மம்லூக்கிய மரபு (தில்லி)
குதுப் மினார் மினார் பொறிப்புகளைக் கொண்ட அடிப் பகுதி குதுப் மினாரானது குத்புத்தீன் ஐபக்கால் 1199இல் ஆரம்பிக்கப்பட்டு, இவரது மருமகன் சம்சுத்தீன் இல்த்துத்மிசால் 1220இல் முடிக்கப்பட்டது. மம்லூக் அரசமரபின் வேலைப்பாடுகளின் ஒரு எடுத்துக்காட்டு இதுவாகும். ஆப்கானித்தானில் உள்ள முந்தைய ஜாம் மினாரை ஓரளவுக்கு இது ஒத்துள்ளது. மம்லூக்கிய அரசமரபு (பொருள். அடிமை அரசமரபு), அல்லது மம்லூக் சுல்தானகம் என்பது இந்தியாவில் கோரி நிலப்பரப்புகளை ஆண்ட மம்லூக் பூர்வீகத்தை உடைய மூன்று அரசமரபுகளைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படும் வரலாற்றுவரைவியல் பெயர் அல்லது மேலோட்டமான சொல்லாகும். இறுதியாக இவர்கள் தில்லி சுல்தானகத்தை 1206 முதல் 1290 வரை ஆண்டனர்.[9][10][11] அந்த மூன்று அரச மரபுகள் குத்பி அரசமரபு (1206-1211), முதல் இல்பாரி அல்லது சம்சி அரசமரபு (1211-1266) மற்றும் இரண்டாவதுல் இல்பாரி அரசமரபு (1266-1290) ஆகியவை ஆகும்.[12] மம்லூக் அரசமரபு நிறுவப்படுவதற்கு முன்னர் கோரி அரசமரபின் நிர்வாகியாக குத்புத்தீன் ஐபக்கின் பணிக் காலமானது 1192 முதல் 1206 வரை நீடித்திருந்தது. இக்காலகட்டத்தில் சிந்து-கங்கைச் சமவெளி மீது மேலோட்டமான தாக்குதல்களை ஐபக் நடத்தினார். புதுப் பகுதிகளில் சிலவற்றின் மீது கட்டுப்பாட்டை நிறுவினார்.[13][14] இந்த அரசமரபின் கடைசி ஆட்சியாளரான சம்சுதீன் கைகுமர்சு ஒரு குழந்தையாவார். அவர் ஜலாலுதீன் ஃபைருஸ் கல்சியால் கொல்லப்பட்டார். ஜலாலுதீன் கல்சி வம்சத்தை நிறுவினார். வரலாறுநடு ஆசியாவைச் சேர்ந்த கோரிப் பேரரசின் ஒரு துருக்கிய மம்லூக் தளபதியான குத்புத்தீன் ஐபக்கால் மம்லூக் அரசமரபானது நிறுவப்பட்டது. மம்லூக் என்பவர்கள் அடிமைப் பூர்வீகத்தைக் கொண்ட போர் வீரர்கள் ஆவர். இவர்கள் இசுலாமுக்கு மதம் மாறியிருந்தனர். இத்தகைய நிகழ்வானது 9ஆம் நூற்றாண்டில் தொடங்கியது. பல்வேறு முசுலிம் சமூகங்களில் மம்லூக்குகள் படிப்படியாக ஒரு சக்தி வாய்ந்த இராணுவ வர்க்கத்தினராக உருவாயினர். மம்லூக்குகள் அரசியல் மற்றும் இராணுவ அதிகாரங்களை மிகக் குறிப்பாக எகிப்தில் கொண்டிருந்தனர். ஆனால், லெவண்ட், ஈராக்கு, மற்றும் இந்தியாவிலும் கூட கொண்டிருந்தனர். 1206இல் கோரிப் பேரரசின் சுல்தான் கோரின் முகம்மது அரசியல் கொலை செய்யப்பட்டார்.[15] அவருக்கு ஆண் வாரிசுகள் இல்லை என்ற காரணத்தால் அவரது பேரரசானது அவருடைய முன்னாள் மம்லூக் தளபதிகளால் தலைமை தாங்கப்பட்ட சிறிய சுல்தானகங்களாகப் பிரிந்தது. தாஜுதீன் இல்தோசை காசுனியின் ஆட்சியாளராகவும், பக்தியார் கல்சி வங்காளத்தையும், நசிருதீன் கபாச்சா முல்தானின் சுல்தானாகவும் ஆயினர். குத்புத்தீன் ஐபக் தில்லியின் சுல்தானானார். இதுவே மம்லூக் அரசமரபின் தொடக்கம் ஆகும். ஐபக்கின் ஆட்சியாளரான கோரின் முகம்மது அரசியல் கொலை செய்யப்பட்ட போது ஐபக் அதிகாரத்திற்கு உயர்ந்தார். இரண்டாம் தில்லி சுல்தானாக இவரது ஆட்சியானது குறுகிய காலத்திற்கே இருந்தது.[16] ஏனெனில், 1210ஆம் ஆண்டே இவர் இறந்து விட்டார். இவருக்குப் பிறகு அரியணைக்கு வந்த ஆராம் ஷா 1211ஆம் ஆண்டு சம்சுத்தீன் இல்த்துத்மிசால் அரசியல் கொலை செய்யப்பட்டார். 1228-29க்கு இடையில் அப்பாசியக் கலீபகத்துடன் உளங்கனிந்த தூதரக உறவுகளை இல்த்துத்மிசின் கீழான சுல்தானகமானது நிறுவியது. செங்கிஸ் கான் மற்றும் அவருக்குப் பின் வந்தவர்களின் படையெடுப்புகளால் இந்தியா பாதிக்கப்படாமல் காத்துக் கொண்டது.[10] 1236இல் இல்த்துத்மிசின் இறப்பைத் தொடர்ந்து ஒரு தொடர்ச்சியான பலவீனமான ஆட்சியாளர்கள் அதிகாரத்தில் தொடர்ந்தனர். சுல்தானகத்தின் மாகாணங்கள் மீது ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான உயர் குடியினர் சுயாட்சி பெற்றனர். அதிகாரமானது உருக்னுதீன் பிரோசுவிடமிருந்து ரசியா பேகத்திடம் கைமாறியது. கியாசுத்தீன் பல்பான் அரியணைக்கு உயரும் வரை இந்நிலை நீடித்தது. சகதாயி கானரசின் படையெடுப்புகளிலிருந்து சுல்தானகத்திற்கு வந்த வெளிப்புற அச்சுறுத்தல்கள் மற்றும் எதிர்ப்புக் குணம் கொண்ட சுல்தானக உயர் குடியினரிடமிருந்து வந்த உள்நாட்டு அச்சுறுத்தல்கள் ஆகிய இரண்டையும் இவர் வெற்றிகரமாக முறியடித்தார்.[10][16] குறைந்தது 13ஆம் நூற்றாண்டின் இறுதி வரை இந்தியாவில் மம்லூக் சுல்தானகத்தை இவர்கள் ஆண்ட போது கோரி இன துருக்கியர்கள் தங்களது இனப் பண்புகளைப் பேணி வந்தனர். துருக்கிய மொழியைத் தங்களது முதன்மையான மொழியாகத் தொடர்ந்து பயன்படுத்தினர். பாரசீக மொழியைப் பயன்படுத்தவில்லை. பாரசீக "பேனா மனிதர்கள்" என்பதற்கு எதிராக "வாள் மனிதர்கள்" என்ற தங்களது பண்பினிமையற்ற மற்றும் ஆக்ரோஷமான வழிகளில் துருக்கியர்கள் விடாப்பிடியாக இருந்தனர்.[8] பல்பானின் பேரனான முயிசுதீன் கைகபத் மம்லூக் அரசமரபின் ஆட்சியாளர்களில் கடைசியானவராக இருந்தார். இவரை ஜலாலுதீன் ஃபைருஸ் கல்சி பதவியிலிருந்து தூக்கி எறிந்தார். இவ்வாறாக கல்சி வம்சமானது உருவாக்கப்பட்டது. ஜலாலுதீன் ஃபைருஸ் கல்சி தில்லியில் அரியணையைப் பெற்றார்.[17] சுல்தான்கள்![]() மம்லூக் அரசமரபின் முதல் சுல்தான் குத்புத்தீன் ஐபக் ஆவார். இவர் சுல்தான் என்ற பட்டத்துடன் 1206 - 1210இல் ஆட்சி புரிந்தார். முல்தானின் நசிருதீன் கபாச்சா மற்றும் காசுனியின் தாஜூதீன் இல்தோசு ஆகியோரின் கிளர்ச்சிகளை இவர் தற்காலிகமாக ஒழித்தார்.[18] தன்னுடைய தலைநகராக இலாகூரை ஆக்கினார். தில்லி மீதான தனது நிர்வாக அதிகாரத்தின் வழியாக வட இந்தியா மீது தன்னுடைய கட்டுப்பாட்டை இவர் நிலைநிறுத்தினார். தில்லியின் தொடக்க கால முசுலிம் நினைவுச் சின்னங்களான குவ்வத் உல்-இசுலாம் மசூதி மற்றும் குதுப் மினார் கட்டப்படுவதையும் கூடத் தொடங்கி வைத்தார்.[18] 1210இல் இலாகூரில் செண்டாட்டம் விளையாட்டை ஆடிக் கொண்டிருந்த போது ஏற்பட்ட ஒரு விபத்தின் காரணமாக பெற்ற காயங்களால் இவர் இறந்தார். குதிரையிலிருந்து கீழே விழுந்த போது தன்னுடைய குதிரை சேணத்தின் கூர்மையான பகுதி குத்தியதால் இவர் இறந்தார். இலாகூரின் அனார்கலி பசாருக்கு அருகில் இவர் புதைக்கப்பட்டார்.[18] இரண்டாவது சுல்தான் ஆராம் ஷா ஆவார். 1210 - 1211ஆம் ஆண்டு வரை சுல்தான் என்ற பட்டத்துடன் ஆராம் ஷா ஆட்சி செய்தார். சிகல்கானி (பொருள். நாற்பது பேர்) என்ற பெயருடைய 40 உயர் குடியினரின் ஒரு மேல் தட்டுக் குழுவானது ஆராம் ஷாவுக்கு எதிராக சதித் திட்டம் தீட்டியது. பதாவுனின் ஆளுநராக இருந்த சம்சுத்தீன் இல்த்துத்மிசை ஆராம் ஷாவை இடம் மாற்றுமாறு வேண்டியது. 1211இல் தில்லிக்கு அருகில் சுத் சமவெளியில் இல்த்துத்மிசு ஆராம் ஷாவைத் தோற்கடித்தார். ஆராம் ஷாவுக்கு பின்னர் என்ன ஆனது என்று சரியாகத் தெரியவில்லை.[18] மூன்றாவது சுல்தான் சம்சுத்தீன் இல்த்துத்மிசு ஆவார். இவர் நசீர் அமீர்-உல்-முமினின் என்ற பட்டத்தைக் கொண்டிருந்தார். 1211 முதல் 1236 வரை ஆட்சி செய்தார். இவர் தன்னுடைய தலைநகரத்தை இலாகூரிலிருந்து தில்லிக்கு மாற்றினார். அரசின் கையிருப்புப் பணத்தை மூன்று மடங்காக்கினார்.[18] முல்தானின் நசிருதீன் கபாச்சா மற்றும் காசுனியின் தாஜுதீன் இல்தோசு ஆகியோரைத் தோற்கடித்தார். இவர்கள் தில்லி அரியணைக்குப் போட்டியாளர்களாகத் தங்களைத் தாமே அறிவித்திருந்தனர்.[18] 1221இல் செங்கிஸ் கான் சிந்து ஆற்று யுத்தத்தில் கடைசி குவாரசமிய ஷாவான சலாலத்தீன் மிங்புர்னுவைத் தோற்கடித்தார். அவரைத் துரத்திக் கொண்டு இந்தியாவுக்குள் மங்கோலியர்கள் புகுந்தனர். செங்கிஸ் கானின் இறப்பிற்குப் பிறகு வட இந்தியாவில் இழந்த நிலப்பரப்புகளில் பெரும்பாலானவற்றை மீண்டும் பெற்றதன் மூலம் தன்னுடைய நிலையை இல்த்துத்மிசு வலுப்படுத்தினார். துருக்கிய-ஆப்கானியத் தளபதியான பக்தியார் கில்ஜி மற்றும் வங்காளத்தின் கல்சி அரசமரபைச் சேர்ந்த இவரது வழித்தோன்றல்கள் ஆகியோரிடமிருந்து வங்காளமானது இறுதியாக தில்லி சுல்தானாகத்தில் 1227இல் இணைக்கப்பட்டது.[15][19] 1230இல் தில்லியின் மெக்ராலியில் கௌசி சம்சி என்ற நீர்த் தேக்கத்தை இவர் கட்டினார். 1231இல் சுல்தான் காரி என்ற கட்டடத்தைக் கட்டினார். தில்லியில் கட்டப்பட்ட முதல் இசுலாமியக் கல்லறை இதுவாகும்.[18] ![]() நான்காவது சுல்தான் உருக்னுதீன் பிரோசு ஆவார். இவர் சுல்தான் என்ற பட்டத்துடன் ஏப்ரல் 1236 முதல் நவம்பர் 1236 வரை ஆட்சி புரிந்தார். இவர் ஏழு மாதங்களுக்கு மட்டுமே ஆட்சி புரிந்தார். இவரது தாய் ஷா துர்கன் அனைத்து நடைமுறை ரீதியிலான தேவைகளுக்காகவும் அரசாங்கத்தை நடத்திக் கொண்டிருந்தார். இவர் தனி நபர் இன்பம், மது மற்றும் மாது ஆகியவற்றுக்கு அடிமையாகி தன்னைத் தானே தொலைத்திருந்தார். இவர் மீது குடிமக்கள் பெரிதும் சினம் கொண்டிருந்தனர். 9 நவம்பர் 1236 அன்று உருக்னுதீன் பிரோசு மற்றும் அவரது தாய் ஷா துர்கன் ஆகியோர் சிகல்கானி எனும் 40 பேர் குழுவால் அரசியல் கொலை செய்யப்பட்டனர். ஐந்தாவது சுல்தானா ரசியா அல்தின் ஆவார். இவர் ஜலாலத்துதீன் ரசியா சுல்தானா என்ற பட்டத்தைக் கொண்டிருந்தார். இவர் 1236 முதல் 1240 வரை ஆட்சி புரிந்தார். இந்தியாவில் முதல் பெண் முசுலிம் ஆட்சியாளராக இவர் தொடக்கத்தில் உயர்குடியினரின் நன்மதிப்பைப் பெற்றார். சுல்தானகத்தை நிர்வாக ரீதியாக நல்ல முறையில் நடத்தினார். எனினும், ஆப்பிரிக்கரான ஜமாலுதீன் யகுத் என்பவருடன் இணைந்து செயல்பட இவர் தொடங்கினார். உயர்குடியினர் மற்றும் மதகுருக்கள் மத்தியில் இன ரீதியான பகைமை உணர்வை இது தூண்டியது. ஏனெனில், உயர்குடியினரும், மத குருமார்களும் முதன்மையாக நடு ஆசிய துருக்கியர்களாக இருந்தனர். அவர்கள் ஏற்கனவே ஒரு பெண் ஆட்சியாளரின் ஆட்சியை வெறுத்தனர். மாலிக் அல்துனியா என்ற சக்தி வாய்ந்த உயர்குடியினர் ஒருவரை இவர் திருமணம் செய்ய ஒப்புக் கொண்டார். அவர் ரசியாவைத் தோற்கடித்தார். இவரது ஒன்று விட்ட சகோதரர் முயிசுதீன் பக்ரம், எனினும், சிகல்கானி எனும் 40 பேர்களின் உதவியுடன் அரியணையை முறையற்ற வகையில் கைப்பற்றிக் கொண்டார். சுல்தானா மற்றும் அவரது கணவரின் ஒன்றிணைந்த படைகளைத் தோற்கடித்தார். கணவன், மனைவி இருவரும் தப்பித்து ஓடினர். கைத்தல் என்ற இடத்தை அடைந்தனர். அங்கு இவர்களுடன் உடனிருந்த படைகளும் இவர்களைக் கைவிட்டனர். ஜாத் இன மக்களின் கைகளில் இவர்கள் இருவரும் விழுந்தனர். அவர்கள் இவர்களிடம் கொள்ளையடித்து 14 அக்டோபர் 1240 அன்று இருவரையும் கொன்றனர்.[18] ஆறாவது சுல்தான் முயிசுதீன் பக்ரம் ஆவார். இவர் சுல்தான் என்ற பட்டத்துடன் 1240 முதல் 15 மே 1242 வரை ஆட்சி புரிந்தார். இவரது ஆட்சியின் போது சிகல்கானி எனும் 40 குழுவினர் ஒழுங்கற்ற முறையில் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டனர். இத்தகைய அமைதியற்ற காலத்தின் போது தான் மங்கோலியர் பஞ்சாப் மீது படையெடுத்தனர். இலாகூரைச் சூறையாடினர். பக்ரம் அவர்களுக்கு எதிராக எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதற்கு மிகவும் பலவீனமானவராக இருந்தார். சிகல்கானி தில்லியில் உள்ள வெள்ளைக் கோட்டையில் வைத்து பக்ரத்தை முற்றுகையிட்டனர். 1242ஆம் ஆண்டு இவருக்கு மரண தண்டனை கொடுத்தனர்.[18] ஏழாவது சுல்தான் அலாவுதீன் மசூத் ஆவார். இவர் சுல்தான் என்ற பட்டத்துடன் 1242 முதல் 1246 வரை ஆட்சி புரிந்தார். இவர் உண்மையில் சிகல்கானியின் ஒரு கைப்பாவை ஆட்சியாளராக இருந்தார். அரசாங்கத்தில் அதிகாரம் அல்லது செல்வாக்கை இவர் உண்மையில் கொண்டிருக்கவில்லை. மாறாக பொழுதுபோக்கு மற்றும் மது மீதான தனது விருப்பத்திற்காக இவருக்குக் கெட்ட பெயர் ஏற்பட்டது. 1246 வாக்கில் அதிக அதிகாரத்திற்காக அலாவுதீன் மசூத்தின் அதிகரித்து வந்த பசியால் பிற தலைவர்கள் கவலையும், வருத்தமும் கொண்டிருந்தனர். மசூத்திற்குப் பதிலாக இவரது உறவினர் நசிருதீன் மகுமூதுவை அரியணையில் அமர வைத்தனர். மகுமூது இல்த்துத்மிசின் மற்றொரு பேரன் ஆவார்.[18] எட்டாவது சுல்தான் நசிருதீன் மகுமூது ஆவார். இவர் நசிருதீன் ஷா பெரோஸ் என்ற பட்டத்துடன் 1246 முதல் 1266 வரை ஆட்சி புரிந்தார். ஓர் ஆட்சியாளராக மகுமூது மிகவும் மதம் சார்ந்தவராகவும், தன்னுடைய நேரத்தில் பெரும்பாலானவற்றை பிரார்த்தனைக்குச் செலவிடுபவராகவும், ஏழ்மை மற்றும் இக்கட்டான நிலையில் உள்ளவர்களுக்கு உதவி புரிவதற்காகப் புகழ் பெற்றவராகவும் இருந்தார். இவரது துணை சுல்தானக கியாத்துதீன் பல்பானே முதன்மையாக அரசு விவகாரங்களைக் கவனித்துக் கொண்டார்.[18] ஒன்பதாவது சுல்தான் கியாத்துதீன் பல்பான் ஆவார். இவர் சுல்தான் என்ற பட்டத்துடன் 1266 முதல் 1287 வரை ஆட்சி புரிந்தார். ஓர் இரும்புக் கரத்துடன் ஆட்சி புரிந்தார். சிகல்கானி உயர்குடியினரின் குழுவைக் கலைத்தார். இந்தியாவில் அமைதி மற்றும் ஒழுங்கை நிறுவ முயற்சி செய்தார். ஒழுங்கற்று இருக்கும் அனைத்துப் பகுதிகளிலும் போர் வீரர்களைக் கோட்டை காவல் படையினராகக் கொண்ட பல வெளிக் காவல் இடங்களைக் கட்டமைத்தார். அரசனுக்கு ஒவ்வொருவரும் விசுவாசமாக இருப்பதை உறுதி செய்ய முயற்சித்தார். எனவே இவர் ஒரு திறமையான ஒற்றர் அமைப்பை நிறுவினார். மங்கோலியர்களுக்கு எதிராகவும் கூட இவர் சண்டையிட்டார். அவர்களால் நடத்தப்பட்ட பல படையெடுப்புகளை முறியடித்தார். அவர்களுக்கு எதிராகப் பியாசு ஆற்றுப் போரில் தன்னுடைய விருப்பத்திற்குரிய மகனான இளவரசன் முகம்மதுவை இவர் இழந்தார்.[18] பத்தாவது மற்றும் கடைசி சுல்தான் முயிசுதீன் முகம்மது கைகபத் ஆவார். இவர் சுல்தான் என்ற பட்டத்துடன் 1287 முதல் 1290 வரை ஆட்சி புரிந்தார். அந்த நேரத்தில் மிகவும் இளையவராக இருந்ததால் இவர் அனைத்து அரசு விவகாரங்களையும் பொருட்படுத்தாமல் விட்டு விட்டார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இவருக்கு முடக்கு வாதம் ஏற்பட்டது. 1290இல் ஒரு கல்சி தலைவரால் இவர் பின்னர் கொலை செய்யப்பட்டார். இவரது மூன்று வயது நிரம்பிய மகனான கயுமர்சு பெயரளவில் இவருக்குப் பின் ஆட்சிக்கு வந்தார். கல்சிக்களின் வளர்ச்சிக்குப் பிறகு மம்லூக் அரசமரபானது முடிவுக்கு வந்தது.[18] கட்டடக்கலைமம்லூக் அரசமரபின் கட்டடக்கலை மரபானது பின்வருவனவற்றை உள்ளடக்கியுள்ளது:[18] கந்தக் கிணறு நீரற்ற நிலை நீர் நிரப்பப்பட்ட நிலை குத்புத்தீன் ஐபக் (1150–1210)
இல்த்துத்மிசு (ஆட்சி. 1211–1236)
பிற ஆட்சியாளர்கள்
குடும்ப வரைபடம்முதலாம் சுல்தான் குத்புத்தீன் ஐபக்கிற்குப் பிறகு ஆராம் ஷா பதவிக்கு வந்தார். அவரை ஐபக்கின் மருமகன் சம்சுத்தீன் இல்த்துத்மிசு பதவியில் இருந்து தூக்கி எறிந்தார்.
இல்த்துத்மிசின் வழித் தோன்றல்கள் 1266ஆம் ஆண்டு வரை ஆட்சி புரிந்தனர். அப்போது முதலாம் மகுமூதுவின் மாமனாரும், விசியருமான கியாசுத்தீன் பல்பான் அரியணையை முறையற்ற வகையில் கைப்பற்றினார்.
மேலும் காண்க
மேற்கோள்கள்
ஆதாரங்கள்
மேலும் படிக்க
வெளி இணைப்புகள்![]() விக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: மம்லூக்கிய மரபு (தில்லி) |
Portal di Ensiklopedia Dunia