கோட்டாபய ராஜபக்ச
நந்தசேன கோட்டாபய ராசபக்ச (Nandasena Gotabaya Rajapaksa; சிங்களம்: නන්දසේන ගෝඨාභය රාජපක්ෂ; பிறப்பு: 20 சூன் 1949) ஒரு முன்னாள் இலங்கை இராணுவ அதிகாரியும், அரசியல்வாதியும் ஆவார். இவர் 2019 நவம்பர் 18 முதல் 2022 சூலை 14 இல் பதவி விலகும் வரை இலங்கையின் 8-ஆவது அரசுத்தலைவராகப் பணியாற்றினார்.[6] இவர் முன்னதாக தனது அண்ணன் மகிந்த ராசபக்சவின் ஆட்சியில் (ஈழப்போரின் இறுதிக் கட்டத்திலும்) 2005 முதல் 2015 வரை பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவும், நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சுச் செயலாளராகவும் பணியாற்றினார். தென் மாகாணத்தின் பிரபலமான அரசியல் குடும்பத்தில் பிறந்த கோட்டாபய, கொழும்பு, ஆனந்தா கல்லூரியில் கல்வி கற்று, பின்னர் 1971 ஏப்ரலில் இலங்கை தரைப்படையில் சேர்ந்தார். தியத்தலாவை இராணுவப் பயிற்சி மையத்தில் அடிப்படைப் பயிற்சியைத் தொடர்ந்து, அவர் இயல்வுக்குறிப் படை அதிகாரியாக நியமிக்கப்பட்டார், பின்னர் பல காலாட் படைப்பிரிவுகளுக்கு மாற்றப்பட்டார். அவர் இலங்கை உள்நாட்டுப் போரின் ஆரம்ப கட்டங்களில் கஜபா படைப்பிரிவுடன் இணைந்து பணியாற்றினார். வடமராட்சி படை நடவடிக்கை, கடுமையான தாக்குதல் நடவடிக்கை, திரிவித பலய நடவடிக்கை போன்ற பல பெரிய இராணுவத் தாக்குதல்களில் பங்குபற்றினார். அத்துடன் 1987-89 ஜேவிபி கிளர்ச்சியின் போது எதிர்ப்பு கிளர்ச்சி நடவடிக்கைகளில் இவர் பெரும் பங்காற்றினார். கோட்டாபய இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்று தகவல் தொழில்நுட்பத் துறையில் நுழைந்தார், 1998 இல் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார். 2005 இல் அரசுத்தலைவர் தேர்தலில் தனது சகோதரருக்கு பரப்புரையில் உதவுவதற்காக இலங்கை திரும்பினார். பின்னர் சகோதரரின் நிர்வாகத்தில் பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்பட்டார். இவரது பதவிக்காலத்தில், இலங்கை ஆயுதப் படையினர் உள்நாட்டுப் போரில் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்து 2009 இல் வெற்றிகரமாக முடித்தனர். 2006 திசம்பரில் விடுதலைப் புலிகள் இவர் மீது கொழும்பில் மேற்கொண்ட தற்கொலைத் தாக்குதலில் காயமெதுவுமின்றி உயிர் தப்பினார். ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் இராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப் புலித் தலைவர்களைக் கொல்ல உத்தரவிட்டமை போன்ற பல போர்க்குற்றச்சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.[7] போருக்குப் பிறகு, கோட்டாபய பல நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடங்கினார். 2015 அரசுத்தலைவர் தேர்தலில் இவரது சகோதரர் மகிந்த ராசபக்ச தோல்வியடைந்ததைத் தொடர்ந்து பதவி விலகினார். 2019 அரசுத்தலைவர் தேர்தலுக்கான இலங்கை பொதுசன முன்னணி வேட்பாளராக கோட்டாபய போட்டியிட்டு, தேசியவாத சார்பு, பொருளாதார வளர்ச்சி, தேசிய பாதுகாப்பு போன்ற கொள்கைகளை முன்னெடுத்து[8][9] தீவின் சிங்கள வாக்காளர்களின் பெரும் ஆதரவோடு 52.25% வாக்குகள் பெற்று 7-வது நிறைவேற்றதிகாரம் கொண்ட அரசுத்தலைவராக 2019 நவம்பர் 17 அன்று தேர்ந்தெடுக்கப்பட்டு, இலங்கையின் இராணுவப் பின்னணியைக் கொண்ட முதல் அரசுத்தலைவரானார்.[10] இவர் அரசுத்தலைவராக இருந்த போது, இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் இருபதாவது திருத்தம் மூலம் தனது பதவி அதிகாரங்களை அதிகரித்தார், ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் பல அதிகார பதவிகளுக்கு நியமிக்கப்பட்டனர். கோவிடு-19 தொற்றுநோய் தொடங்கிய 2020 காலப்பகுதியில் வெற்றிகரமாக நாட்டை வழிநடத்தினார். ஆனாலும், 1948 இல் நாடு விடுதலை பெற்ற பின்னர் இலங்கை முதல் தடவையாகக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலையை அறிவிக்கும் வகையில் பொருளாதார முறைகேடு நாட்டை 2022 தொடக்கத்தில் திவாலாக்கியது. கோட்டாவை வெளியேறக்கோரி 2022 ஏப்ரல் முதல் நாடெங்கும் போராட்டங்கள் இடம்பெற்றன. ராஜபக்ச நிர்வாகம் நெருக்கடி நிலையை அறிவித்தது. இதன் மூலம், காவல்துறையினர் பொதுமக்களைக் கைது செய்வதற்கும், ஊரடங்கை விதிப்பதற்கும், சமூக ஊடகங்களைக் கட்டுப்படுத்துவதற்கும், எதிர்ப்பாளர்களையும் பத்திரிகையாளர்களையும் தாக்குவதற்கும், இணைய ஆர்வலர்களைக் கைது செய்வதற்கும் அனுமதித்தது. கோட்டாபய ராஜபக்ச பதவி விலக மறுத்துவிட்டார், அமைதியான போராட்டக்காரர்களுக்கு எதிராக மகிந்த ராசபக்சவின் ஆதரவாளர்கள் திட்டமிட்ட தாக்குதல்களை நடத்தியதை அடுத்து, எதிர்ப்புகள் வன்முறையாக மாறியது. துப்பாக்கிச் சூடு உத்தரவுகளுடன் அரசாங்கம் இராணுவத்தை கவச வாகனங்களில் நிறுத்தியது.[11][12][13] 2022 சூலை 13 அன்று, கோட்டாபய இராணுவ விமானம் மூலம் நாட்டை விட்டு மாலைத்தீவுகள் வழியாக சிங்கப்பூருக்குத் தப்பிச் சென்றார்.[14][15] அவர் இலங்கையில் இல்லாத நேரத்தில் சனாதிபதியின் பணிகளை கடமைகளை நிறைவேற்றுவதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை தற்காலிக அரசுத்தலைவராக நியமித்தார்.[16] 2022 சூலை 14 அன்று, கோட்டாபய தனது பதவி விலகல் கடிதத்தை சிங்கப்பூரில் இருந்து அதிகாரப்பூர்வமாக அனுப்பினார்.[17] சிங்கப்பூரில் 28 நாட்கள் தங்கியிருந்த கோட்டாபய, 2022 ஆகத்து 11 அன்று தாய்லாந்து சென்றார். கோட்டாபயவின் பாதுகாப்பை இலங்கை அரசு உறுதி செய்ததை அடுத்து அவர் மீண்டும் 2022 செப்டபம்பர் 2 அன்று இரவு இலங்கை திரும்பினார்.[18] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்![]() விக்கிப்பல்கலைக்கழகத்தில் Gota Go Home! The Downfall of Sri Lanka's War Hero பற்றிய கற்றற் பொருள்கள் உள்ளன. |
Portal di Ensiklopedia Dunia