விவிலியம் (புனித வேதாகமம், பைபிள்), யூதர் மற்றும் கிறித்தவர்களது புனித நூலாகும். பல தனித்தனி நூல்களை உள்ளடக்கிய விவிலியம் ஒரு நூல்தொகுப்பாக இருப்பதோடு, உலகில் அதிகளவு மொழிகளுக்கு பெயர்க்கப்பட்ட நூல் என்ற பெருமையையும் கொண்டுள்ளது. ஒரே பெயரை கொண்டிருப்பினும் யூதர் மற்றும் கிறிஸ்தவர்களது விவிலியங்கள் வெவ்வேறானவையாகும். கிறித்தவரும் யூதரும் ஏற்றுக்கொள்ளும் விவிலியப் பகுதி கிறித்தவர்களால் பழைய ஏற்பாடு என்று அழைக்கப்படுகிறது. அதனை எபிரேய விவிலியம் என்றும் கூறுவர். கிறித்தவரும் யூதரும் விவிலியத்தைக் கடவுள் வெளிப்படுத்திய புனித வாக்கு என நம்புகின்றனர்.
உலகத்திலேயே திருவிவிலியம் எனும் 'பைபிள்' தான் அதிக மொழிகளில் (சுமார் 2,100) மொழிபெயர்க்கப்பட்ட நூல். அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட 1815ஆம் ஆண்டிற்குப் பின் சுமார் 500 கோடிக்கும் மேலான விவிலியப் பிரதிகள் அச்சடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளன.
விவிலியமானது பல தனி நூல்களின் தொகுப்பாகும். விவிலியத்தில் அடங்கியிருக்கும் நூல்களில் எவற்றை அதிகாரப்பூர்வமானவை என ஏற்பது என்பது குறித்து கிறிஸ்தவ பிரிவினரான கத்தோலிக்கர், கிழக்கு மரபுவழி திருச்சபையினர், சீர்த்திருத்தர்கள் ஆகியோரிடையே ஒத்த கருத்து கிடையாது. முக்கியமாக யெருசலேமின் இரண்டாவது ஆலயத்துக்குப் பின்னரான காலப்பகுதியின் இணைத் திருமுறை நூல்களை) கத்தோலிக்க, கிழக்கு மரபுவழி மற்றும் சில சீர்த்திருத்த திருச்சபைகள் பழைய ஏற்பாட்டின் நூல்களாக ஏற்றுக்கொள்ளும் அதேவேளை பெரும்பாலான சீர்த்திருத்த திருச்சபைகள் இந்நூல்களை அதிகாரப்பூர்வமானவை என்று ஏற்றுக் கொள்வதில்லை. மேலும் இந்நூல்கள் யூதமத விவிலியத்திலும் காணப்படுவதில்லை. இச்சிறு வேறுபாடுகளை தவிர்த்தவிடத்து விவிலியத்தில் வேறு வேற்றுமைகள் இல்லை. மேலும்....
செப்துவசிந்தா (Septuaginta) என்பது கிறித்தவத் திருவிவிலியத்தின் முதற் பகுதியாகிய பழைய ஏற்பாட்டின் தலைசிறந்த கிரேக்க மொழிபெயர்ப்பு ஆகும். இது அன்று வழக்கிலிருந்த கொய்னே (Koine) என்றழைக்கப்படும் நடைமுறை கிரேக்கத்தில் கி.மு. 3-2 நூற்றாண்டுகளில் எழுதப்பட்டது
இலத்தீன் மொழியில் செப்துவசிந்தா என்பதன் பொருள் எழுபது என்றாகும். எழுபது (அல்லது எழுபத்திரண்டு) பேர் இந்த மொழிபெயர்ப்பைச் செய்வதில் ஈடுபட்டனர் என்னும் அடிப்படையில் இம்மொழிபெயர்ப்பு எழுபதின்மர் பெயர்ப்பு என்று பொருள்படும் செப்துவசிந்தா என்னும் பெயரால் அழைக்கப்படலாயிற்று.
இந்த கிரேக்க மொழிபெயர்ப்பின் முழு கிரேக்கப் பெயர் hē metáphrasis tōn hebdomēkonta (ἡ μετάφρασις τῶν ἑβδομήκοντα) என்பதாகும். அது தமிழில் "எழுபது உரையாளர்களின் மொழிபெயர்ப்பு" (translation of the seventy interpreters) என வரும். இலத்தீனில் Interpretatio septuaginta virorum என்று அழைக்கப்பட்டது. அதிலிருந்து சுருக்கமாக "செப்துவசிந்தா" (Septuaginta = எழுபது) என்னும் பெயர் பெறலாயிற்று; அப்பெயரும் நிலைத்துவிட்டது.