறாக உள்ளது. மேலும், இந்து மதத்தின் இரு பிரிவுகளான சைவம் மற்றும் வைணவம் தோன்றக் காரணமாக விளங்கினர். தென்னிந்திய விஷ்ணு கோயில்களில், தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் தொடர்புடைய படங்களும் பண்டிகைகளும் உள்ளன. வசந்த உத்ஸவம் திருவிழா ஸ்ரீரங்கத்தில் கொண்டாடப்படுகிறது. மேலும் அவர் பராமரித்ததாக நம்பப்படும் தோட்டத்தில் ஒன்பது நாட்கள் தொண்டரடிப்பொடி மற்றும் பிற ஆழ்வார்களின் வசனங்கள் தினசரி பிரார்த்தனையின் ஒரு பகுதியாகவும், தென்னிந்தியாவின் பெரும்பாலான விஷ்ணு கோவில்களில் பண்டிகை சந்தர்ப்பங்களிலும் ஓதப்படுகின்றன. இயற்றிய நூல்கள்
பிறப்பு மற்றும் இளமைப்பருவம்தொண்டரடிப்பொடி ஆழ்வார் சோழ நாட்டில் திருமண்டங்குடி என்னும் ஊரில் பிரபவ வருடம், மார்கழி மாதம், கிருஷ்ண சதுர்த்தி, கேட்டை நட்சத்திரத்தில் செவ்வாய்கிழமை அன்று பிறந்தார். இவரின் தந்தை 'வேத விசாரதர்' "குடுமி சோழிய பிராமணர்" வகுப்பைச் சார்ந்தவர். மேலும் இப் பிரிவினர் கடவுள் விஷ்ணுவைப் புகழ்ந்து பாடுவதைத் தொழிலாக வைத்திருப்பதால் இவர்கள் "விப்ரா மக்கள்" என அழைக்கப்படுகிறார்கள். தொண்டரடிப்பொடி ஆழ்வார் பிறந்த 12-ஆவது நாளில் "விப்ர நாராயணர்" என்கிற பெயர் வைக்கப்பட்டது.[3] சிறு வயதிலிருந்தே, ஸ்ரீ விஷ்ணுவை நோக்கிய பக்தி அவருக்குக் கற்பிக்கப்பட்டது. அவர் நன்கு ஆளுமையுடன் வளர்ந்தார். மேலும் அவர் வயது முதிர்ந்த நபர்களையும், அவருக்கு இளையவர்களையும் ஒரே மாதிரியாகக் கருதி அவர்களுக்குச் சரியான மரியாதை கொடுப்பவராக இருந்தார் என்று கூறப்படுகிறது. இந்து புராணத்தின்படி, தேவதேவி என்ற சோழநாட்டு கணிகையின் பால் விருப்பம் கொண்டு தன்னையே மறந்தார். கணிகையால் தன் செல்வம் யாவும் இழந்த இவருக்காக அரங்கன் தன் கோயில் வட்டிலைக் கொடுத்து உதவினார். அதைக் களவாடிய பழி இவர் மீது வீழ்ந்து, அரசன் முன் இவரை இட்டுச்சென்றது. முடிவில் அரங்கனால் உலகத்திற்கு உண்மை அறிவிக்கப்பட்டதோடு, இவரையும் ஆட்கொண்டது. மீண்டு வந்த இவர் தன் இறுதிவரை அரங்கனுக்கே அடிமைப்பூண்டார். அரங்கன் அவருக்குப் பணம் தேவைப்பட்டபோது, அவரை மீட்டு வந்து தங்கத்தைப் பொழிந்தார் என்பதால் அவர் அரங்கநாத சுவாமி கோயிலின் அதிபதியான அரங்கநாதரின் தீவிர பக்தரானார். திருவரங்கத்தில் ஒரு பெரிய நந்தவனம் (மலர் பூங்கா) கட்டினார், அங்குப் பல்வேறு அழகான மற்றும் மணம் கொண்ட மலர் தாவரங்கள் வளர்க்கப்படுகின்றன. அவர் ஸ்ரீ விஷ்ணுவின் அனைத்துப் பக்தர்களையும் வழிபட்டு, அவர்களின் காலடியில் காணப்படும் மண்துகள்களைத் (சிறிய சிறிய தூசி துகள்கள்) தனது தலையில் வைத்துக்கொண்டு,அரங்கநாதரைப் புகழ்ந்து பாடல்களைப் பாடினார். அப்போதிலிருந்து, அவர் "தொண்டரடிப்பொடி ஆழ்வார்" என்று அழைக்கப்பட்டார்.[4] பெயர்க்காரணம்தான் எனும் ஆணவத்தைத் தவிர்க்கும் பொருட்டுத் தன்னைச் சிறுமைப்படுத்திக் கொள்வது ஞானிகளுக்கு இயற்கை. மேலும் பரமனுக்கு அடிமை என்பதினும் அவன் தன் உத்தம அடியார்க்கு அடிமை என்பதைப் பெரிதாக எண்ணுவது வைணவ மரபு. அதனாலேயே அரங்கனுடைய தொண்டர்களின் அடியாகிய திருவடியின் தூசி எனும் பொருள்பட "தொண்டரடிப்பொடி" என்றும், அரங்கனின் பக்தியில் ஆழ்ந்துபோனவரை ஆழ்வார் என்று அழைப்பதற்கிணங்க தொண்டரடிப்பொடியாழ்வார் ஆனார். இலக்கியப் பணிகள்அவர் 45 பாசுரங்களை உள்ளடக்கிய திருமாலை மற்றும் 10 பாசுரங்களை உள்ளடக்கிய திருப்பள்ளி எழுச்சி போன்ற நூல்களை எழுதியுள்ளார். திருப்பள்ளி எழுச்சியின் பாசுரங்கள் ரங்கநாதரைத் துயில் எழுப்புவதற்காகப் பாடப்பட்டுள்ளன.[5][6] அவரது பாசுரங்கள் அனைத்தும் திருவரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலின் பிரதான தெய்வமான அரங்கநாதரைப் புகழ்ந்து பேசுகின்றன. தொண்டரடிப்பொடி தனது காலத்தில் நிலவிய சாதி முறையைக் கடுமையாக எதிர்க்கிறார், மேலும் விஷ்ணுவை அடைய இறுதி வழி அவருக்கும் அவரது பக்தர்களுக்கும் சேவை செய்வதாகும் என்று குறிப்பிடுகிறார். அரங்கநாதர் கிருஷ்ணரைத் தவிர வேறு யாருமல்ல என்று அவர் நம்பினார், மேலும் அவர் தனது 38-ஆவது பாசுரத்தில் விஷ்ணுவின் பக்தர்கள் தங்கள் உடலை பூமியில் விட்டுவிட்டு, ஆனால் அவர்களின் ஆன்மாவைக் கடவுளுடன் இணைத்தனர் என்று கூறியுள்ளார்.[7] "பச்சைமாமலை போல் மேனி" என்று தொடங்கும் அவரது பாசுரம் மிகவும் பிரபலமான பாசுரமாக உள்ளது. பொதுவாக அனைத்து விஷ்ணு கோவில்களிலும், அன்றாட வழிபாட்டிலும், பண்டிகைகளிலும் இப்பாசுரம் ஓதப்படுகிறது.[8] திருப்பள்ளி எழுச்சியின் பாசுரங்கள் முதன்முதலில் திருவரங்கம் கோவிலில் பாடப்பட்டன. இந்த ஆழ்வார் பாடிய திருப்பள்ளி எழுச்சி ஓதப்படும் அதிகாலையில் அரங்கநாதர் எழுந்திருப்பதைக் காணப் பூமித்தாயின் மக்கள் வருகின்றனர்.[9] முன்னோடிதொண்டரடிப்பொடியாழ்வார் தமிழில் இயற்றிய அரங்கநாதன் மீது பாடப்பட்ட திருப்பள்ளியெழுச்சியே பள்ளியெழுச்சிவகை படைப்புகளுக்கு முன்னோடியாகத் திகழ்கிறது. மார்கழியில் மட்டும் திருமலை உட்பட அனைத்து வைணவ ஆலயங்களிலும் தொண்டரடிப்பொடியாழ்வார் தமிழில் இயற்றிய அரங்கநாதன் மீது பாடப்பட்ட திருப்பள்ளியெழுச்சியே பாடப்பெற்று வருகிறது. சிறப்பு"திருமாலை அறியாதர் திருமாலையே அறியாதர்" எனும் வழக்கு இவரின் படைப்புகளுள் ஒன்றான திருமாலையின் உயர்வைச் செப்புகிறது. இதன் பொருள் யாதெனில் ஆழ்வார் இயற்றிய திருமாலை எனும் நூலை அறிந்திடாதவர் பரமனாகிய திருமாலையே அறிந்திடாதவர்கள் ஆவார் என்பதாம். அல்லது பரமனாகிய திருமாலை அறிய விரும்புவோர் ஆழ்வாரின் திருமாலை எனும் நூலை படித்தால் போதுமென்பதாம். திருப்பள்ளியெழுச்சியின் முதல்துளிகாலைப்பொழுது விடிவதை வெகு இயல்பாக நம் கண்முன் காட்சிப்படுத்தும் இப்பாடல்களில் முதல்பாடல் இதோ:
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia