2019 துடுப்பாட்ட உலகக்கிண்ண இறுதிப்போட்டி
2019 துடுப்பாட்ட உலகக்கிண்ண இறுதிப் போட்டி (2019 Cricket World Cup Final) என்பது 2019 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தின் வெற்றியாளரைத் தீர்மானிக்க இங்கிலாந்தின் லண்டன் நகரத்தில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியாகும். இது நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகளுக்குமிடையே நடைபெற்றது. இரு அணிகளும் தலா 241 ஓட்டங்கள் எடுத்ததால் போட்டி சமனில் முடிந்தது. இதன் விளைவாக சிறப்பு நிறைவு முறை பயன்படுத்தப்பட்டது. அதில் இரு அணிகளும் தலா 15 ஓட்டங்கள் எடுத்ததால் போட்டி மீண்டும் சமனில் முடிந்தது. எனவே துடுப்பாட்ட விதிகளின் படி நியூசிலாந்து அணியை விட அதிக நான்குகள் அடித்திருந்ததால் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று முதன்முறையாக உலகக்கிண்ணத்தைக் கைப்பற்றியது.[1][2][3] ஒருநாள் துடுப்பாட்ட வரலாற்றில் சிறப்பு நிறைவு முறை பயன்படுத்தப்பட்டதும் அது சமனில் முடிந்து நான்குகள் அடிப்படையில் வெற்றியாளர் தீர்மானிக்கப்பட்டதும் இதுவே முதல் முறையாகும். இந்தப் போட்டி ஒருநாள் துடுப்பாட்ட வரலாற்றிலேயே மிகச் சிறந்ததாகவும் அதிக திருப்பங்கள் நிறைந்தததாகவும் கருதப்படுகிறது. [4][5][6][7] இந்தப் போட்டியின் முடிவு குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக இந்தப் போட்டியின் கள நடுவராக இருந்த குமார் தர்மசேன, தாம் வரம்புமீறிய எறிவின் விளைவாக இங்கிலாந்து அணிக்கு ஒரு ஓட்டம் கூடுதலாக வழங்கியது தவறு என்று ஒப்புக்கொண்டார்.[8][9][10] இதன் விளைவாக வரம்புமீறிய எறிவு விதி குறித்து மீளாய்வு செய்யப்படும் என்று மெரிலெபோன் துடுப்பாட்டச் சங்கம் கூறியுள்ளது.[11][12] பின்னணிஇங்கிலாந்து மற்றும் வேல்சு நாடுகளில் நடைபெற்ற 2019 துடுப்பாட்ட உலகக் கிண்ணப் போட்டி மே 30 அன்று தொடங்கியது. தொடர்-சுழல் வடிவத்தில் பத்து அணிகளும் ஒருவருக்கொருவர் போட்டியிட்டன,அவற்றில் முதல் நான்கு இடங்களைப் பெற்ற அணிகள் அரையிறுதிக்குச் சென்றன. குழுவில் நான்காவது இடத்தில் இருந்த நியூசிலாந்து முதல் அரையிறுதிப் போட்டியில் முதல் இடத்தில் இருந்த இந்தியாவை வீழ்த்தியது, மேலும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் குழுவில் மூன்றாவது இடத்தில் இருந்த இங்கிலாந்து, இரண்டாவது இடத்தில் இருந்த ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. மெல்போர்ன் துடுப்பாட்ட மைதானத்தில் பாகிஸ்தானால் தோற்கடிக்கப்பட்ட இங்கிலாந்து, 27 ஆண்டுகளுக்குப் பிறகு தன் முதல் இறுதிப்போட்டியில் விளையாடியது. 1979ஆம் ஆண்டு லார்ட்சில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராகவும், 1987 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஈடன் கார்டனில் நடந்த இறுதிப் போட்டிகளிலும் இங்கிலாந்து தோல்வியுற்றது. ஆஸ்திரேலியாவுக்குப் பிறகு உலகக் கோப்பையில் அதிக எண்ணிக்கையிலான இறுதிப்போட்டிகளில் விளையாடிய போதிலும், அந்த அணி இதுவரை கிண்ணத்தை வெல்லவில்லை. நியூசிலாந்து, தனது இரண்டாவது இறுதிப் போட்டியில் விளையாடியதுடன், தொடர்ச்சியாக இரண்டாவது முறையாகவும் விளையாடியது. அவர்கள் இதற்கு முன்பு 2015 இறுதிப்போட்டியில் விளையாடியிருந்தாலும் ஆஸ்திரேலியாவால் தோற்கடிக்கப்பட்டனர். இறுதிப் போட்டியை நோக்கிய பயணம்மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia