நீலக்கொடி கடற்கரைக்கான இலச்சினைநீலக்கொடி கடற்கரை, மலியா, கிரீட் தீவு
நீலக்கொடி கடற்கரை (Blue Flag), தூய்மையான சுற்றுச்சூழல் கொண்ட கடற்கரைகளுக்கு, நெதர்லாந்து நாட்டின் சுற்றுச்சூழல் கல்விக்கான அறக்கட்டளை வழங்கும் நீலக்கொடி விருது ஆகும்.[1][2]சுற்றுச்சூழல் கல்விக்கான அறக்கட்டளையில் 77 உறுப்பினர் நாடுகளின் 65 அமைப்புகள் செயல்படுகிறது. இதுவரை 48 நாடுகளில் 5,000 கடற்கரைகள் நீலக் கொடி விருது பெற்றுள்ளது. இந்தியா 12 கடற்கரைகளுக்கு நீலக்கொடி விருது பெற்றுள்ளது. அவற்றில் இரண்டு இலட்சத்தீவுகளில் உள்ளது.[3]
2022ஆம் ஆண்டு நிலவரப்படி, நீலக்கொடி விருது பெற்ற 621 கடற்கரைகளை உள்ளடக்கிய 700க்கும் மேற்பட்ட தளங்களுடன் ஸ்பெயின் முதலிடத்தில் உள்ளது, கிரேக்கம் 570 நீலக்கொடி கடற்கரைகளைக் கொண்டுள்ளது.
நீலக்கொடிக்கான விளக்கம்
நீலக் கொடி என்பது சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் சுகாதாரமான வசதிகளுடன் சுத்தமான கடற்கரைகளுக்கு வழங்கப்படும் ஒரு தன்னார்வ குறிச்சொல் ஆகும். சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சி நடைமுறைகள் மூலம் சுற்றுலாத் துறையில் நிலைத்தன்மையை ஊக்குவிக்கும் சூழல் சுற்றுலா மாதிரியின் ஒரு பகுதியாக இந்த விருது உள்ளது.
வரலாறு
நீலக் கொடி திட்டம் 1985இல் பிரான்சில் தொடங்கப்பட்டது. 1987ஆம் ஆண்டிலிருந்து ஐரோப்பாவிலும், 2001ஆம் ஆண்டு முதல் ஐரோப்பாவிற்கு வெளியே செயல்படுத்தப்பட்டது. ஜப்பான் மற்றும் தென் கொரியா நாடுகள் நீலக் கொடி கடற்கரைகளைக் கொண்ட முதல் ஆசிய நாடுகள் ஆகும்.
நீலக்கொடி பெறுவதற்கான தகுதிகள்
கடற்கரை நீலக்கொடி இலச்சினை பெறுவதற்கு கடல் நீரின் தரம், சுற்றுச்சூழல் மேலாண்மை, பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் தகவல் மற்றும் கல்வி ஆகியவற்றை உள்ளடக்கிய நான்கு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[4] அவைகள் பின்வருமாறு:
நீலக் கொடி கடற்கரையில் சிறந்த குளியலுக்கு தரமான நீர் கொண்டிருக்க வேண்டும்.
சுற்றுச்சூழல் கல்வி மற்றும் தகவல்: அனைத்து சான்றளிக்கப்பட்ட கடற்கரைகளிலும் குறைந்தபட்சம் ஒரு நீலக்கொடி தகவல் பலகை இருக்க வேண்டும். குளியல் நீரின் தரம் குறித்த தகவல் பலகையில் காட்டப்பட வேண்டும்.
சுற்றுச்சூழல் மேலாண்மை: சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காமல் பொழுதுபோக்கு நடவடிக்கைகளை நடத்தக்கூடிய கடற்கரைகளுக்கு மட்டுமே நீலக் கொடி அங்கீகாரம் வழங்கப்படுகிறது. நீலக் கொடி கடற்கரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள், பாதைகள், வாகன நிறுத்துமிடம் மற்றும் அணுகல் பாதைகள் ஆகியவை சுத்தமாகவும் நன்கு பராமரிக்கப்பட வேண்டும்.மேலும் இப்பகுதியில் குப்பைகள் குவிவதை அனுமதிக்கக்கூடாது. கடற்கரையில் கழிப்பறைகள் அல்லது ஓய்வறைகளின் எண்ணிக்கை போதுமானதாக இருத்தல் வேண்டும் மற்றும் பலகைகள் மூலம் எளிதாகக் கண்டறிய வசதிகள் இருக்க வேண்டும். அனுமதியின்றி முகாமிடுதல், வாகனம் ஓட்டுதல் மற்றும் குப்பை கொட்டுவது தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும் உதவிக்கான நாய்களைத் தவிர செல்லப்பிராணிகள், நீலக் கொடி கடற்கரையில் அனுமதிக்கக்கூடாது.
பாதுகாப்பு மற்றும் சேவைகள்:அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்களைக் கொண்ட நீலக் கொடி கடற்கரையானது தகுதிவாய்ந்த மற்றும் எளிதில் அடையாளம் காணக்கூடிய உயிர்காப்பாளர்களால் ரோந்துச் செல்லப்பட வேண்டும். தனிப்பட்ட மிதக்கும் சாதனம் (லைப் ஜாக்கெட்), முதலுதவி உபகரணங்கள் கடற்கரையில் இருக்க வேண்டும். உணவு விடுதி இருத்தல் வேண்டும். மேலும் நீலக்கொடி கடற்கரைகளுக்கு கட்டணமில்லாமல் அனுமதி அளிக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள் கடற்கரைகளை அணுகக்கூடிய வகையில் சாய்வுதளங்களை கொண்டிருக்க வேண்டும்.
ஒப்புதல் பெற்ற கடற்கரைகளில் மட்டுமே நீலக்கொடியை பறக்க விடவேண்டும்.
இந்தியாவில் நீலக்கொடி கடற்கரைகள்
இந்தியாவின் 12 கடற்கரைகள் நீலக்கொடி விருது பெற்றுள்ளது.[5]அவைகள் பின்வருமாறு: