மனயங்கத்து சுப்பிரமணியன் விசுவநாதன் அல்லது எம். எஸ். விஸ்வநாதன் (M. S. Viswanathan), அல்லது பொதுவாக எம்எஸ்வி, (24 சூன் 1928 – 14 சூலை 2015) தமிழ்த் திரைப்படவுலகில் புகழ்பெற்று விளங்கிய இசையமைப்பாளர் ஆவார். இவர் கேரளாவின்பாலக்காட்டுக்கு அருகில் எலப்புள்ளி என்ற கிராமத்தில் 1928ம் ஆண்டு மலையாளக் குடும்பத்தில் பிறந்தார். இவரின் தந்தை சுப்பிரமணியன் தாய் நாராயண குட்டியம்மாள் (நானிக்குட்டி)[1]. விசுவநாதன் 1953 ஆம் ஆண்டில் வெளிவந்த ம. கோ. இராமச்சந்திரனின்ஜெனோவா திரைப்படத்தில் வெளிவந்த நான்கு பாடல்களுக்கு முதன் முதலாக இசையமைத்தார். தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் சுமார் 1700 திரைப்படங்களுக்கு இசையமைத்தார். தெலுங்கு, இந்தி மொழிப் படங்களுக்கும் இசையமைத்திருந்தார்.
வாழ்க்கை
தனது நான்காவது வயதிலேயே தந்தையை இழந்த விசுவநாதன் கண்ணனூரில் உள்ள தன் தாத்தா கிருசுணன் நாயர் வீட்டிற்கு சென்று வளர்ந்தார். விசுவநாதனின் தந்தை தன் 32 வது வயதில் காலமானார். தந்தை இறந்த பதினைந்து நாட்களிலேயே தனது தங்கையையும் இழந்தார்.[2] பள்ளிப் படிப்புப் படிக்காத இவர் இசையின் மீது கொண்ட நாட்டத்தால் அங்கு கருநாடக இசையை நீலகண்ட பாகவதரிடம் பயின்று 13வது வயதிலேயே மேடைக் கச்சேரி நிகழ்த்தினார்.[3] இசையமைப்பாளர் சி. ஆர். சுப்புராமன் இசைக்குழுவில் இவர் ஆர்மோனியத்தையும் டி. கே. ராமமூர்த்தி வயலினையும் வாசிப்பவர்களாக பணிபுரிந்தார்கள்.
இசைப் பயணம்
உடல்நல குறைவு காரணமாக, சி. ஆர். சுப்புராமனுடைய மறைவால் முழுமை பெறாமல் இருந்த தேவதாஸ், சண்டிராணி, மணமகள் போன்ற படங்களை அவரின் உதவியாளர்களாக இருந்த விசுவநானும் ராமமூர்த்தியும் முடித்துக்கொடுத்தார்கள். தேவதாஸ் (தமிழ் & தெலுங்கு) மற்றும் சண்டிராணி (தமிழ், தெலுங்கு & இந்தி) படங்களின் இணை இசையமைப்பாளராக இவர்கள் இருவரும் அறிமுகப்படுத்தப்பட்டார்கள். இப்படங்கள் வெற்றி பெற்றதால் இந்தியில் சங்கர்-ஜெய்கிஷன் என்ற பெயரில் புகழ்பெற்ற இரட்டை இசையமைப்பார்கள் இருந்தது போல் தமிழில் விசுவநாதன்-இராமமூர்த்தி என்ற இரட்டை இசையமைப்பாளராக உருவாகலாம் என்ற எண்ணத்தை விசுவநாதன் இராமமூர்த்தியிடம் தெரிவித்து அவரது இணக்கத்தைப் பெற்றார். இவர்கள் இருவரும் பணம் என்ற திரைப்படத்திற்கு முதலில் இணைந்து இசையமைத்தார்கள்.[4]ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் வரை இணைந்து இசையமைத்தார்கள். 1995-ல் சத்யராஜ் நடித்த எங்கிருந்தோ வந்தான் என்ற திரைப்படத்தில் இருவரும் மீண்டும் இணைந்து இசையமைத்தார்கள். விஸ்வநாதன் தனியாக 950 படங்களுக்கு மேல் இசையமைத்தார். இளையராஜாவோடு சேர்ந்து, மெல்லத் திறந்தது கதவு, செந்தமிழ் பாட்டு, செந்தமிழ்ச்செல்வன் என மூன்று படங்களுக்கு இசை அமைத்தார்.[5] 1963ஆம் ஆண்டு சூன் மாதம் 16-ஆம் தேதி மதராசு திரிப்ளிகேன் கல்சுரல் அகாடமி சார்பில் இந்து நாளிதழ் உதவியுடன் இயக்குநர் ஸ்ரீதர் மற்றும் "சித்ராலயா"கோபு முன்னிலையில் நடைபெற்ற விழாவில் சிவாஜி கணேசனால் விசுவநாதன்-இராமமூர்த்திக்கு மெல்லிசை மன்னர்கள் என்று பட்டம் வழங்கப்பட்டது.