விஷ்ணு நாராயண் பட்கண்டே
பண்டிட் விஷ்ணு நாராயண் பட்கண்டே (Vishnu Narayan Bhatkhande, 10 ஆகத்து 1860 – 19 செப்டம்பர் 1936) இந்திய இசைவாணரும், இந்துத்தானி இசை இலக்கணத்தை நவீனப்படுத்தியவரும், ஆய்வாளரும், வழக்கறிஞரும் ஆவார். பாரம்பரிய இந்துஸ்தானி இசை குறித்த முதல் நவீன கட்டுரையை எழுதினார். இராகா, இராகினி, புத்ரா (முறையே ஆண், பெண், குழந்தை ) என்ற முறையில் இராகங்கள் வகைப்பட்டிருந்ததை மாற்றி சுவரங்கள் அடிப்படையிலான ' தாட் ' என்ற முறையை அறிமுகம் செய்தார். இராகங்களை எளிதில் புரியவைக்க 'பந்திஷ்' என்ற இசைக்கோர்வைகளை உருவாக்கினார். இவை இராகங்களின் இலக்கணத்தை விளக்குவன. இவர் இந்துஸ்தானி இசை இலக்கணத் தந்தை எனப் போற்றப்படுகிறார்.[2] ஆரம்ப கால வாழ்க்கைஇவர், 1860 ஆகத்து 10 ஆம் தேதி மும்பையின் வால்கேசுவரில் ஒரு கொங்கணஸ்த் பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். ஒரு தொழில்முறை இசைக்கலைஞராக இல்லாவிட்டாலும், ஒரு பணக்கார தொழிலதிபருக்காக பணிபுரிந்த இவரது தந்தை, இவரையும், இவரது உடன்பிறப்புகளையும் பாரம்பரிய இசையைக் கற்க உறுதி செய்தார். பதினைந்து வயதை எட்டிய பின்னர், பட்கண்டே சித்தார் மாணவராக ஆனார். பின்னர் இசைக் கோட்பாட்டைக் கையாளும் சமசுகிருத நூல்களைப் படிக்கத் தொடங்கினார். இவர் 1885இல் மும்பை, எல்பின்ஸ்டன் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார். 1887 ஆம் ஆண்டில், மும்பை பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டமும் பெற்றார். பின்னர், சிலகாலம் குற்றவியல் சட்டத்தில் ஒரு தொழிலைத் தொடர்ந்தார்.[3] 1884 ஆம் ஆண்டில், மும்பயிலுள்ள இசைக்கலைஞர்களை பாராட்டும் சங்கமான ஞான உத்தேஜக் மண்டலியின் உறுப்பினரானார். இது இசை செயல்திறன் மற்றும் கற்பித்தல் தொடர்பான தனது அனுபவத்தை விரிவுபடுத்தியது. இவர் ஆறு ஆண்டுகளாக அங்கு படித்தார். இராவோஜிபுவா பெல்பாக்கர், உஸ்தாத் அலி உசேன் போன்ற இசைக்கலைஞர்களின் கீழ் கயல் மற்றும் துருபாத் வடிவங்களில் பலவிதமான பாடல்களைக் கற்றுக்கொண்டார். 1900ஆம் ஆண்டில் இவரது மனைவியும், 1903ஆம் ஆண்டில், தனது மகளும் இறந்த பின்னர், தனது சட்ட நடைமுறையை கைவிட்டு, முழு கவனத்தையும் இசைக்கு அர்ப்பணித்தார். தொழில்பட்கண்டே இந்தியா முழுவதும் பயணம் செய்து, உஸ்தாதுகளையும் பண்டிதர்களையும் சந்தித்து இசை ஆராய்ச்சி செய்தார். காந்தர்வ வேதம், சங்கீத இரத்தினாகாரம் போன்ற பண்டைய நூல்களைப் படிக்கத் தொடங்கினார்.[4] இந்தியாவில் தனது பயணத்தின்போது, அப்போதைய சுதேச மாநிலங்களான வடோதரா, குவாலியர், ராம்பூர் ஆகிய இடங்களில் தனது காலத்தை செலவிட்டார். ராம்பூரில் இவர் தான்சேனின் வம்சாவளியான புகழ்பெற்ற வீணைக் கலைஞர் உஸ்தாத் வஜீர் கானின் சீடராக இருந்தார். ![]() இந்துஸ்தானி இசையை முறையாக கற்பிப்பதற்காக இவர், இந்தியாவில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைத் தொடங்கினார். 1916 ஆம் ஆண்டில், இவர் பரோடா மாநில இசைப் பள்ளியை மறுசீரமைத்தார். பின்னர், குவாலியர் மகாராஜாவின் உதவியுடன் குவாலியரில் மாதவ் இசைக் கல்லூரியை நிறுவினார். 1926 ஆம் ஆண்டில், ஐக்கிய மாகாணங்களின் கல்வி அமைச்சராக இருந்த இராய் உமாநாத் பாலி மற்றும் அவரது மருமகன் டாக்டர் இராய் ராஜேஸ்வர் பாலி ஆகியோர் [[இலக்னோவில் மாரிஸ் இசைக் கல்லூரியை நிறுவினர்.[5] கல்லூரியின் பாடநெறிகளைத இவர் தயாரித்தார். இந்தக் கல்லூரி பின்னர் பட்கண்டே இந்துஸ்தானி இசைக் கல்லூரி என மறுபெயரிடப்பட்டது. இப்போது அது பட்கண்டே இசை நிறுவனம் ( நிகர்நிலைப் பல்கலைக்கழகம் ) என்று அழைக்கப்படுகிறது. முந்தைய காலங்களில் குருக்கள் மற்றும் உஸ்தாத்களிடமிருந்து அவர்களின் சீடர்களுக்கு இசை அறிவு வாய்வழியாக அனுப்பப்பட்டதால், அந்த பாடப் பொருளைத் தயாரித்தது இவரது ஒரு முக்கிய சாதனையாகும். இவர், இந்துஸ்தானி சங்க கிராமிக் புஸ்தக் மாலிகா என்ற தொடர்ச்சியான பாடப்புத்தகங்களைத் தயாரித்தார். இந்துஸ்தானி மற்றும் கர்நாடக பாரம்பரிய இசைக்கலைஞர்களிடையே கலந்துரையாடலுக்கான பொதுவான தளத்தை வழங்குவதற்காக அகில இந்திய இசை மாநாடுகளின் பாரம்பரியத்தையும் தொடங்கினார்.[6][7] இறப்பு1933 இல் பட்கண்டேவுக்கு பக்கவாதம் மற்றும் தொடையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இவர் செப்டம்பர் 19, 1936 அன்று மும்பையில் இறந்தார். நூலியல்
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia