தமிழ் இலக்கியம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான தொடர்ச்சி கொண்ட உலகின் சிறந்த இலக்கியங்களில் ஒன்று.
வாழ்வின் பல்வேறு கூறுகளை தமிழ் இலக்கியங்கள் இயம்புகின்றன. தமிழ் இலக்கியத்தில் வெண்பா, குறள், புதுக்கவிதை, கட்டுரை, பழமொழி என பல வடிவங்கள் உள்ளன. தமிழில் வாய்மொழி இலக்கியங்களும் முக்கிய இடம் வகிக்கின்றன.
தொல்பழங்காலத்தில், அக்காலப் பாண்டிய அரசர்களின் ஆதரவில், ஒன்றுக்குப்பின் ஒன்றாக மூன்று தமிழ்ச்சங்கங்கள் தமிழாராய்ந்ததாகவும், அக்காலத்தில் தமிழிலக்கியங்கள் பல இயற்றப்பட்டதாகவும் நம்பப்படுகிறது. முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என அழைக்கப்படும் இம் முச்சங்கங்கள் சார்ந்த இலக்கியங்களிலே கடைச்சங்க நூல்கள் மட்டுமே தற்போது கிடைப்பதாகச் சொல்கிறார்கள். முன்னிரண்டு சங்கங்களையும் சேர்ந்த நூல்கள், அக்காலங்களில் ஏற்பட்ட கடல்கோள்களின்போது, நாட்டின் பெரும்பகுதியுடன் சேர்ந்து அழிந்து போனதாக கருதப்படுகிறது. எனினும், முதலிரு சங்கங்கள் இருந்தது பற்றியோ அல்லது அக்காலத்தில் இலக்கியங்கள் இருந்தது பற்றியோ போதிய உறுதியான ஆதாரங்கள் எதுவுமில்லை.
நீண்ட பயணம் செ. கணேசலிங்கனின் முதல் புதினமாகும். இது ஈழத்து புதினங்களில் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது. இதன் முதற் பதிப்பு 1965 ல் சென்னையில் வெளியிடப்பட்டுள்ளது. இவர் இரண்டாவதாக எழுதிய புதினம் சடங்கு (1966). மூன்றாவதாக எழுதிய புதினம் செவ்வானம்(1967). இம்மூன்று புதினங்களும் ஒரே குழுவைச் சேர்ந்த (Trilogy) ஒரே பிராந்தியத்தை, யாழ்ப்பாணத்தைக் கதைக் களமாகக் கொண்ட நாவல்கள் என்றும் நிலமானிய அமைப்பில் இருந்து முதலாளித்துவ அமைப்புக்கு மாறும் சமுதாயத்தைச் சித்தரிக்கின்ற புதினங்களாக உள்ளன என்றும் க. கைலாசபதி குறிப்பிடுகிறார்.
தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் (செப்டம்பர் 7, 1867 - நவம்பர் 13, 1922) 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தமிழ் நாடக உலகின் தனிப்பெரும் தகைமையர்களாக விளங்கிய சிலருள் குறிப்பிடத்தக்கவர். கூத்து மரபிலிருந்து உருவாகி வளர்ந்த தமிழ் நாடக அரங்கம், பெட்டி அரங்க (Proscenium) மரபிற்கேற்ப உருபெற்றது சங்கரதாஸ் சுவாமிகள் காலத்தில்தான். தமிழ் நாடகத் தலைமையாசிரியர் என அழைக்கப்படும் இவர் சுமார் 40 நாடகங்களை எழுதியுள்ளார். அவற்றில் இப்போது 18 நாடகங்களுக்கான பனுவல்களே கிடைத்துள்ளன. புதுச்சேரியில் அமைந்துள்ள இவரது சமாதி புதுவை அரசால் பாதுகாக்கப்படுகிறது.