மூலம் திருநாள் இராம வர்மன்
சிறீ பத்மநாபதாச சிறீ மூலம் திருநாள் ராம வர்மன் (Sree Padmanabhadasa Sree Moolam Thirunal Rama Varma) (பிறப்பு 1949) என்பவர் பெயரளவில் திருவிதாங்கூர் மகாராஜா என்ற பட்டத்தை வைத்துள்ளார்.[1] இவர், திருவிதாங்கூரின் முன்னாள் மகாராணி, கார்த்திகை திருநாள் லட்சுமி பாய், அவரது கணவர் பூஞ்சார் அரச வமசத்தின் இளவரசர் லெப்டினன்ட் கர்னல் ஜி. வி. ராஜா ஆகியோரின் நான்கு குழந்தைகளில் இளையவர் ஆவார். இராம வர்மன், திருவிதாங்கூர் மன்னர் சித்திரைத் திருநாள் பலராம வர்மனின் ஒரே மருமகன் ஆவார். இவர் மசாலா வர்த்தக நிறுவனமான ஆஸ்பின்வால் லிமிடெட் என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும் உள்ளார். அரச குடும்பத்தின் தலைவராக, இவர் தனது மனைவியுடன், திருவனந்தபுரத்திற்கு 2013 இல் குடிபெயர்ந்து, திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலின் சடங்குகளை கடைபிடிக்கும் பொருட்டு கௌடியார் என்ற இடத்தில் குடியேறினார்.[2][3] பத்மநாபசாமி கோயில் வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய இடைக்கால தீர்ப்பின் பின்னர், திருவிதாங்கூர் மகாராஜாவாக, மூலம் திருநாள் இராம வர்மன் கோயிலின் அறங்காவலராக இருந்து சடங்குகளைச் செய்து வருகிறார்.[4][5] நீதிபதி ஆர்.எம்.லோதா, நீதிபதி ஏ.கே.பட்நாயக் ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு 5 உறுப்பினர்களைக் கொண்ட குழுவை அமைத்து வினோத் ராயை தணிக்கையாளராக நியமிப்பதன் மூலம் நிர்வாகத்தில் தற்காலிக மாற்றம் செய்ய உத்தரவிட்டது. இந்த குழுவில் திருவனந்தபுரம் மாவட்ட துணை நீதிபதி கே.பி. இந்திரா, தந்திரி, கோயிலின் நம்பி, கேரள அரசு, திருவிதாங்கூர் அரச குடும்பத்துடன் கலந்தாலோசித்து முடிவு செய்யப்படவுள்ள இரண்டு உறுப்பினர்கள் உள்ளனர். கூடுதலாக ஒரு இந்திய ஆட்சிப் பணி அதிகாரி, கோயிலின் முன்னாள் நிர்வாகி ஆகியோர் நிர்வாக அதிகாரிகளாக நியமிக்கப்பட்டனர்.[6] ஆரம்ப கால வாழ்க்கைதிருவிதாங்கூரைச் சேர்ந்த மகாராணி கார்த்திகை திருநாள் லட்சுமி பாய், அவரது கணவர் ஜி. வி.ராஜா ஆகியோரின் இளையமகனாக 1949 சூன் 12 அன்று திருவிதாங்கூர்-கொச்சியில் பிறந்தார். இவரது உடன்பிறப்புகளில் மறைந்த பட்டத்து இளவரசர் அவிட்டம் திருநாள் இராம வர்மன் (வாத நோயால் 6 வயதில் இறந்தார்), இளவரசி பூசம் திருநாள் கௌரி பார்வதி பாய், எழுத்தாளர் இளவரசி அசுவதி திருநாள் கௌரி லட்சுமி பாய் ஆகியோர். இவரது தந்தை ஜி.வி.ராஜாவைப் போலவே, இவரும் ஒரு தீவிர விளையாட்டு ஆர்வலரும் புத்தக ஆர்வலரும் ஆவார். பல்வேறு பாடங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களால் தனியாக கல்வி கற்றார். பின்னர் திருவனந்தபுரத்தின் மார் இவானியோஸ் கல்லூரியில் இயற்பியலில் பட்டம் பெற்றார். பின்னர் கொல்கத்தாவுக்குச் சென்று அங்கு சில ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் வணிக மேலாண்மை கற்க இங்கிலாந்து சென்று அங்கு ஒரு வருடம் பணியாற்றினார்.[7] பிற்கால வாழ்க்கையும் திருமணமும்உயர் கல்வியை முடித்து இங்கிலாந்தில் பணிபுரிந்த பின்னர், இராம வர்மன் 1972 இல் இந்தியா திரும்பினார். இவரது மாமன்களின் ஆலோசனையின் பேரில், மங்களூரில் உள்ள மசாலா வர்த்தக நிறுவனமான ஆஸ்பின்வால் லிமிடெட் என்ற நிறுவனத்தில் சேர்ந்தார். இராம வர்மன் 1976 இல் இரமா என்பவரை மணந்தார். இவர்கள் 2002 ல் விவாகரத்து பெற்றனர். அதே ஆண்டில், இவர் லண்டனை தளமாகக் கொண்ட முன்னாள் கதிரியக்கவியலாளர் மருத்துவர் கிரிஜா என்பவரை மணந்தார். 2002 திருமணத்திற்குப் பிறகு இந்த இணை 2013 வரை மங்களூரில் வசித்து வந்தது. இராம வர்மனுக்கு மகாராஜா என்ற பட்டம் வழங்கப்பட்ட பிறகு (அவரது தாய்மாமன் இறந்ததால்), இவர்கள் திருவனந்தபுரத்தின் கௌடியார் பகுதிகுச் சென்று அங்கேயே குடியேறினர். திருவிதாங்கூர் மகாராஜா பட்டம்மகாராஜா சுவாதித் திருநாள் பலராம வர்மன் 1991 சூலை 20 இல் இறந்தபோது இராம வர்மன் திருவிதாங்கூரின் இளையராஜா ஆனார். 2013 திசம்பர் 16 அன்று உத்திரடம் திருநாள் மார்த்தாண்ட வர்மன் இறந்தபோது, இவர் திருவிதாங்கூரின் மகாராஜா ஆனார். இவர் 2014 சனவரி 3 ஆம் தேதி, பத்மநாபசுவாமி கோயிலுக்கு அருகிலுள்ள கலசமண்டபத்தில் நடைபெற்ற திருமுகிகலசம் என்ற விழாவுக்குப் பிறகு திருவிதாங்கூரின் அரச குடும்பத்தின் தலைவராக, நியமிக்கப்பட்டார்.[8][9] மேலும் காண்ககுறிப்புகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia