இட்டாய்பவா பொன்டே நோவா அரங்கம்
இட்டாய்பவா பொன்டெ நோவா அரங்கம் (Itaipava Arena Fonte Nova,[1] அலுவல்முறையாக பேராசிரியர் ஆக்டேவியோ மங்கபெய்ரா பண்பாட்டு விளையாட்டு வளாகம் (Complexo Esportivo Cultural Professor Octávio Mangabeira) பிரேசிலின் பாகையா மாநிலத்தின் சவ்வாதோர் நகரில் அமைந்துள்ள விளையாட்டரங்காகும். காற்பந்தாட்டத்திற்கு மட்டுமேயான இந்த அரங்கம் 2013 பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி மற்றும் 2014 உலகக்கோப்பை காற்பந்து போட்டிகளுக்காக கட்டப்பட்டுள்ளது.[2] மிகவுயர்வாக 55,000 பார்வையாளர்கள் கண்டு களிக்கக் கூடியதாக இந்த அரங்கம் உள்ளது. இது முன்பிருந்த பொன்டெ நோவா விளையாட்டரங்கத்தை இடித்துக் கட்டப்பட்டுள்ளது. செருமனியின் பிரன்சுவிக்கிலிருந்து வந்த கட்டிட வடிவமைப்பாளர்கள் இதனை வடிவமைத்துள்ளனர். இந்தக் குழுவே 2006 உலகக்கோப்பையின் போது அன்னோவர் விளையாட்டரங்கை கட்டமைத்தவர்களாவர். பெட்ரோபொலிசு குழுமத்தின் இட்டாய்பவா மதுவடிக்கும் நிறுவனம் 2013 முதல் 2023 வரை பத்தாண்டுகளுக்கு புரவலராக தனது பெயரை விளையாட்டரங்கிற்கு இடுவதற்கு $ 100 மில்லியன் கொடுதுள்ளதால் இந்த விளையாட்டரங்கம் "இட்டாய்பவா அரீனா பொன்டெ நோவா" எனப் பெயரிடப்பட்டுள்ளது. 2014 உலகக்கோப்பை விளையாட்டரங்கங்களுக்கு இவ்வாறு பெயர் உரிமைகள் ஏலம் விடப்படுவது இதுவே முதல் முறையாகும். சீரமைக்கப்பட்ட பின்னர் இந்த அரங்கம் ஏப்ரல் 7, 2013 அன்று துவங்கப்பட்டது; முதல் ஆட்டமாக பாகையா மாநில லீக் ஆட்டமொன்றில் விடோரியா கழகம் பாகையா கழகத்தை 5-1 கணக்கில் வென்றது. இந்த அரங்கத்தில் முதல் கோலை அடித்தவராக விடோரிய கழகத்தின் ரெனாட்டோ காயா உள்ளார். இந்த ஆட்டத்தின்போது சில இருக்கைகளில் பார்வையாளர்களால் ஆட்டத்தை சரிவரப் பார்க்கவியலாமல் இருந்ததாக முறையீடு எழுந்தது.[3] மேலும் அரங்கில் கூடுதல் தூசியும் நீர்த்தேங்கல்களும் இருந்தன.[3] இவற்றை சரிசெய்வதாக பொறுப்பாளர் நிறுவனங்கள் கூறின.[3] மே 27, 2013 அன்று பெய்த பெருமழையில் ஒருபக்க கூரை சரிந்தது.[4] 2016 ஒலிம்பிக்கில் காற்பந்தாட்டங்கள் நடக்கவிருக்கும் அரங்குகளில் ஒன்றாக இதுவும் விளங்குகிறது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia