2021 ஆக்லாந்து கத்திக்குத்து
ஆக்லாந்து கத்திக்குத்து (2021 Auckland stabbing) நியூசிலாந்து, ஆக்லாந்து, நியூலின் புறநகர்ப் பகுதியில் உள்ள கவுண்டவுன் பல்பொருள் அங்காடியில் 2021 செப்டம்பர் 3 உள்ளுர் நேரம் 14:40 மணியளவில் நடந்தது. இந்நிகழ்வில் ஏழு பொது மக்கள் படுகாயமடைந்தனர். தாக்குதல் நடத்திய அகமது சம்சுதீன் என்ற இலங்கையைச் சேர்ந்தவர் அதே இடத்தில் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.[3][4][5] இது ஒரு பயங்கரவாத நிகழ்வாகக் கருதப்படுகிறது.[2] மேலும் இது "இசுலாமிய அரசு-அகத்தூண்டப்பட்ட" ஒரு நிகழ்வு என நியூசிலாந்துப் பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்தார்.[6] கவுண்டவுன் பல்பொருள் அங்காடி ஒன்றில் நான்கு மாதங்களுக்குள் நடந்த இரண்டாவது கத்திக்குத்து நிகழ்வு இதுவாகும். முன்னதாக துனெடின் நகர அங்காடியில் 2021 மே 10 இல் 5 பேர் படுகாயமடைந்தனர். 2019 ஆம் ஆண்டு கிறைஸ்ட்சேர்ச் பள்ளிவாசல் படுகொலைகளுக்குப் பின்னர் நடந்த முதல் தீவிரவாதத் தாக்குதல் இதுவாகும். பின்னணிகோவிடு-19 முடக்கம்இந்தத் தாக்குதல் நடைபெற்ற காலப்பகுதியில், ஆக்லாந்து நகரம் கொரோனா வைரசுத் தொற்று காரணமாக 2021 ஆகத்து 17 முதல் முடக்க நிலையில் இருந்தது. பல்பொருள் அங்காடிகள் போன்ற அதியாவசியத் தேவைகளுக்கான வணிக நிறுவனங்கள் மட்டுமே திறந்திருக்க அனுமதிக்கப்பட்டிருந்தன.[7] அத்துடன், சமூக இடைவெளியை உறுது செய்யும் பொருட்டு, பல்பொருள் அங்காடிகளில் அனுமதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கையும் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது[8] பயங்கரவாதம்நியூசிலாந்தில் பயங்கரவாதம் ஒப்பீட்டளவில் அதிக அளவில் நடைபெறவில்லை. கடைசியாக, கிறைஸ்ட்சேர்ச் பள்ளிவாசல் படுகொலைகள் 2019 மார்ச்சில் நடத்தப்பட்டது, அப்போது வெள்ளிக்கிழமை தொழுகையின் போது இரண்டு பள்ளிவாசல்களில் துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டதில் 50 முசுலிம்கள் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலை அடுத்து கூட்டப்பட்ட அரச ஆணையம் நியூசிலாந்தின் பயங்கரவாதச் சட்டம் போதுமானதாக இல்லை என்று கண்டறிந்தது. மேலும் நியூசிலாந்து நாடாளுமன்றம் ஏற்கனவே பயங்கரவாதச் சட்டத் திருத்தங்களை விவாதித்து வந்தது. ஆக்லாந்துத் தாக்குதல் நியூசிலாந்தில் அறியப்பட்ட முதல் இசுலாமியத் தீவிரவாத தாக்குதல் ஆகும்.[9] நிகழ்வுதாக்குதல் நடத்தியவர் கிளென் ஈடனில் உள்ள தனது வீட்டில் இருந்து வெளியேறி, லின்மாலில் உள்ள கவுண்டவுன் பல்பொருள் அங்காடிக்கு தொடருந்தில் பயணம் செய்தார். இவர் ஏற்கெனவே சிறப்புக் காவல் படையின் கண்காணிப்பில் இருந்து வந்ததால், அக்குழு அவரைப் பின்தொடர்ந்தது.[3][10][11] கண்காணிப்பு குழு பல்பொருள் அங்காடியில் சமூக இடைவெளி போன்ற கட்டுப்பாடுகளால் அம்மனிதனை நெருக்கமாகப் பின்தொடர்வதில் சிரமம் ஏற்பட்டது.[3][8][11] அம்மனிதன் அங்காடியில் விற்பனைக்கிருந்த கத்தி ஒன்றைப் பயன்படுத்தி தாக்குதலை மேற்கொண்டான்.[3] சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட ஒரு காணொளியில், பொதுமக்கள் சிலர் மற்றவர்களை எச்சரிப்பதையும், சிலர் தலையிட முயன்றதையும் காட்டியது.[12] அவரைத் தொடர்ந்து வந்த இரண்டு சிறப்புக் காவல்துறை அதிகாரிகள் தாக்குதல் தொடங்கிய ஓரிரு நிமிடங்களில், தாக்குதல் நடத்தியவர் சரணடைய மறுத்ததை அடுத்து அவரைச் சுட்டுக் கொன்றனர்.[3][11][13] காயமடைந்தோர்ஏழுபேர் இத்தாக்குதலைல் காயமடந்தனர்.[14] ஆறு பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.[15] ஒருவர் சிறு காயங்களுக்கு உள்ளானார்.[14] காயமடைந்தவர்களில் நால்வர் 29, 43, 60, 66 அகவையுடைய பெண்கள் ஆவர். மூவர் 53, 57, 77 அகவையுடய ஆண்கள் ஆவர்.[15] தாக்கியவர்அகமது ஆதில் முகமது சம்சுதீன்[16] 32 அகவையுடைய[17] இலங்கைச் சோனகர். முசுலிம்கள் பெரும்பான்மையாக வதியும் காத்தான்குடி நகரில் பிறந்தவர். இந்நகரம் அண்மைக் காலமாக முசுலிம் அடிப்படைவாத சர்ச்சையில் சிக்கியிருந்தது. 2019 இலங்கை உயிர்ப்பு ஞாயிறு குண்டுவெடிப்புகளை நடத்திய சகரான் என்ற தீவிரவாதியின் சொந்த ஊர் இதுவாகும்.[18] இவருடைய தந்தை முகமது சம்சுதீன் அரச பாடசாலைகளில் அதிபராகப் பணியாற்றி ஓய்வு பெற்று, கனடாவில் வசிக்கிறார். ஏனைய சகோதரர்கள் வெளிநாடுகளில் வசிக்கின்றனர். தாயார் மட்டும் காத்தான்குடியில் உள்ளார். சம்சுதீன் மட்டக்களப்பு புனித மெதடிஸ்த மத்திய கல்லூரி, கொழும்பு இந்துக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றார்.[18] பின்னர் 2011 இல் மாணவர் நுழைவுச் சீட்டுப் பெற்று நியூசிலாந்து வந்தார்.[19][20][21] இவர் 2011 அக்டோபரில் மேற்படிப்புக்காக நியூசிலாந்து வந்தார்.[22] சம்சுதீன் 2016 இல் ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளராக காவல்துறையினருக்கு அடையாளம் காணப்பட்டார்.[3] சம்சுதீன் இரண்டு தடவை பெரிய வேட்டைக் கத்திகளை வாங்கியும், இசுலாமிய அரசுக் காணொளிகளை வைத்திருந்த காரணங்களுக்காகவும், இவர் ஒரு பொதுப் பாதுகாப்பு அபாயகரமானவராகக் கருதப்பட்டார்.[17] மே 2017 இல், அவர் நாட்டை விட்டு வெளியேற முயன்றபோது ஆக்லாந்து விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு, பிணை வழங்கப்படாமல் காவலில் வைக்கப்பட்டார். தடை செய்யப்பட்ட பொருட்களை விநியோகித்த குற்றச்சாட்டில் அவர் பின்னர் குற்றத்தை ஒப்புக்கொண்டு சிறையில் அடைக்கப்பட்டார்.[23] மூன்றாண்டுகள் சிறையில் கழித்த அவர் 2021 சூலையில் விடுவிக்கப்பட்டார்.[24] பின்னர் அவர் இசுலாமிய அரசுக்கு ஆதரவான பிரச்சார பாணியில் பொருட்கள் வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு, ஓராண்டு மேற்பார்வைக்கு தண்டனை அளிக்கப்பட்டது.[17] சிறையில் இருந்து விடுதலையான பிறகு, அவரைக் காவல்துறையினரும், நியூசிலாந்து பாதுகாப்புப் புலனாய்வு சேவையைச் சேர்ந்த 30 பேர் வரை அவரைக் கண்காணித்து வந்தனர்.[3][25] அவர் காவலில் இருந்தபோது சிறை அதிகாரிகளைத் தாக்கிய குற்றச்சாட்டுகளையும் அவர் இறுதிவரை எதிர்கொண்டிருந்தார்.[23] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia