பசில் ராஜபக்ச
பசில் ராஜபக்ச (Basil Rajapaksa; சிங்களம்: බැසිල් රාජපක්ෂ; பிறப்பு: 27 ஏப்ரல் 1951) இலங்கை அரசியல்வாதி ஆவார். இலங்கை பொதுசன முன்னணி கட்சியின் உறுப்பினரான இவர் இலங்கையின் முன்னாள் நிதி அமைச்சரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2005–2010 காலப்பகுதியில் அரசுத்தலைவர் மகிந்த ராசபக்சவின் மூத்த ஆலோசகராகப் பணியாற்றிய இவர், 2007 இல் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 2010 நாடாளுமன்றத் தேர்தலில் கம்பகா மாவட்டத்தில் போட்டியிட்டு அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றம் சென்றார். 2010 முதல் 2015 மகிந்த ராசபக்சவின் அமைச்சரவையில் பொருளாதார அபிவிருத்திக்கான அமைச்சராகவும் பணியாற்றினார்.[2] 2021 சூலையில் மீண்டும் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றம் சென்று கோட்டாபய ராஜபக்சவின் அமைச்சரவையில் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டார். இவரது பதவிக் காலத்தில் தீவிர அலட்சியம் மற்றும் தவறான நிர்வாகத்தின் காரணமாக பெரும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டார், இறுதியில் ஏப்ரல் 2022 இல் பொது மக்களின் அதிகரித்த எதிர்ப்புகளின் காரணமாக நிதி அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பின்னர் 2022 சூன் 9 அன்று தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகினார்.[3] பசில் ராஜபக்ச இலங்கைக் குடியுரிமையுடன் ஐக்கிய அமெரிக்க குடியுரிமையும் கொண்டுள்ளார்.[4] குடும்பம்பசில் இலங்கையின் தெற்கே ஒரு பிரபலமான அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை, டி. ஏ. ராஜபக்ச, ஒரு முக்கிய அரசியல்வாதியும், விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளரும், விஜயானந்த தகநாயக்காவின் அரசில் விவசாய, காணி அமைச்சராகவும் இருந்தவர். பசில் முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகர் (2010-2015) சாமல் ராஜபக்ச, முன்னாள் அரசுத்தலைவர் மகிந்த ராசபக்ச, தற்போதைய அரசுத்தலைவர் கோட்டாபய ராஜபக்ச ஆகியோரின் இளைய சகோதரர் ஆவார். இவர் தனது இடைநிலைக் கல்வியை கொழும்பில் உள்ள இசிபத்தான வித்தியாலயம், ஆனந்தா கல்லூரி ஆகியவற்றில் பயின்றார். கைதுஇவரின் அண்ணன் இலங்கை அதிபர் தேர்தலில் தோல்வியடைந்ததையடுத்து அந்த நாட்டைவிட்டு வெளியேறினார். அதன் பின் நேற்று[எப்போது?] இலங்கைக்கு வந்த இவரை அந்த நாடு காவல்துறையினர் ஒரு குற்ற வழக்கிற்காக கைது செய்தனர்.[5] மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia