மார்க்கஸ் அரேலியஸ்
மார்கஸ் அரேலியஸ் (/ɑːˈriːliəs/ or /ɑːˈriːljəs/;[1] இலத்தீன்: Marcus Aurelius Antoninus Augustus; ( 26 ஏப்ரல் 121 - 17 மார்ச் 180) என்பவர் கி.பி 161 முதல் 180 வரை உரோமைப் பேரரசராகவும் உறுதிப்பாட்டுவாத மெய்யிலராகவும் இருந்தார். இவர் ஐந்து நல்ல பேரரசர்கள் என்று அழைக்கப்பட்ட ஆட்சியாளர்களில் கடைசி மன்னராவார். மேலும் பாக்ஸ் ரோமானாவின் கடைசி பேரரசர், உரோமைப் பேரரசின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை காலக்கட்டத்துக்குச் சொந்தக்காரர். கி.பி 140, 145 மற்றும் 161 ஆம் ஆண்டுகளில் உரோமானிய தூதராக பணியாற்றியவர். இவர் மார்கஸ் அன்னியஸ் வெரஸ் (III) மற்றும் டொமிடியா லூசில்லா ஆகியோருக்கு மகனாக உரோமானியப் பேரரசர் ஹட்ரியன் ஆட்சியின் போது பிறந்தார். இவர் பிறந்து மூன்று மாதத்தில் இவரது தந்தை இறந்தார். இவரது தந்தையின் மரணத்தைத் தொடர்ந்து, மார்கசை இவரது தாயார் மற்றும் தாத்தா மார்கஸ் அன்னியஸ் வெரஸ் (II) ஆகியோர் வளர்த்தனர். 138 இல் உரோமப் பேரரசர் ஹட்ரியனின் வளர்ப்பு மகன் ஏலியஸ் சீசர் இறந்ததைத் தொடர்ந்து, மார்கசின் மாமாவான அன்டோனினஸ் பியசை தனது புதிய வாரிசாக மன்னர் ஏற்றுக்கொண்டார். இதன் பிறகு, அன்டோனினஸ் மார்கசையும் ஏலியஸின் மகனான லூசியசையும் தத்தெடுத்தார் (பின்னர் மார்கசுடன் லூசியஸ் வெரசும் இணைந்து உரோமைப் பேரரசராக ஆட்சி செய்தார்). அந்த ஆண்டு ஹட்ரியன் இறந்தார், அன்டோனினஸ் பேரரசரானார். இப்போது சிம்மாசனத்தின் வாரிசாக ஆன மார்கஸ், ஹீரோட்ஸ் அட்டிகஸ் மற்றும் மார்கஸ் கொர்னேலியஸ் ஃப்ராண்டோ போன்ற ஆசிரியர்களிடம் கிரேக்க மற்றும் லத்தீன் மொழிகளைக் கற்றார். பின்னர் பல ஆண்டுகள் இவர் தன் ஆசிரியரான ஃபிரான்டோவுடன் நெருங்கிய கடிதத் தொடர்பு கொண்டிருந்தார். மார்கஸ் 145 இல் அன்டோனினசின் மகள் ஃபாஸ்டினாவை மணந்தார். அன்டோனினஸ் 161 இல் ஒரு நோய் பாதிப்பால் இறந்தார். அவர் இறந்த பிறகு மன்னரின் இன்னொரு வளர்ப்பு மகனான லூசியஸ் வெரசுடன் இணைந்து அரியாசனம் ஏறி இருவரும் சம உரிமையுடன் சக்ரவர்த்திகளாக இருந்துகொண்டு நாட்டை ஆளத் துவங்கினர். சுமார் எட்டு வருஷங்கள் இவ்வாறு ஆட்சி நடந்துவந்ததது. ஒன்பதாவது ஆண்டில் வேரஸ் இறந்தார். அதன் பிறகு மார்க்கஸ் ஏகச் சக்கரவர்த்தியாக ஆட்சியை நடத்திவந்தார்.
இவரது முன்னோடிகளில் சிலரைப் போல, மார்கஸ் ஒரு வாரிசைத் தத்தெடுக்க விரும்பவில்லை. இவரது பிள்ளைகளில் லூசியசை மணந்த லூசில்லா மற்றும் கொமோடஸ் ஆகியோர் அடங்குவர். மார்கசுக்குப் பின் ஆட்சிக்கு வந்தவர் குறித்து சமகால மற்றும் நவீன வரலாற்றாசிரியர்களிடையே விவாதத்திற்கு உட்பட்டதாக உள்ளது. இவருடைய நினைவாக ரோமாபுரியில் ஒரு கோபுரம் கட்டி அதில் இவர் குதிரைமீது அமர்ந்த தோற்றத்தில் சிலையை நிறுவினர். இச்சிலை இன்னும் ரோமில் நிற்கிறது, அங்கு இவரது இராணுவ வெற்றிகளைக் கொண்டாடும் வகையில் இந்த சின்னங்கள் அமைக்கப்பட்டன. மெடிடேசன்ஸ், "தத்துவஞானியின்" எழுத்துக்கள் - என்பது இவர் எழுதிய நூலாக சமகால வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த நூல் பண்டைய உறுதிப்பாட்டு மெய்யலை புரிந்துகொள்ள நவீன காலத்தில் கிடைக்கும் ஒரு குறிப்பிடத்தக்க ஆதாரமாகும். அவர் இறந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும் எழுத்தாளர்கள், மெய்யியலாளர்கள், மன்னர்கள் மற்றும் அரசியல்வாதிகள் போன்றோரால் பாராட்டப்பட்டுள்ளனர். வெளி இணைப்புகள்மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia