கல்லக்குடி ஆர்ப்பாட்டம்
கல்லக்குடி ஆர்ப்பாட்டம் (Kallakudi demonstration) என்பது சென்னை மாநிலத்தின் திருச்சிராப்பள்ளி மாவட்டம் கல்லக்குடியில் அந்த இடத்திற்கு டால்மியாபுரம் என்று பெயர் சூட்டப்பட்டதை எதிர்த்து 1953 சூலை 15 அன்று நடந்த ஆர்பாட்டமாகும். இந்த ஆர்பாட்டத்திற்கு திராவிட முன்னேற்றக் கழகம் ஏற்பாடு செய்தது. பீகாரைச் சேர்ந்த ராமகிருஷ்ண டால்மியா என்ற தொழிலதிபர் கல்லக்குடியில் ஒரு சிமென்ட் தொழிற்சாலையை நிறுவினார், மேலும் அவரது வேண்டுகோளின் பேரில் அந்த இடத்திற்கு டால்மியாபுரம் என்று பெயர் மாற்றப்பட்டது. தென்னிந்தியர்கள் மீது வட இந்தியர்கள் மேற்கொள்ளும் ஆதிக்க நடவடிக்கை என திமுக இதை எதிர்த்தது. ஐந்து முறை தமிழக முதல்வராக இருந்த மு. கருணாநிதி மற்றும் அவரது கட்சியான திமுக நடத்திய முதல் குறிப்பிடத்தக்க ஆர்ப்பாட்டம் இதுவாகும். இந்த போராட்டத்தின் போது திமுகவினர் பயணிகள் தொடருந்தை மறித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டக்கார்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டனர், 16 பேர் காயமடைந்தனர். மேலும் காலவத்றை துணை கண்காணிப்பாளர், வட்ட ஆய்வாளர் (சர்கிள் இன்பெக்டர்) மற்றும் பத்து காவலர்களும் உட்பட மொத்தம் பன்னிரண்டு போலீசார் காயமடைந்தனர். இந்த ஆர்ப்பாட்டம் திமுக மற்றும் கருணாநிதிக்கு முதல் குறிப்பிடத்தக்க ஆர்ப்பாட்டமாகும். இந்நிகழ்வு குறித்து மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி மற்றும் தூத்துக்குடி முதன்மை துணை நீதிபதியின் தலைமையில் வெளிப்படையான நீதி விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டது. நீதி விசாரணை, பின்னர் நீதிமன்ற நடவடிக்கைகளால் கைது செய்யப்பட்ட கருணாநிதி மற்றும் நான்கு திமுகவினருக்கு ஐந்து மாத கடுங்காவல் தண்டனை மற்றும் தலா 35 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. தமிழ்நாட்டின் இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக இந்த ஆர்ப்பாட்டம் இருந்தது, இது தமிழக அரசியலில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தியது. பின்னணி![]() அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் ஆளும் காங்கிரசு கட்சிக்கு எதிராக மூன்று காரணங்களுக்காக மும்முனைப் போராட்டம் நடத்த திட்டமிட்டது. முதலாவதாக, அப்போதைய தமிழக முதலமைச்சராக இருந்த ராஜாஜியின் இந்தித் திணிப்புக் கொள்கைகளுக்கு எதிராக, அவரது வீட்டிற்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. இரண்டாவதாக, தமிழர்களை "நான்சன்ஸ்" (முட்டாள்தனம்) என்று அழைத்த நேருவுக்கு எதிரான போராட்டத்தை நடத்த கட்சி விரும்பியது. மூன்றாவதாக, கல்லக்குடியில் சிமென்ட் ஆலையை நிறுவிய தொழிலதிபர் ராமகிருஷ்ண டால்மியாவின் கோரிக்கையை ஏற்று டால்மியாபுரம் என்று பெயர் மாற்றப்பட்டப் பெயரை மீண்டும் கல்லக்குடி என்று மாற்ற வேண்டும் என்பதற்கான போராட்டம். அண்ணாதுரையின் சொற்களில் சொல்வதென்றால், "கல்வித் திட்டத்திற்கு எதிரான போருக்கு ஒரு சகோதரனையும், இன்னொருவனை கல்லக்குடி போராட்டக் களத்திற்கும் அனுப்புகிறேன்". [1] பீகாரில் ஒரு சர்க்கரை ஆலையை பாகப்பிரிவினையாகப் பெற்ற 46 வயதான ராமகிருஷ்ண டால்மியா, பீகார் மற்றும் கல்லக்குடியில் தலா ஒன்று என இரண்டு சிமென்ட் தொழிற்சாலைகளைத் தொடங்கினார். அவர் வெளிநாட்டிலிருந்து இயந்திரங்களை இறக்குமதி செய்ததன் மூலம் ஏசிசி சிமென்ட் நிறுவனத்திற்கு சவாலாக உருவெடுத்தார். பீகாரின் ரோஹத் நகரில் தொழில் எந்த சிக்கலும் இல்லாமல் தொழிற்சாலை தொடங்கப்பட்ட நிலையில், கல்லக்குடியில் அந்த இடத்திற்கு டால்மியாபுரம் என்று பெயர்மாற்றியதற்கு எதிராக அவர் எதிர்ப்பைச் சந்தித்தார். [2] ஆர்ப்பாட்டம்சட்டமன்ற விவாதங்கள் குறித்த அதிகாரப்பூர்வ குறிப்புகளின்படி, 1953, சூலை, 15 இன் முற்பகுதியில், தொடருந்து நிலையப் பலகையின் பெயரை அழிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. காலை அரியலூர் நோக்கி சென்ற பயணிகள் தொடருந்தை மறிக்க முயன்ற 6 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டது. மதியம், 2 மணியளவில், அரியலூர் செல்லும் பயணிகள் தொடருந்தை தடுத்து நிறுத்தி ஏராளமான கூட்டம் கூடியது. துணைக்கோட்ட குற்ற நடுவரான சாராட்சியர் எடுத்த முயற்சி தோல்வியடைந்ததால், போலீசார் தடியடி நடத்த நேரிட்டது. தொடருந்து தெற்கு நோக்கி நரத்தொடங்கிய நிலையில், கும்பலால் இடையூறும், கல் வீச்சுகளும் நடத்தப்பட்டன. பணியில் இருந்த காவல் துணைக் கண்காணிப்பாளரும் வட்ட ஆய்வாளரும் (சர்க்கிள் இன்ஸ்பெக்டர்) காயம்பட்டதால், துப்பாக்கிச் சூடு நடத்த சாராட்சியர் உத்தரவிட்டார். துப்பாக்கிச்சூட்டினால், இரண்டு பேர் இறந்தனர், கூட்டம் நாலா திசைகளிலும் சிதறியது. 13 பேர் இலால்குடி மருத்துவமனையிலும், 3 பேர் திருச்சி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றனர். மொத்தத்தில், இரண்டுபேர் இறந்தனர், பொதுமக்கள் 16 பேர் காயமுற்றனர். காவல்துறையில், துணைக் காவல் கண்காணிப்பாளர், வட்ட ஆய்வாளர் மற்றும் பத்து காவலர்கள் உள்ளிட்ட 12 பேர் காயமடைந்தனர். [3] இந்நிகழ்வு தொடர்பாக மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி மற்றும் தூத்துக்குடி முதன்மை துணை நீதிபதி தலைமையில் வெளிப்படையான நீதி விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டது. [3] நீதி விசாரணை மற்றும் பின்னர் நீதிமன்ற நடவடிக்கைகள் காரணமாக கைது செய்யப்பட்ட கருணாநிதி மற்றும் மற்ற 4 பேருக்கும் ஐந்து மாத கடுங்காவல் தண்டனை மற்றும் தலா 35 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இருவரும் தொடருந்தில் பயணம் செய்தவர்கள் என்பதும், போராட்டத்துக்கும் தொடர்பில்லாதவர்கள் என்பதும் தெரியவந்தது. [2] மரபு1949 ஆம் ஆண்டு திமுக அதன் தாய்க் கழகமான திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்த பிறகு நடத்திய குறிப்பிடத்தக்க ஆர்பாட்டம் இதுவாகும். பின்னர் ஐந்து முறை தமிழக முதல்வராக பதவியேற்ற கருணாநிதிக்கு கட்சிரீதியாக இது உதவியது. ஆளும் காங்கிரசு கட்சிக்கு எதிராக கட்சிக்கு உத்வேகம் அளிக்க இது உதவியது. திராவிட நாடு என்ற பிரிவினைக் கோரிக்கையுடன் தமிழ்நாட்ல் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்களை திமுக தொடர்ந்து நடத்தியது. காங்கிரசு கட்சியைச் சேர்ந்த மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த சி. ராஜகோபாலாச்சாரி, உள் கட்சி நிர்ப்பந்தத்தால் 1954ல் பதவி விலக நேர்ந்தது. ஈ. வெ. இராமசாமி (ஈ.வெ.ரா) தலைமையில் ராஜாஜிக்கு எதிரான எதிர்ப்பை முன்னெடுத்துச் சென்ற காமராசர், மாநிலத்தின் முதலமைச்சராகப் பதவியேற்றார். ![]() அரசு பள்ளிகளில் இந்தியை கட்டாயப் பாடமாக்க முயன்ற போதெல்லாம் திராவிடர் கழகம் (திக) (முன்னாள் நீதிக்கட்சி) மற்றும் ஈ. வெ. இராமசாமி (ஈ.வெ.இரா) தலைமையில் இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டங்கள் நடந்தன. [4] அதுவரை இந்தி அடிப்படையில் காங்கிரசை எதிர்த்த ஈ.வெ.இரா, பிராமணரல்லாதவரான காமராசர் முதலமைச்சரானதால் தனது காங்கிரசு எதிர்ப்பு நிலைப்பாட்டை மென்மையாக்கிக் கொண்டு, 1954 முதல் 1963 வரை காமராசரின் ஆட்சிக்கு ஆதரவாக இருக்கத் தொடங்கினார். [5] காங்கிரசையும் காமராசர் ஆட்சியையும் தி.க ஆதரித்த நிலையில், தனித் திராவிட நாடு என்ற கருப்பொருளை மையமாக கொண்டு காங்கிரசின் நகர்வுகளை வெகுஜன ஆர்ப்பாட்டங்களுடன் திமுக தொடர்ந்து எதிர்த்தது. நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் அதிக பிரதிநிதித்துவம் பெறுவதற்காக திமுக இந்த ஆர்ப்பாட்டத்தை பயன்படுத்தியதாக அரசியல் வரலாற்றாசிரியர்கள் சிலர் கருதுகின்றனர். [6] 1956 ஆம் ஆண்டு ஜனவரி 28 ஆம் தேதி, தமிழ்ப் பண்பாட்டுக் கழகத்தால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், ஆங்கிலம் அலுவல் மொழியாகத் தொடர ஆதரவு அளித்து, ஈ. வெ. இராமசாமி, இராஜாஜி ஆகியோருடன் அண்ணாதுரை கையெழுத்திட்டார். [7] [8] 1969-ல் அண்ணாதுரை மறைவுக்குப் பிறகு முதல்வராகப் பதவியேற்ற மு. கருணாநிதி, டால்மியாபுரம் தொடடுந்து நிலையத்தின் பெயரை கல்லக்குடி என மாற்றினார். [9] விமர்சனம்கருணாநிதி, முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர், தமிழர்களின் உணர்வுகளுக்கு மாறாக, பழைய மகாபலிபுரம் சாலையை ராஜீவ் காந்தி சாலை என்று பெயர் மாற்றம் செய்ததை விமர்சகர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். இந்நிகழ்வு குறித்த மற்றொரு விமர்சனம் என்னவென்றால், அது சமூக-அரசியல் தளத்தில் எந்த தாக்கத்தையும் அல்லது நீடித்த மரபையும் உருவாக்கவில்லை. வரலாற்றாசிரியர் தஞ்சை நலங்கிள்ளியின் கூற்றுப்படி, "டால்மியாபுரம்-கள்ளக்குடி போராட்டம் தமிழகத்தில் ஒரு தீவிரமான நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆயினும்கூட, இந்த "முக்கியமற்ற" போராட்டம், தொடருந்து முன் மறியல் செய்து படுத்துக் கொண்டதாலும், அதைத் தொடர்ந்து நடந்த காவல்துறை நடவடிக்கைகளாலும், முதல் பக்க செய்தியாகவும், திராவிடக் கட்சிகளின் வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாகவும் மாறியது". [2] நிபுணர்களின் மற்றொரு கருத்துப்படி, கருணாநிதி 6 மாத சிறைவாசத்தின் போது இறந்தவர்கள் மற்றும் நிலம் என்ற இரட்டைக் கருப்பொருளைப் பயன்படுத்தி தனது பிம்பத்தைக் கவனமாக வடிவமைத்தார். [10] மற்றொரு பார்வையின்படி, கருணாநிதி போராட்டத்தை திட்டமிட்டதற்கும் அதிகமாகச் செய்ததால், அது ஆறு பேரின் மரணத்திற்கு வழிவகுத்தது குறித்து அண்ணா வருத்தப்பட்டார். [11] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia