வெற்றிபெற்ற கட்சியின் வண்ணங்கள் படத்தில் காட்டப்பட்டுள்ளன. * கன்சர்வேட்டிவ்களின் 331 தொகுதிகளில், மக்களவை சபாநாயகர் ஜோன் பெர்க்கோவின் பக்கிங்காம் தொகுதியும் அடங்கும். இது சாம்பல் நிறத்தில் காட்டப்பட்டுள்ளது.
2015 ஐக்கிய இராச்சியப் பொதுத் தேர்தல் (United Kingdom general election of 2015) ஐக்கிய இராச்சியத்தின் 56வது நாடாளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 2015 மே 7 அன்று நடைபெற்றது.[2] ஐக்கிய இராச்சியத்தின் அனைத்து 650 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல்கள் நடைபெற்றன. ஒவ்வொரு தொகுதியிலும் இருந்து மக்களவைக்கும், கீழவைக்கும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இப்பொதுத் தேர்தலில், இலண்டன் பெருநகர்ப் பகுதி தவிர்ந்த இங்கிலாந்தின் ஏனைய பகுதிகளில் உள்ளூராட்சி அவைகளுக்கும் தேர்தல்கள் நடைபெற்றன.
டேவிட் கேமரன் தலைமையிலான பழமைவாதக் கட்சிக்கும், எட் மிலிபாண்ட் தலைமையிலான தொழிற் கட்சிக்கும் இடையில் கடும் போட்டி நிலவும் எனவும், தொங்கு நாடாளுமன்றம் அமையும் வாய்ப்புகளே அதிகம் எனவும் பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தெரிவித்திருந்த போதும்,[3] நடைபெற்ற தேர்தலில் பழமைவாதிகள் மிகக்குறைந்த அளவு பெரும்பான்மையுடன் கூட்டணி இன்றி ஆட்சியமைக்கத் தேவையான தொகுதிகளைப் பெற்று வெற்றி பெற்றனர்.[4]
தாராண்மைவாத சனநாயகவாதிகளுடன் கூட்டணி அமைத்து 2010 முதல் ஆட்சி செய்து வந்த பழமைவாதக் கட்சி 36.9% வாக்குகளைப் பெற்று, 331 தொகுதிகளை வென்று நாடாளுமன்றத்தில் 12 அதிகப்படியான இடங்களுடன் தனித்து ஆட்சியமைக்கிறது. 1992 இற்குப் பின்னர் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்கும் முதலாவது கன்சர்வேட்டிவ் அரசு இதுவாகும். அத்துடன், 1900 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அதிகரித்த விருப்பு வாக்குகளுடன் மீளத் தெரிவு செய்யப்பட்ட முதலாவது பிரதமர் என்ற பெருமையையும், மார்கரெட் தாட்சருக்குப் பின்னர் அதிக தொகுதிகளுடன் மீள வென்ற தலைவர் என்ற பெருமையையும் டேவிட் கேமரன் பெற்றார்.[5][6]எட் மிலிபாண்ட் தலைமையிலான தொழிற் கட்சி, 232 தொகுதிகளை 30.4% வாக்குகள் பெற்று இரண்டாவதாக வந்தது. 1987 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தொழிற்கட்சி அடைந்த மிகப் பெரும் தோல்வி இதுவாகும்.[4]
இசுக்கொட்லாந்தில்இசுக்கொட்டிய தேசியக் கட்சி தாம் போட்டியிட்ட 59 தொகுதிகளில் 2010 தேர்தலை விட 50 தொகுதிகள் அதிகமாக 56 தொகுதிகளை வென்று மக்களவையில் மூன்றாவது பெரும் கட்சியாக வந்துள்ளது. இக்கட்சியின் சார்பில் களமிறங்கிய மாரி பிளாக் என்ற 20 அகவைப் பல்கலைக்கழக மாணவி, 1667இல் தன் 13 வயதில் நாடாளுமன்ற உறுப்பினரான கிறித்தோபர் மோனாக்கை அடுத்த இளையவர் ஆவார்.[7]
மக்களவையில் 57 உறுப்பினர்களை வைத்திருந்த தாராண்மைவாத சனநாயகவாதிகள் 49 இடங்களை இழந்து, மொத்தம் 8 இடங்களை மட்டுமே கைப்பற்றினர். 1974 ஆண்டுக்குப் பின்னர் அவர்கள் அடைந்த பெரும் தோல்வி இதுவாகும்..[8][9].
தேர்தல் பின்னடைவைத் தொடர்ந்து தொழிற்கட்சித் தலைவர் எட் மிலிபாண்ட், தாராண்மைவாத சனநாயகவாதத் தலைவர் நிக் கிளெக் ஆகியோர் தமது கட்சித் தலைமைப் பொறுப்புகளில் இருந்து விலகினர்.[10][11][12][13]
முடிவுகள்
56வது நாடாளுமன்றத்துக்கான தேர்தல் முடிவுகள்:[14][15]
↑இசுக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினரும், இசுக்காட்லாந்தின் முதலமைச்சருமான எஸ்.என்.பி கட்சித் தலைவர் நிக்கொலா ஸ்டர்ஜன் இத்தேர்தலில் மக்களவை உறுப்பினராகப் போட்டியிடவில்லை. மொரே தொகுதியின் உறுப்பினர் ஆங்கசு ராபர்ட்சன் மக்களவையில் எஸ்.என்.பி கட்சியின் தலைவராக இருப்பார்.
குறிப்புகள்
↑ 1.01.1Reflects the notional winners of seats in light of boundary changes