அனுமந்தீர்த்தம் அனுமந்தீசுவரர் சுவாமி கோயில்

அருள்மிகு அனுமந்தீசுவரர் சுவாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கிருஷ்ணகிரி
அமைவிடம்:அனுமந்தீர்த்தம், ஊத்தங்கரை வட்டம்
சட்டமன்றத் தொகுதி:ஊத்தங்கரை
மக்களவைத் தொகுதி:கிருஷ்ணகிரி
கோயில் தகவல்
மூலவர்:அனுமந்தீசுவரர்
சிறப்புத் திருவிழாக்கள்:அனுமன் ஜெயந்தி

அனுமந்தீசுவரர் சுவாமி கோயில் என்பது தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டம், அனுமந்தீர்த்தம் என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு சிறிய அனுமான் கோயிலாகும்.

தலத்தின் சிறப்பு

பக்தர்கள் தீர்த்தகிரிசுவரர் கோயிலுக்கு செல்லும் முன்பாக இத்தீர்த்தத்தில் நீராடி இந்த அனுமனை வணங்கிய பின்னர் செல்லவேண்டும் என அனுமனுக்கு ராமன் வரம் அளித்துள்ளார் என்கின்றனர்.

கோயில்பற்றிய கதை

இலங்கையில் இராவணனுடன் இராமன் போரிட்டு ஏராளமான உயிர்கள் அழியக் காரணமாக இருந்ததால் இராமனுக்கு பிரம்மஹத்தி தோசம் பீடித்தது. அதைப்போக்க இராமன், இலட்சுமணன், சீதை ஆகியோர் தலயாத்திரையாக தாண்டகாவனம் (அரூர்) வரும் வழியில் வசிட்டரைச் சந்தித்தனர். அவர்களைப் பீடித்த பிரம்மஹத்தி தோசம் நீங்க தீர்த்த மலையில் உள்ள வடிவாம்பிகை உடனுறை தீர்த்தகிரீசுவரருக்கு அபிசேக ஆராதனை செய்து வழிபட்டவேண்டுமாறு கூறினார்.

அதன்படி இராமன் தீர்தகிரீசுவரரை வழிபடும் பொருட்டு சீதையை பார்வதி தீர்த்தத்தைக் (கௌரி தீர்த்தம்) கொண்டுவருமாறு அனுப்பினார். தீர்த்தம் கொண்டுவர தாமதம் ஆனதால் கங்கை தீர்த்தத்தைக் கொண்டுவர அனுமனுக்கு குறிப்பால் உணர்த்த அனுமனும் புறப்பட்டார். தீர்த்தங்களைக் கொண்டுவரச் சென்ற இருவரும் உரிய காலத்தில் வராத நிலையில், பூசைக்கு நேரமாவதை உணர்ந்த இராமன், வசிட்டரை வேண்டினார். வசிட்டரின் ஆலோசனையின்படி இலட்சுமணன் தன் வில்லில் இருந்து அம்பைச் செலுத்தி தீர்த்தமலையில் கங்கா தீர்த்தம், கௌரி தீர்த்தம் போன்ற தீர்த்தங்களை எழுந்தருள பணித்தார். இதையடுத்தி காவிரி, கௌதமி, சிந்து, நருமதை, மாத்த ஆறு, சோன நதி, வான கங்கைகளும் தீர்த்தமலை சிகரத்தில் மேகமாக வந்து முழங்கின. இந்த முழக்கங்கள் சிவனின் யோகத்துக்கு இடஞ்சலாக இருப்பதாக கருதி சிவகணங்களும் பூதகணங்களும் அவற்றை விரட்டியதால் அந்தப் புனித ஆறுகள் சிதறின.

இதையடுத்து இராமன் பரமசிவனை மனமுருகி துதித்தார். உடனே மலைப் பாறைகளின் மீது தீர்த்தம் பெருகி வந்தது. இதையடுத்து இராமன் அத்தீர்த்தத்தை எடுத்து சிவனுக்கு அபிசேகம் செய்து வழிபட்டார். அனுமன் தீர்த்தம் கொண்டுவரும் வழியில் பூசை மணி ஒலிப்பதைக் கேட்டு தான் சரியான நேரத்தில் தீர்த்தத்துடன் வர இயலவில்லையே என வருந்தி, தீர்த்தத்தை தூக்கி எறித்தார். அனுமனின் செயலை அறிந்த இராமன் அனுமனினிடம் வருந்த வேண்டாம் நீ எறிந்த தீர்த்தத்தில் நீர் பெருகி ஆறாக பரிணமிக்கும். இது உன் பெயரிலேயே அனுமன்தீர்த்தம் என அழைக்கப்படும் என்றார். மேலும் இனிமேல் இந்த தீர்த்தமலையை தரிசிக்க வருபவர்கள், முதலில் இத்தீர்த்தத்தில் நீராடிவிட்டே, தீர்த்தமலையில் உள்ள தீர்த்தங்களில் நீராடவேண்டும் அப்போதே அவர்கள் தீர்த்தமலையில் நீராடிய பலனைப் பெறுவர் என்றார். இவ்வாறு தீர்த்தம் விழுந்த இடமே அனுமன் தீர்த்தம் என அழைக்கப்படுகிறது.[1]

விழாக்கள்

ஆடிப்பெருக்கு நாளில் தென்பெண்ணை ஆற்றில் நீராடி அனுமனை வழிபடுகின்றனர். அனுமன் ஜெயந்தி இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

அமைவிடம்

அனுமந்தீர்த்தமானது அரூரில் இருந்து சென்னை செல்லும் பாதையில் 18 கி.மீ தொலைவிலும், ஊத்தங்கரையில் இருந்து சேலம் செல்லும் வழியில் 10 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

  1. திருக்கோயில்கள் வழிகாட்டி கிருஷ்ணகிரி மாவட்டம். தர்மபுரி: தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை. 2014 ஆகத்து. pp. 45–48. {{cite book}}: Check date values in: |year= (help)CS1 maint: year (link)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya