மக்கள் விடுதலை முன்னணி
![]() மக்கள் விடுதலை முன்னணி (Janatha Vimukthi Peramuna, சிங்களம்: ජනතා විමුක්ති පෙරමුණ, JVP) என்பது இலங்கையின் ஓர் இடதுசாரி அரசியல் கட்சி ஆகும்.[14] இக்கட்சி முன்னர் ஒரு புரட்சிகர இயக்கமாக இருந்து, இலங்கை அரசுக்கு எதிராக இரண்டு ஆயுதமேந்திய கிளர்ச்சிகளில் ஈடுபட்டது: ஒருமுறை இலங்கை சுதந்திரக் கட்சி அரசுக்கு எதிரான 1971 கிளர்ச்சி, மற்றொன்று ஐக்கிய தேசியக் கட்சி அரசுக்கு எதிரான 1987–1989 கிளர்ச்சி ஆகும். இரண்டு கிளர்ச்சிகளுக்கும் ஒரு சோசலிச அரசை நிறுவுவதே நோக்கமாக இருந்தது.[15] அதன் பின்னர், ம.வி.மு சனநாயக அரசியலில் நுழைந்து, அதன் சித்தாந்தத்தைப் புதுப்பித்தது, தனியார் சொத்து ஒழிப்பு போன்ற அதன் மூல மார்க்சியக் கொள்கைகளைக் கைவிட்டது.[16] 2014 ஆம் ஆண்டு முதல் அனுர குமார திசாநாயக்க தலைமையில் மக்கள் விடுதலை முன்னணி செயற்படுகிறது. ம.வி.மு 1965 இல் ரோகண விஜயவீரவினால் ஒரு சிறிய அமைப்பாகத் தொடங்கப்பட்டது, பின்னர் அது நாட்டு அரசியலில் செல்வாக்கு செலுத்தக்கூடிய நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட கட்சியாக மாறியது. 70-களின் தொடக்கத்தில் இலங்கை சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய முன்னணியின் இடதுசாரிக் கூட்டணி அரசாங்கத்திற்காக அதன் உறுப்பினர்கள் வெளிப்படையாக பரப்புரை செய்தனர்; எவ்வாறாயினும், கூட்டணியின் மீதான அவர்களின் ஏமாற்றத்தைத் தொடர்ந்து, அவர்கள் 1971 இன் தொடக்கத்தில் இலங்கை மேலாட்சிக்கு எதிரான கிளர்ச்சியைத் தொடங்கினர், கட்சியின் மீதான தடையைத் தொடர்ந்து இது தீவிரமடைந்தது. ம.ஐ.மு-இன் இராணுவப் பிரிவான செஞ்சோலை, இலங்கைத் தீவு முழுவதிலும் உள்ள 76 காவல்துறை நிலைகளைக் கைப்பற்றியது. 1977 இல் அரசுத்தலைவர் ஜே. ஆர். ஜெயவர்தன ம.வி.மு தலைவர் ரோகண விஜேவீரவை சிறையிலிருந்து விடுவித்ததை அடுத்து அக்கட்சி சனநாயக தேசிய அரசியலில் நுழைந்தது. விஜயவீர 1982 அரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிட்டு 4.16% வாக்குகளைப் பெற்று மூன்றாவதாக வந்தார். தேர்தலுக்கு முன்பு, அவர் நாட்டை வன்முறையில் கவிழ்க்க சதி செய்ததற்காக குற்றவியல் நீதி ஆணையத்தால் தண்டிக்கப்பட்டார். 1987 இல் இலங்கை-இந்திய ஒப்பந்தம் கைகையெழுத்திடப்பட்ட பின்னர் ம.வி.மு இரண்டாவது முறையாக மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட கிளர்ச்சியைத் தொடங்கியது. இக்கிளர்ச்சியும் முறியடிக்கப்பட்டு, ரோகண விஜயவீர கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, கட்சி "தேசிய இரட்சிப்பு முனன்ணி" என்ர பெயரில் தேர்தல் அரசியலுக்குத் திரும்பியது. எஞ்சியிருந்த உறுப்பினர்கள் 1994 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியடப் பரப்புரை செய்தனர், ஆனால் இறுதியில் அக்காலத்தில் முக்கிய எதிர்க்கட்சியாக விளங்கிய சிங்களத் தேசியவாத இலங்கை சுதந்திரக் கட்சிக்கு ஆதரவளித்தனர். 2004 இல், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் ஒரு அங்கமாக அரசாங்கத்துடன் இணைந்து, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் அரசாங்கத்திற்கு ஆதரவளித்தது, ஆனால் பின்னர் கூட்டணி அரசாங்கத்தை விட்டு அது வெளியேறியது. 2019 முதல், மவிமு தனது சொந்த தேசியக் கூட்டணியான தேசிய மக்கள் சக்தியின் கீழ் தேர்தலில் போட்டியிட்டு, இலங்கை அரசியலில் ஒரு முக்கிய மாற்றுக் கட்சியாக இருந்து வருகிறது.[17][18] 2024 அரசுத்தலைவர் தேர்தலில், மவிமு இன் தலைவர் அனுர குமார திசாநாயக்க இலங்கையின் 9-ஆவது நிறைவேற்றதிகாரம் கொண்ட அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[19] ஜேவிபியின் தோற்றம்இலங்கைக் கம்யூனிஸ்ட் (சீன சார்பு) கட்சியில் இருந்து பிரிந்து சென்ற ரோகண வீஜயவீர (Rohana Wijeweera) 1965 மே 14 அன்று இக் கட்சியை நிறுவினார். சோசலிச சமத்துவத்திற்குப் பாடுபடப் போவதாகக் கட்சி அறிவித்தது. அது தொடர்பாக அரசியல் வகுப்புக்கள் பலவற்றை நடத்தினர். இவற்றால் கவரப்பட்ட படித்த கிராமப்புற இளைஞர்கள், மாணவர்கள், தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் பெருமளவாக ஜே.வி.பி.யில் இணைந்தனர். இரகசியமான முறையில் ஆயுதப் புரட்சிக்கு வேண்டிய ஆயத்தங்களையும் செய்து வந்தனர். 1971ம் ஆண்டு கிளர்ச்சி1971 மார்சசில் ஜே.வி.பி.யின் இரகசிய ஆயுதக்கிடங்கு பற்றி ஆளும் சிறிமாவோ பண்டாரநாயக்கா அரசிற்குத் தெரியவந்தது. இதனை அடுத்து ஜே.வி.பி.யின் தலைவர் ரோகண வீஜயவீர உடனடியாகக் கைது செய்யப்பட்டார். பின்னர் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார். தலைவர் சிறைக்குள் இருக்கும்பொழுதே 1971 ஏப்ரல் 5ம் திகதி இலங்கை அரசிற்கு எதிராக ஜேவிபியினர் நாட்டின் பல பாகங்களில் ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். பல பொலிஸ் நிலையங்கள் தாக்கப்பட்டன. தெற்கின் பல பாகங்கள் ஜேவிபியின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. கிளர்ச்சியினை முறியடிக்க இலங்கை அரசாங்கம் சர்வதேச உதவியினைக் கோரியது. உதவிக்கு விரைந்த இந்தியா, சீனா நாடுகளின் உதவியுடன் ஆயுதக்கிளர்ச்சி இரண்டு வார காலத்தினுள் அடக்கப்பட்டது. ஜேவிபி உறுப்பினர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். முடிவில் ஜேவிபியினை இலங்கை அரசு தடை செய்தது. 1977-1983 காலகட்டம்1977 ம் ஆண்டு பொதுத் தேர்தலில் வென்ற ஜே. ஆர். ஜெயவர்த்தனா தலைமையிலான ஐதேக அரசு ரோகண வீஜயவீரவை விடுதலை செய்ததுடன் ஜேவிபி மீதான தடையினையும் நீக்கியது. ஜே.வி.பி. நாடாளுமன்ற ஜனநாயக முறைக்குத் திரும்புவதாக அறிவித்ததுடன், தேர்தல்களிலும் பங்குபற்றினர். 1982 ம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜேவிபியின் வேட்பாளராக ரோகண வீஜயவீர போட்டியிட்டு 275,000 வாக்குகளைப் பெற்றார். 1983 ஜூலைக்கலவரம்கொழும்பில் 1983 ஜூலையில் இடம்பெற்ற இனக்கலவரத்தினை அடுத்து அக் கலவரத்திற்கு ஜேவிபியினரே காரணமெனக் கூறி இலங்கை அரசால் மீண்டும் இவ்வமைப்பு தடை செய்யப்பட்டது. இதன் பின்னர் ஜேவிபினர் தலைமறைவாக இயங்கத்தொடங்கினர். 1987-1989 ம் ஆண்டு கிளர்ச்சி1990ன் பின்னர்ஜே.வி.பி. கட்சியானது புதிய தலைமைத்துவத்தின் கீழ் 1990 ன் பின்னர் மீள் கட்டியெழுப்பப்பட்டது. 1994 ம் ஆண்டிலிருந்து இடம் பெற்ற சகல தேர்தல்களிலும் பங்குபற்றி வருகின்றது. 2001ம் ஆண்டு இடம்பெற்ற பொதுதேர்தலில் 9% வாக்குகளைப் பெற்றனர். 2004ம் ஆண்டு பொதுத்தேர்தலில் இலங்கை சுதந்திரக் கட்சியுடன் இணைந்து போட்டியிட்டு கூட்டணி ஆட்சி அமைத்தனர். ஜே.வி.பி. தற்போது தேசியவாதம் சார்ந்த கொள்கையினைப் பின்பற்றி வருகிறது. தமிழீழ விடுதலைப் புலிகள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, நோர்வே அரசு என்பவற்றிக்கெதிராக கடும் எதிர் நிலைப்பாட்டினைக் கொண்டிருக்கிறது. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia