ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe, රනිල් වික්රමසිංහ, பிறப்பு: 24 மார்ச் 1949) இலங்கை அரசியல்வாதியும், 8-ஆவது நிறைவேற்றதிகாரம் கொண்ட அரசுத்தலைவரும் ஆவார். அன்றைய கோட்டாபய ராஜபக்ச பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறியதை அடுத்து 2022 சூலை 21 இல் ரணில் விக்கிரமசிங்க அரசுத்தலைவரானார்.[1][2] இவர் இவர் 1994 முதல் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராகவும், 1993-1994, 2001-2004, 2015-2018, 2018-2019, 2022 காலப்பகுதிகளில் ஐந்து தடவைகள் பிரதமராகவும், 1994-2001, 2004-2015 காலப்பகுதிகளில் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்துள்ளார்.[3]
விக்கிரமசிங்கவின் அரசியல் கூட்டணியான நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி2015 நாடாளுமன்றத் தேர்தலில் 106 இடங்களைக் கைப்பற்றியது. ஆட்சி அமைப்பதற்குத் தேவையான 113 என்ற அறுதிப் பெரும்பான்மை கிடைக்காவிடினும், இலங்கை சுதந்திரக் கட்சியின் 35 உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவியை வழங்கியதன் மூலமும், 16 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிபந்தனையற்ற ஆதரவை வழங்க முன்வந்ததை அடுத்தும் ரணில் விக்கிரமசிங்க ஆட்சி அமைத்தார்.[6][7] 2018 அக்டோபர் 26 இல் விக்கிரமசிங்க அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேனவினால் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். முன்னாள் அரசுத்தலைவர் மகிந்த ராசபக்ச பிரதமராக நியமிக்கப்பட்டார். இதனை விக்கிரமசிங்க அரசியலமைப்புச் சட்டத்திற்குப் புறம்பானது எனக் கூறி பதவி விலக மறுத்தார். இதனை அடுத்து, அரசியலமைப்பு நெருக்கடி ஏற்பட்டது. விக்கிரமசிங்கவைப் பதவி விலக்கியது அரசியலமைப்புக்கு முரணானது என மீயுயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து, 2018 திசம்பர் 16 இல் விக்கிரமசிங்கவிற்கு மீண்டும் பிரதமர் பதவி வழங்கப்பட்டது. 2019 அரசுத் தலைவர் தேர்தலில்கோத்தாபய ராசபக்ச பெரும் வெற்றி அடைந்ததை அடுத்து, விக்கிரமசிங்க 2019 நவம்பர் 20 இல் பிரதமர் பதவியைத் துறந்தார்.[8] இவர் 2020 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டாலும், இவரது கட்சியில் இருந்து எவரும் நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகவில்லை.[9] இருப்பினும், கட்சிக்குக் கிடைத்த ஒரேயொரு தேசியப் பட்டியல் ஆசனம் மூலம் இவர் 2021 சூன் 23 அன்று நாடாளுமன்றம் சென்றார்.[10]
2022 சூலை 14 அன்று கோட்டாபய ராஜபக்ச தனது அரசுத்தலைவர் பதவியில் இருந்து விலகியதை அடுத்து, பிரதமராகப் பதவியில் இருந்த ரணில் விக்கிரமசிங்க சூலை 15 இல் பதில் அரசுத்தலைவரானார்.[16][17] 2022 சூலை 20 இல், 225 நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் ரணில் விக்கிரமசிங்க 134 வாக்குகள் பெற்று 8-வது நிறைவேற்றதிகாரம் கொண்ட அரசுத்தலைவராக அதிகாரபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட டளஸ் அளகப்பெரும 82 வாக்குகள் பெற்றார்.[18][19][20] 2024 இல் நடந்த மறுதேர்தலில் ரணில் சுயேச்சையாகப் போட்டியிட்டார், எனினும் அவரால் வெற்றி பெற முடியவில்லை, 17.27% வாக்குகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.[21][22]
ரணில் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து, 1970களின் நடுப்பகுதியில் களனி தொகுதிக்கான கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளரானார். பின்னர் பியகமை தொகுதியின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டு, 1977 தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார். ஜே. ஆர். ஜெயவர்தனாவின் புதிய அமைச்சரவையில் வெளிவிவகாரங்களுக்குப் பொறுப்பான துணை அமைச்சராகவும், பின்னர் இளைஞர் விவகார, வேலைவாய்ப்பு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். இலங்கையின் வயதில் குறைந்த அமைச்சர் என்ற பெயரையும் இதன் மூலம் பெற்றுக் கொண்டார்.[26] 1989 பெப்ரவரியில் ரணசிங்க பிரேமதாசாவின் அமைச்சரவையில் தொழிற்றுரை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இக்காலகட்டத்தில் ரணில் பியகமை சிறப்புப் பொருளாதார வலயத்தை உருவாக்கினார்.[27] 1990-இல்லறிவியல், தொழிநுட்பத்துக்கான அமைச்சுப் பொறுப்பும் கூடுதலாக வழங்கப்பட்டது. அரசுத்தலைவர் பிரேமதாசாவிற்குப் போட்டியாக கட்சியில் செயற்பட்ட லலித் அத்துலத்முதலி, காமினி திசாநாயக்கா ஆகிய மூத்த அரசியல்வாதிகளிடம் இருந்து ரணிலுக்கும் போட்டி இருந்து வந்தது.[28]
1988-1990 காலப்பகுதியில், ஜேவிபியின் ஆயுதமேந்திய கிளர்ச்சியை அடக்குவதற்கான அரசின் நடவடிக்கையின் ஒரு பகுதியாக கொழும்பிற்கு வெளியே பட்டலந்த குடியிருப்பு மற்றும் கைத்தொழில் வளாகத்தில் இருந்த சட்டவிரோத தடுப்பு முகாம் ஒன்றின் பின்னணியில் அப்போது அமைச்சராக இருந்த ரணில் விக்கிரமசிங்க இருந்துள்ளார் என்று மக்கள் கூட்டணி அரசாங்கத்தால் குற்றஞ்சாட்டப்பட்டது.[29][30]சந்திரிகா குமாரதுங்கவின் மக்கள் கூட்டணி அரசாங்கம், பட்டலந்த முகாமின் நடவடிக்கைகளை விசாரிப்பதற்காக சிறப்பு சனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை நியமித்தது. 1997 செப்டெம்பர் 3 அன்று விக்கிரமசிங்க ஆணைக்குழுவின் முன் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டார்.[31][32] ஆணைக்குழுவின் அறிக்கை 1998 ஏப்ரல் 12 அன்று வெளியிடப்பட்டது.[33] ஆணைக்குழுவின் அறிக்கைப்படி, "பட்டலந்தா வீட்டுத் திட்டத்தில் உள்ள வீடுகளில் சட்டவிரோத சித்திரவதை அறைகளைப் பராமரிப்பதற்கு ரணில் விக்கிரமசிங்கவுக்கும் மூத்த காவல்துறை அதிகாரி நளின் டெல்கொடவுக்கும் மறைமுகப் பொறுப்பு" இருந்ததாகக் கூறப்பட்டது.[34][35] அத்துடன், "வீட்டு வளாகத்தில் கிளர்ச்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள காவல்துறை அதிகாரிகளின் அங்கீகரிக்கப்படாத கூட்டங்களை நடத்தினார் நடத்தினார், அவர் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளார்" என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், இக்குற்றச்சாட்டுகளுக்கு குற்றவியல் நடவடிக்கைகள் எதுவும் நடைபெறவில்லை.[29]
பிரதமராக பதவி ஏற்பு
மகிந்த ராசபக்ச பிரதமர் பதவியிலிருந்து விலகியதை அடுத்து, இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ச ரணில் விக்கிரசிங்கேவை 12 மே 2022 அன்று இலங்கை பிரதமராக நியமித்தார்.[36]
அரசுத்தலைவர் (2022–2024)
2024 அரசுத்தலைவர் தேர்தல்
2024 அரசுத்தலைவர் தேர்தலில் விக்கிரமசிங்க போட்டியிடுவாரா என்று பல ஊகங்கள் இருந்தன. 2024 நடுப்பகுதியில், விக்கிரமசிங்க மீண்டும் தேர்தலில் போட்டியிடுவார் என்று சூசகமாக அறிவித்திருந்தார். ஆகத்து 2024 இல் தேர்தல் அறிவிக்கப்பட்டதால், சுயேச்சை வேட்பாளராக தேர்தலில் போட்டியிடப் போவதாக விக்கிரமசிங்க அறிவித்தார்.[21]ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கை பொதுசன முன்னணியில் இருந்து பிரிந்துவந்த உறுப்பினர்களால் ரணிளின் வேட்பு மனு அங்கீகரிக்கப்பட்டது.[37] அத்துடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்,[38]ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி,[39]மகாஜன எக்சத் பெரமுன.[40] ஆகிய கட்சிகளும் இவரை ஆதரிப்பதாக அறிவித்தன. இது விக்கிரமசிங்கவின் அரசுத்தலைவர் பதவிக்கான மூன்றாவது முயற்சியாகும், அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக போட்டியிடாத முதல் தடவையாகும்.
முதல் கட்ட வாக்கு எண்ணிக்கையின் முடிவில் விக்கிரமசிங்க 17.27% வாக்குகளை மட்டுமே பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார். வாக்கெடுப்பில் எந்த வேட்பாளரும் பெரும்பான்மை வாக்குகளைப் பெறாததால், தேர்தல்கள் இரண்டாம் கட்ட விருப்பு வாக்கு எண்ணிக்கைக்கு நகர்ந்தன, அங்கு இரண்டு முன்னணி வேட்பாளர்கள் மட்டுமே போட்டியில் இருந்தனர். நீக்கப்பட்ட வேட்பாளர்களின் இரண்டாவது, மூன்றாவது விருப்பத்தேர்வுகள் முதல் இரண்டு வேட்பாளர்களான அனுர குமார திசாநாயக்க, சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையே எண்ணப்பட்டன.[41][22] இரண்டாவது விருப்பத்தேர்வுகளின் எண்ணிக்கை முடிவடைந்த நிலையில், அனுர குமார திசாநாயக்க இலங்கையின் 9வது நிறைவேற்று சனாதிபதியாக அறிவிக்கப்பட்டார்.[42]
விக்கிரமசிங்க, தனது தோல்வியை ஏற்று, 2024 செப்டெம்பர் 23 அன்று அரசுத்தலைவர் செயலகத்தை விட்டு வெளியேறி, அவருக்குப் பின் அரசுத்தலைவராகப் பதவியேற்ற திசாநாயக்கவிற்கு அமைதியான முறையில் அதிகார மாற்றத்தை அனுமதித்தார்.[43]