இராம. சுப்பையா
காரைக்குடி இராம. சுப்பையா (Karaikudi Rama Subbaiah, 14 நவம்பர் 1908 - 21 மே 1997) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதியும், திராவிட இயக்கத்தின் முன்னோடியும் ஆவார். இவர் 1972 முதல் 1978 வரை தமிழ்நாடு சட்ட மேலவை உறுப்பினராக இருந்தார்.[1] துவக்ககால வாழ்க்கைசுப்பையா 1908 நவம்பர் 14 அன்று அரிமளத்தில் ( புதுக்கோட்டை மாவட்டம் ) நாட்டுக்கோட்டை நகரத்தார் குடும்பத்தில் பிறந்தார். இவரது குடும்பத்தினர் சமய நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தபோதிலும், இவருக்கு 1924-25 இல் அறிமுகமான "பெரியார்" ஈ. வெ. இராமசாமியின் பகுத்தறிவு சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டார்.[2] அரசியல்சுயமரியாதை இயக்கம் (1930-44)சுப்பையா 1930 இல் சுயமரியாதை இயக்கத்தில் இணைந்து காரைக்குடி பகுதியில் இயக்கத்தை வளர்ப்பதில் முக்கியப் பங்காற்றினார். இவர் தமிழ்க் கவிஞர் பாரதிதாசனின் நெருங்கிய நம்பிக்கைக்குரியவராக ஆனார். அவர் அதே நேரத்தில் சுயமரியாதை இயக்கத்தில் இணைந்தார். குஞ்சிதம் குருசாமி, பட்டுக்கோட்டை அழகிரி, நெ. து. சுந்தரவடிவேலு, மூவலூர் இராமாமிர்தம், பூவாளூர் பொன்னம்பலனார்]] ஆகியோர் சுப்பையாவின் குடும்பத்துக்கு நெருக்கமானவர்களாக இருந்தனர்.[2] 1930களில் சுப்பையா " ஆதி திராவிடர் நல மாநாட்டை" வெற்றிகரமாக நடத்தினார். ம. சிங்காரவேலர், ப. ஜீவானந்தம், ப. ராமமூர்த்தி போன்ற பொதுவுடைமை பிரமுகர்களின் நட்பையும் பெற்றார். 1935 ஆம் ஆண்டில், சிங்காரவேலர் சுப்பையாவின் வீட்டிற்கு "சமதர்ம விலாஸ்" ( பொருள் " சமூகவுடைமை இல்லம்") என்று பெயரிடுமாறு பரிந்துரைத்தார்,[3] மேலும் அந்தப் பெயர் பொறிக்கப்பட்ட ஒரு பளிங்குக் கற்பலகையையும் வழங்கினார். அப்போதிருந்து, சுப்பையாவின் நண்பர்கள் சிலர் இவரை "சமதர்மம் சுப்பையா" என்று அழைத்தனர்.[2] 1932 ஆம் ஆண்டு, மிகுந்த எதிர்ப்புக்கு மத்தியில், காரைக்குடியில் சுப்பையா " இராமநாதபுரம் மாவட்ட "சுயமரியாதை இயக்க மாநாட்டை" நடத்தினார்.[2] 1937-40 இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின் போது, சுப்பையா நூற்றுக்கணக்கான மக்களைத் திரட்டினார், இருப்பினும் இவர் பங்கேற்கவில்லை (பெரியார் அவரைக் கைதாக வேண்டாம், என்றும் வெளியில் இருந்து போராட்டங்களை வலுப்படுத்த வேண்டுமென அறிவுறுத்தினார்).[2] 27 திசம்பர் 1938 அன்று, சுயமரியாதை இயக்கம் சென்னை மாகாணத்தின் நான்காவது "தமிழர் மாநாட்டை" நடத்தியது, இதில் 28 பேர் அமைப்பின் மாநில செயற்குழு உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ராமநாதபுரத்தைச் சேர்ந்த எம். காசி விஸ்வநாதம் மற்றும் டபிள்யூ. பி. ஏ. சௌந்தரபாண்டியன் ஆகிய இருவருடன் சுப்பையாவும் ஒருவர்.[2] திராவிடர் கழகம் (1944-49)சுயமரியாதை இயக்கம் 27 ஆகத்து 1944 இல் திராவிடர் கழகமாக (தி.க.) உருமாறியபோது சுப்பையா அதனுடன் இருந்தார். தி.க தனது முதல் மாநில மாநாட்டை ("கருப்புச்சட்டை மாநாடு" என்று அழைக்கப்படுகிறது) 11-12 மே 1946 இல் மதுரையில் நடத்தியது.[4] மே 12 அன்று, வைகை ஆற்றின் மணற் கரையில் அமைக்கப்பட்டிருந்த மாநாட்டுப் பந்தலுக்கு சில குண்டர்கள் தீ வைத்தனர். இது வேறு சில வன்முறைச் சம்பவங்களின் ஒரு பகுதியாகும் (இது அ. வைத்தியநாத ஐயரின் [5] உத்தரவின் பேரில் நடந்ததாக தி.க. பின்னர் கூறியது). குழப்பங்களைத் தொடர்ந்து, சுப்பையா, க. அன்பழகன் மற்றும் சில பங்கேற்பாளர்கள் மதுரையை விட்டு வெளியேறினர். மானாமதுரை, திருக்கோட்டியூர் கடந்து காரைக்குடியை அடைந்தனர். மே 14 அன்று காரைக்குடிக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் சுப்பையா ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். அங்கும் அடையாளம் தெரியாத சிலர் கற்களை வீசித் தாக்கினர்.[6] திராவிட முன்னேற்றக் கழகம் (1949-97)பெரியாருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால், 1949-ல் சி. என். அண்ணாதுரையுடன் சேர்ந்து சுப்பையா தி.கவை விட்டு வெளியேறினார். சுப்பையா அண்ணாதுரையின் புதிய கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தில் (திமுக) இணைந்தார். அப்போது கட்சியில் இரண்டாம் நிலைத் தலைவராக இருந்த மு. கருணாநிதியின் நட்பைப் பெற்றார். சுப்பையாவுக்கு கவிஞர் கண்ணதாசனை கருணாநிதி அறிமுகப்படுத்தினார்.[2] காரைக்குடி மண்டலத்தில் பல இளைஞர்களை திமுக பக்கம் இழுத்ததில் சுப்பையாவுக்கும் முக்கிய பங்கு உண்டு. இவரால் வழிகாட்டப்பட்டவர்களில் இராம. வீரப்பன் (பின்னர் எம்.ஜி.ஆர் கழகத்தை நிறுவியவர்) மற்றும் கவிஞர் சாமி பழனியப்பன் (பாடலாசிரியர் பழநிபாரதியின் தந்தை) ஆகியோர் அடங்குவர்.[2] 1953 ஆம் ஆண்டில், இராஜகோபாலாச்சாரி அரசாங்கத்தின் மாறுபட்ட தொடக்கக் கல்வித் திட்டத்திற்கு எதிரான போராட்டங்களில் சுப்பையா ஈடுபட்டார், இது "குலக் கல்வித் திட்டம் (பரம்பரை/சாதிக் கல்வித் திட்டம்)" எனப் பெயர் பெற்று குறுகிய காலம் நீடித்த திட்டமாகும். அதே நேரத்தில், கல்லக்குடியின் பெயரை டால்மியாபுரம் என மாற்றுவரதற்கு எதிரான போராட்டத்தின் இரண்டாவது போராட்டக் குழுவிற்கு இவர் தலைமை தாங்கினார், முதல் மற்றும் மூன்றாவது குழுக்களுக்கு முறையே கருணாநிதி மற்றும் கண்ணதாசன் தலைமைதாங்கினர். இவர் கைது செய்யப்பட்டு திருச்சிராப்பள்ளி மத்திய சிறைச்சாலையில் மூன்று மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். இவரது சிறைத் தோழர்களில் கருணாநிதியும் ஒருவர். விடுதலைக்குப் பிறகு சுப்பையா திமுகவின் பொதுக்குழு உறுப்பினரானார். 1957 சென்னை மாநில சட்டமன்றத் தேர்தலில் காரைக்குடி தொகுதியில் எம். ஏ. முத்தையா செட்டியாரை ( இதேகா) எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.[2] 20 ஏப்ரல் 1972 இல், சுப்பையா கருணாநிதியால் (அப்போதைய தமிழக முதல்வர் ) தமிழ்நாடு சட்ட மேலவை உறுப்பினராக (எம்எல்சி) நியமிக்கப்பட்டார். இவர் 19 ஏப்ரல் 1978 வரை அந்தப் பதவியில் இருந்து பணியாற்றினார் [2] தனிப்பட்ட வாழ்க்கைசுப்பையா விசாலாட்சியை மணந்தார் அவர் 1930 முதல் சுயமரியாதை இயக்கத்தில் உறுப்பினராக இருந்தார். அவர்களுக்கு ஏழு பிள்ளைகள் இருந்தனர். சோசலிச கொள்கைகளில் இவருக்கு இருந்த ஆர்வம் காரணமாக, சுப்பையா தனது மூத்த பிள்ளைக்கு (பி. 17 ஜனவரி 1934) லெனினின் பெயரை வைத்தார். அந்தச் சிறுவன் நான்கு அல்லது ஐந்து வயதிலேயே காய்ச்சலால் இறந்தான். இந்திராவும் (சுப்பையாவின் மகள்; பி. செப்டம்பர் 1942) இரண்டு மகன்களை விட்டுவிட்டு 32 வயதில் இறந்துவிட்டார்.[6][7][8] விசாலாட்சி 1987 செப்டம்பர் 19 அன்று நாள்பட்ட நீரிழிவு நோயால் இறந்தார்.[9] சுப்பையாவின் மகன்களில் ஒருவரான செல்வமணி (பி.1939) 2015க்கும் 2024க்கும் இடைப்பட்ட காலத்தில் இறந்தார். 2024 வரை, சுப்பையாவின் நான்கு பிள்ளைகள் உயிருடன் எஞ்சி இருந்தனர்: தமிழ் திரைப்பட இயக்குநர் எஸ். பி. முத்துராமன் (பி.1935), கனகலட்சுமி (இ. திசம்பர் 1936), சுவாமிநாதன் (இ.1946), திராவிடத் தமிழ் சித்தாந்தவாதியான சுப. வீரபாண்டியன் அல்லது சுபவீ . (பி.1952) ஆகியோர் இவரது பிள்ளைகளாவர்.[8] மரணம்சுப்பையா 21 மே 1997 அன்று இறந்தார்.[2] இவரது உடலுக்கு அப்போதைய முதல்வர் கருணாநிதியின் விருப்பப்படி, முதலில் வந்து மாலை அணிவித்தார். பின்னர், சுப.வீயின் ஆலோசனையின்படி எந்த சமயச் சடங்குகளும் இன்றி உடல் தகனம் செய்யப்பட்டது. மரபுகளை மீறி பெண்களும் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். வழக்கறிஞரும் திராவிட சித்தாந்தவாதியுமான அருள்மொழி இரங்கல் உரை நிகழ்த்தினார்.[8] துக்க நிக்கநிகழிச்சியில் தமிழ் அறிஞர் "சிலம்போலி" சு. செல்லப்பனும் கலந்து கொண்டார்.[10] மரபு1985 இல், சுப்பையாவின் வாழ்க்கை வரலாறான, நானும் என் திராவிட இயக்க நினைவுகளும் என்ற நூல் சுப.வீயால் பதிப்பிக்கபட்டு வெளிவந்தது. கனிமுத்துப் பதிப்பகம் (சென்னை) பதிப்பகத்தார் இதை பதிப்பித்தனர்.[7] இது பெரியார் திடலில் கருணாநிதியால் வெளியிடப்பட்டது. கருணாநிதி ஐந்தாவது முறையாக முதலமைச்சராக இருந்தபோது, மே 10, 2008 அன்று சுப்பையாவின் நூற்றாண்டு விழாவை நடத்தினார்.[2] இந்த நிகழ்வு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.[11] 8 செப்டம்பர் 2021 அன்று வெளியிட்ட அறிக்கையில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி காரைக்குடியில் உள்ள ஒரு கல்லூரிக்கு சுப்பையா பெயரை சூட்டுமாறு முதல்வர் மு. க. ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்தார்.[3] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia