விறன்மிண்ட நாயனார்
விறன்மிண்ட நாயனார் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார்[2]. அடியார்கள் மீது அன்பும், பக்தியும் விறன்மிண்ட நாயனார் கொண்டிருந்ததால், சிவபூதங்களின் தலைவராகச் சிவபெருமானால் நியமிக்கப்பட்டவர். விறன்மிண்ட நாயனார் வேளான் தொழில் செய்து வந்தவர். திருவாரூரில் சுந்தரமூர்த்தி நாயனார் அடியார்களை வணங்காது சிவபெருமானை வணங்க செல்வதைக் கண்டு கோபம் அடைந்தார். சிவபெருமானையும், சுந்தர மூர்த்தி நாயனாரையும் சைவ சமயத்தை விட்டே புறம் தள்ளுகிறேன் எனக் கூறினார். விறன்மிண்ட நாயனாரின் கோபத்தை அறிந்து சிவபெருமான் “தில்லை வாழந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்” என முதல்வரி எடுத்துக் கொடுத்து சுந்தர மூர்த்தி நாயனார் பாடலைப் பாடினார். அவர்களின் பாடலைக் கேட்ட பிறகு விறன்மிண்ட நாயனார்க்குக் கோபம் தணிந்து, இருவரையும் மீண்டும் சைவ சமயத்தில் சேர்த்துக் கொண்டார். சிவன் அடியார்களும், சிவபெருமானுக்கு இணையானவர்கள் என்ற கருத்தாக்கத்திற்கு வலு சேர்க்கும் வகையில் விறன்மிண்ட நாயனாரின் புராணம் விளங்குகிறது. இவரை “விரிபொழில்சூழ் குன்றையர் விறன்மிண்டர்க் கடியேன்” என்று திருத்தொண்டத் தொகையில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் குறிப்பிடுகிறார். சொல்லிலக்கணம்வாழ்க்கைப் புராணம்விறன்மிண்ட நாயனார் வேளான் தொழில் செய்து வந்தவர். ஓய்வு நேரங்களில் அருகிலுள்ள சிவாலயங்களை தரிசனம் செய்ய பயணம் மேற்கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். சிவனடியார்கள் மீது அளவு கடந்த பக்தி கொண்டிருந்தார். அடியார்களை வணங்குவதையும், அவர்கள் பெருமைகளை எடுத்துக் கூறுவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒரு சமயம் திருவாரூர்த் தேவாசிரிய மண்டபத்தில் சிவனடியார்களோடு அடியார்களின் பெருமைகளைப் பேசிக் கொண்டிருந்தார் விறன்மிண்டர். திருவாரூர் ஈசனை வணங்க கோயிலுக்கு வந்த சுந்தரமூர்த்தி நாயனார், அடியார்கள் பேசிக் கொண்டிருந்ததைக் கண்டார். தொந்தரவு செய்யவேண்டாமென எண்ணி ஒருவாறு ஒதுங்கிச் சென்றார். சுந்தரர் அடியார்களை வணங்காது கோயிலுக்குச் செல்வதைக் கண்ட விறன்மிண்டர் கோபம் அடைந்தார். சுந்தரர் சைவ அடியாரே அல்லர். அவரைச் சைவ சமயத்திலிருந்து ஒதுக்கி வைக்கிறேன். அவர் வழிபட சென்ற திருவாரூர் தியாகராசரையும் சைவத்திலிருந்து ஒதுக்கி வைக்கிறேன் எனக் கூறினார். விறன்மிண்டரது அடியார் பக்தியை அறிந்த சுந்தரமூர்த்தி சுவாமிகள், திருவாரூர்க் கோயிலுட் புகுந்து தியாகராசப் பெருமானைக் கும்பிட்டு நிற்கும்போது “அடியேன் இவ்வடியார்க்கெல்லாம் அடியானாகும் நாள் என்று” வேண்டுதல் செய்தார். அப்பொழுது பெருமான் “நாம் அடியாருடன் உளோம்; அடியாரைப்பாடு என்றருளி “தில்லைவாழந்தணர்” என அடியெடுத்துக் கொடுத்தார். சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேசமெல்லாம் உய்வதற்கு காரணமானதும், சைவநெறியின் சீலம் விளங்கச் செய்வதுமான திருத்தொண்டத் தொகைத் திருப்பதிகத்தைத் “தில்லை வாழந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்” என்பதை முதலாகக் கொண்டு பாடியருளினார். இவ்வண்ணம் சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருத்தொண்டத்தொகை பாடுவதற்குக் காரணமாய் அமைந்த விறண்மிண்டநாயனார், சிவபெருமான் அருளால் திருவடி நிழலை அடைந்து கணநாதராய் விளங்கும் பேற்றினைப் பெற்றார். குரு பூசைவிறல்மிண்ட நாயனார் (dinamalar.com) விறல்மிண்ட நாயனாரின் குருபூசை ஆண்டுதோறும் தமிழ் வருடத்தின் முதல் மாதமான சித்திரைமாதம் சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரமாகக் கருதப்படும் திருவாதிரை நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.[3] உசாத்துணைகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia