வேங்கட மலை (Venkata hill) (உயரம் 853 மீட்டர்) சேஷாசலம் மலையில் ஒரு பகுதியாக ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது திருமலை நகரில் அமைந்துள்ளது. இங்கு வைணவக் கோயிலான திருப்பதி வெங்கடாசலபதி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் மூலவராக திருமாலின் அவதாரங்களில் ஒன்றான வெங்கடாசலபதி உள்ளார்.
வேங்கடம் என்பது திருவேங்கடம். இது இக்காலத்தில் திருப்பதி என வழங்கப்படுகிறது. சங்கப்பாடல்கள் இதனை வேங்கடநாடு, வேங்கட நெடுவரை, வேங்கட வரைப்பு, வேங்கடச்சுரம், வேங்கட மலை[2] என்றெல்லாம் குறிப்பிடுகின்றன. இதனைத் தாண்டிச் சென்றால் வருவது மொழிபெயர் தேஎம் என்றும் வடுகர்-முனை என்றும் பாடல்கள் குறிப்பிடுகின்றன. வேங்கட மலை
சங்ககால தமிழகத்தில் முக்கிய மலைப்பகுதி ஆகும்.
பெயர்க்காரணம்
வேங்கடம் என்னும் சொல் யானையின் மதத்தைக் குறிக்கும். இந்த நாட்டில் யானைகள் மிகுதி. அவை நெற்றியில் செந்நிறம் கொண்டவை. இந்நாட்டில் வாழ்ந்த தொண்டையர் யானைகளைப் பழக்கிவந்தனர்.[3]
பாண்டியர் கொற்கை முத்துகளைப் பாதுகாக்க இந்தப் பழக்கப்பட்ட யானைகளைப் பயன்படுத்திக்கொண்டனர். - பாண்டியரின் கொற்கைத்துறை முத்துகளை வேங்கடத்து யானை அறக்காவல் புரிந்துவந்தது.[4]
செந்நுதல்-யானை
வேங்கடத்து வெம்முனை ஆடவர் ஊன் தின்ற வேட்கை தீரத் தோப்பி என்னும் நீரைப் பருகிக், வாயையும் கையையும் கழுவாமல் துடி முழக்கத்துடன் வேங்கட ஊர்க்குள் வருவார்களாம். அங்குக் குரால் மரங்களும், மராஅம் மரங்களும் நிறைந்த பகுதியில் செந்நுதல்-யானை அசைந்தாடிக்கொண்டிருக்குமாம்.[5]
வேங்கட வரைப்புக்கு வடக்கில் இருந்த வடபுலம் பசியால் வாடியபோது அப்பகுதியில் வாழ்ந்த கல்லாடனார் தன் குடும்பத்துடன் பொறையாற்றுக்கிழானிடம் வந்து தன் வறுமையைப் போக்கிக்கொண்டார்.[15]
மொழிபெயர் தேயம்
வேங்கடத்துப் பனிபடு சோலையில் யானை மரா மரத்தின் உரிஞை (பட்டையை) உரிக்குமாம். அப்படி உரிக்கும்போது அதன் காய்கள் மழை பெய்யும்போது விழும் ஆலங்கட்டிகள் (பனிக்கட்டிகள்) போல நெல் காய்ந்துகொண்டிருக்கும் பாறைமீது சிதறுமாம். இதனைத் தாண்டிச் சென்றால் தமிழ் பெயர்ந்து பேசும் நாடு வந்துவிடுமாம்.[16]
புல்லி நாட்டில் ஆனிரை மேய்ப்போர் பசுக்களுடன் மேயும் காளைகளின் கழுத்தில் புளிச்சோற்றை மூங்கிலில் அடைத்துக் கட்டித் தொங்கவிட்டுருப்பர். அப் பகுதியின் வழியே செல்லும் புதியவர்களுக்குக் காதடைக்கும் பசி தீரத் தேக்கிலையில் பங்கிட்டுக் கொடுப்பர். [18]
வேங்கடத்துக் குடவர் பாலொடு தினையரிசிப் பொங்கல் விருந்து
வரகை உரலில் இட்டு, உலக்கையால் குற்றி, சுளகால் நேம்பி, தேங்காய் போல் வெண்ணிறம் கொண்ட அரிசியாக்கி, இளஞ்சுனையில் முகந்துவந்த நீரோடு அடுப்பில் ஏற்றி, பொங்கி, அந்நாட்டில் வாழ்ந்த குடவர் வளர்த்து உதவும் ‘நல்லான்’ (பசு) பாலொடு வந்த விருந்தினர்களுக்கெல்லாம் உண்ணத் தருவார்களாம். [19]
கல்லா இளையர்
வேங்கடத்தில் வாழ்ந்த கல்லா இளையர் மராஅம் பூவைத் தலையில் சூடிக்கொண்டு களிற்றை வீழ்த்துவர். மராமர நாரால் அவற்றைக் கட்டி விழாக் கொண்டாடும் நியம மூதூருக்குக் கொண்டுவந்து நறவு விற்கும் கள்ளுக்கடையில் கள்ளுக்கு விலையாகக் கட்டுவர். இதன் அரசன் “கல்லா இளையர் பெருமகன் புல்லி”. [20]
அறிஞர் கழகம் ஆய்ந்து வழங்கிப், பேராசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளை தொகுத்துப் பதிப்பித்த சங்க இலக்கியம் (பாட்டும் உரையும்) நூலின் (முதற்பதிப்பு 1940, இரண்டாம் பதிப்பு 1967) இறுதியில் சிறப்புப்பெயர் அகராதி என்னும் தலைப்பின் கீழ்த் தரப்பட்டுள்ள பெயர்ப்பட்டியலிலிருந்து தொகுக்கப்பட்டு உரிய பாடல்களை ஒப்புநோக்கி இந்தக் கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது.
INDEX DES MOTS DE LA LITERATURE TAMOULE ANCIENNE (1970) (சங்கநூல் சொல்லடைவு)