கலைஞர் மகளிர் உரிமைத் தொகைகலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaingar Magalir Urimai Thogai) என்பது தமிழ்நாட்டின் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் உரிமைத் தொகையாக 1000 இந்திய ரூபாயை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தும் தமிழ்நாடு அரசுத் திட்டமாகும். இத்திட்டத்தை தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி நினைவாகப் பெயரிட்டுள்ளார்கள். ஒரு கோடி குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை வழங்க திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டது. இத்திட்டம் 2023 செப்டம்பர் 15 ஆம் நாள் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கா. ந. அண்ணாதுரையின் பிறந்த நாளில் மு. க. ஸ்டாலினால் துவக்கிவைக்கப்பட்டது. முதல்கட்டமாக ரூ 12,000 கோடியை அரசு இத்திட்டத்துக்கு ஒதுக்கியது.[1] பின்னணியும் செயல்படுத்தலும்மு. க. ஸ்டாலின், 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின்போது, "ஸ்டாலினின் ஏழு உறுதிமொழிகள்" எனும் பெயரில் அடுத்து வரும் பத்து ஆண்டுகளுக்கான தொலைநோக்கு வாக்குறுதியை அறிவித்தார். இதன்படி தி.மு.க தேர்தல் அறிக்கையில் "தமிழ்நாட்டில் உள்ள குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம்தோறும் 1000 இந்திய ரூபாய் உரிமைத் தொகை வழங்குவோம்" என்கிற வாக்குறுதியை அளித்தார்கள்[2]. ஆனால், தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு, இத்திட்டத்தின் கீழ் "தகுதியான மகளிருக்கு மட்டும் உரிமைத் தொகை" என 2023 தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்டது. இதன்படி, தமிழ்நாடு முழுவதும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கான விண்ணப்பங்களை வழங்கும் முகாம்கள் 2023 சூலை 24 முதல் ஆகத்து 14 வரை நடைபெற்றன.[3] தமிழ்நாடு முழுவதும் சுமார் 1.63 கோடி பேர் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பித்திருந்தனர். இதில் ஒரு கோடியே ஆறு லட்சத்து ஐம்பதாயிரம் பயனாளிகள் தகுதியானவர்கள் என முதல் கட்டமாகத் தேர்வு செய்யப்பட்டனர்.[4] திட்டத்தில் பயன்பெற தகுதி பெறாதவர்கள் மேல் முறையீடு செய்ய வாய்ப்புகள் வழங்கப்பட்டன. தகுதிகள்
பிற மாநிலங்களில் தாக்கம்தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து கருநாடகத்தில், காங்கிரசு அரசின் முதல்வர் சித்தராமையா குடும்பத் தலைவிகளுக்கு மாதம் இந்திய ரூபாய் 2000 வழங்கும் கிரகலட்சுமி திட்டத்தை 2023 ஆகத்து மாதம் துவக்கிவைத்தார்.[5] மகாராட்டிரத்தில் 2024 ஆகத்தில் லடுக்கி பகின் யோஜனா என்ற பெயரில் மகளிருக்கு மாதம் 1500 இந்திய ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டம் மாநில அரசால் துவக்கப்பட்டது.[6] சார்க்கண்டு மாநிலத்தில் மகளிருக்கு மாதம் 1000 இந்திய ரூபாய் வழங்கும் திட்டம் ஹேமந்த் சோரன் தலைமையிலான மாநில அரசால் செயல்படுத்தப்பட்டது.[6] 2023-ஆம் ஆண்டு, மத்தியப் பிரதேச மகளிருக்கு மாதம்தோறும் உதவித் தொகை வழங்கும் திட்டத்தை சிவராஜ் சிங் சௌகான் தலைமையிலான பாஜக மாநில அரசு செயல்படுத்தியது.[6] 2025-ஆம் ஆண்டு தில்லி சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க வென்றது. அதைத் தொடர்ந்து 2025-ஆம் ஆண்டு மார்ச் 8 அன்று, அதாவது பன்னாட்டு மகளிர் நாளன்று, தில்லி முதல்வர் ரேகா குப்தா தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், மகளிருக்கு மாதந்தோறும் இந்திய ரூபாய் 2,500 உதவித்தொகை வழங்கும், 'மகிளா சம்ரித்தி யோஜனா' திட்டத்தை செயல்படுத்துவதற்காக ரூ.5,100 கோடி நிதியை ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.[7] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia