சூன் 2011இல் துவங்கிய 2014 உலகக்கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றுப் போட்டிகளில் பங்கேற்று 31 நாடுகள் இப்போட்டியில் நுழைந்தன. ஏற்று நடத்தும் நாடான பிரேசிலையும் சேர்த்து 32 அணிகள் மோதின. மொத்தம் 64 ஆட்டங்கள் பிரேசிலின் 12 நகரங்களில் நடைபெற்றன. இந்த 12 நகரங்களிலிலும் விளையாட்டரங்கங்கள் புதியதாகவோ புதுப்பிக்கப்பட்டதாகவோ கட்டமைக்கப்பட்டன. இம்முறையே முதன்முதலாகப் புதிய கோல்-கோடு தொழினுட்பம் பயன்படுத்தப்பட்டது.[5]
1930 இலிருந்து உலகக்கோப்பையை வென்ற உலக வாகையாளர்களான உருகுவை, பிரேசில், இத்தாலி, செருமனி, இங்கிலாந்து, அர்கெந்தீனா, பிரான்சு மற்றும் எசுப்பானியா ஆகியன 2014 போட்டிகளில் பங்கேற்றன. 2010 உலகக்கோப்பை வாகையாளரான எசுப்பானியா அணி, மற்றும் இங்கிலாந்து, இத்தாலி ஆகியன குழுநிலை ஆட்டங்களில் தோல்வியுற்று வெளியேறின. உருகுவாய் 16 அணிகளின் சுற்றிலும், பிரான்சு காலிறுதியிலும் தோல்வியுற்று வெளியேறின. பிரேசில் அணி அரையிறுதியில் தோல்வியடைந்ததை அடுத்து இறுதிப் போட்டியில் அர்கெந்தீனாவும், செருமனியும் போட்டியிட்டன. இதுவரை அமெரிக்கக் கண்டங்களில் இடம்பெற்ற ஏழு உலகக்கிண்ணப் போட்டிகளிலும் தென் அமெரிக்க அணிகளே வென்றுள்ளன.[6] இறுதியாட்டத்தில் செருமனி அர்கெந்தீனாவை கூடுதல் நேரத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் வென்று அமெரிக்கக் கண்டங்களில் உலகக்கோப்பையை வென்ற முதல் ஐரோப்பிய அணி என்ற பெருமையைப் பெற்றது.[7]
போட்டி நடத்தும் நாடு தேர்வு
செப் பிளாட்டர் 2014 உலகக்கோப்பையை நடத்தும் நாடாக பிரேசிலை அறிவித்தல்
மார்ச்சு 7, 2003இல் பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு ஒவ்வொரு கண்டத்திலும் போட்டிகளை சுழற்றுவது என்ற கொள்கைக்கேற்ப 2014ஆம் ஆண்டிற்கான போட்டிகள் தென் அமெரிக்காவில் நடைபெறும் என அறிவித்தது.[8][9] இந்த முடிவு முதன்முறையாக அடுத்தடுத்த இரு உலகக்கோப்பைகள் ஐரோப்பாவிற்கு வெளியே நடத்தப்பட வாய்ப்பளித்தது.
இடைக்காலத்தில் கொலம்பியா தான் ஏற்று நடத்த ஏலக்கோரிக்கையை அனுப்ப முடிவு செய்து[12] அலுவல்பூர்வமாக திசம்பர் 2006இல் தனது கோரிக்கையை அறிவித்தது.[13] இதற்கு ஒரு வாரம் முன்னதாக பிரேசிலும் தனது விருப்பத்தைத் தெரிவித்திருந்தது.[14] பின்னதாக, கொலம்பியா அலுவல்பூர்வமாக ஏப்ரல் 2007இல் தனது ஏலக்கோரிக்கையை மீட்டுக் கொண்டதால் மீண்டும் பிரேசிலே ஒரே கோரிக்கையாளராக அமைந்தது.[15] 2007ஆம் ஆண்டு அக்டோபர் 30 இல் ஃபிபா முறையாக பிரேசிலை இந்நிகழ்வை ஏற்று நடத்தும் நாடாக உறுதி செய்தது.[16]
தகுதிநிலை
இறுதிப் போட்டிகளில் விளையாடும் அணிகளுக்கான இடங்கள் மார்ச் 3, 2011 அன்று முடிவாயின; 31 இடங்களுக்கான பகிர்வு முந்தையப் போட்டியைப் போன்றே தகுதிப் போட்டிகளின் மூலம் முடிவு செய்ய திட்டமிடப்பட்டது.[17] சூலை 30, 2011 அன்று இரியோ டி செனீரோவில் உள்ள மரீனா ட குளோரியா தங்குவிடுதியில் 2014 உலகக்கோப்பைக்கான தகுதிச்சுற்றுக்கான நிரல் வரையப்பட்டது.[18][19] ஏற்று நடத்தும் நாடாக, பிரேசில் தானியக்கமாக போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றது.
கீழ்வரும் 32 அணிகள் இறுதிப் போட்டிகளில் விளையாடத் தகுதி பெற்றுள்ளன. போட்டி ஆட்டங்களின் நிரலை வரைவதற்கான அவற்றின் போட்டி தரவரிசைகளுக்கு பிஃபா தரவரிசைப் பட்டியல் பயன்படுத்தப்பட்டுள்ளது.[22]
பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு மார்ச்சு 2013இல் முன்தெரிவாக 52 நடுவர்களின் பட்டியலை வெளியிட்டது. ஆறு காற்பந்து கூட்டமைப்புக்களிலிலிருந்தும் ஒரு நடுவருக்கு இரு துணை நடுவர்கள் கூட்டாக இந்தப் பட்டியல் அமைந்திருந்தது.[30] 2014 சனவரி 14 அன்று பிஃபாவின் நடுவர் குழு 25 மூன்று நபர் நடுவர் அணிகளையும் ஆதரவாக எட்டு இரட்டையர் அணிகளையும் 43 வெவ்வேறு நாடுகளிலிலிருந்து அறிவித்தது.[31][32]
கோல்-கோடு தொழினுட்பம்
உலகக்கோப்பை காற்பந்தின் இறுதிப்போட்டிகளில் முதன்முறையாக நடுவர்களுக்குத் துணையாக கோல்-கோடு தொழினுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது. இதற்கான உந்துதலாக முந்தைய உலகக்கோப்பை அமைந்தது; 2010ஆம் ஆண்டுப் போட்டியில் பதினாறுவர் சுற்றில் செருமனிக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்திற்கு கோல் வழங்க தவறுதலாக மறுக்கப்பட்டது.[33] இந்தப் பிழையை அடுத்து பிஃபா தலைவர் செப் பிளாட்டர் "கோல்-கோடு தொழினுட்பத்தைக் கருத்தில் எடுக்காதிருப்பது முட்டாள்தனம்" எனக் கடுமையாகச் சாடினார்.[34] இதனையடுத்து 2012இல் பன்னாட்டுக் கால்பந்துச் சங்க வாரியம் இதன் பயன்பாட்டிற்கு ஏற்பளித்தது.[35] இந்த மாற்றத்திற்கு பின்பு இந்தத் தொழினுட்பம் பிஃபாவின் 2012, 2013 கழக உலகக்கோப்பை போட்டிகளிலும் 2013 கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டியிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. நான்காம் முறையாக 2014 உலகக்கோப்பையில் பயன்படுத்தப்படவுள்ளது. அக்டோபர் 2013இல் செருமனி நிறுவனத்தின் கோல்கன்ட்ரோல் இந்தப் போட்டியில் அலுவல்முறையாகப் பயன்படுத்தவிருக்கும் தொழினுட்பமாக தேர்ந்தெடுக்கப்பட்டது.[36]
இந்த 2014 ஆம் ஆண்டு உலகக்கோபை காற்பந்து போட்டியில் பிரான்ஸ் அணி மற்றும் ஹாண்டூரஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியின் 48 ஆவது நிமிடத்தில் பென்சமா அடித்த கோல் அடிக்க முயற்சி செய்தபோது, பந்து கோல் கம்பத்தில் பட்டு திரும்பும் வேளையில், அந்த கோலைத் தடுக்க முயற்சித்த ஹாண்டூரஸ் அணியின் கோல் கீப்பர் நோயல் வெலாட்ரஸின் கைகளில் உரசி கோல் எல்லைக் கோட்டைக் கடந்தது என்று முறைப்பாடு எழ, 'கோல்-கோடு தொழினுட்பம்' மூலம் பந்து கோல் வலையின் கோட்டைக் கடந்தது என்று முடிவு செய்யப்பட்டது.[37]
மறைகின்ற தெளிப்பு
உலகக்கோப்பை இறுதியாட்டங்களில் முதன்முறையாக மறைகின்ற தெளிப்பு பயன்படுத்தப்படவிருக்கின்றது; நீரை அடிப்படையாகக் கொண்ட இந்த தெளிப்பு சில நிமிடங்களிலேயே மறைகின்ற தன்மை உடையதாக உள்ளது. தடங்கலற்ற உதையின்போது தடுக்கும் அணிக்கான பத்து கஜ கோட்டையும் பந்தை எங்கு வைப்பது என்பதையும் குறிக்க இது பயன்படுத்தப்படுகிறது. 2013 பிஃபா 20-கீழ் உலகக்கோப்பையிலும் 2013 பிஃபா 17-கீழ் உலகக்கோப்பையிலும் 2013 பிஃபா கழகங்களுக்கான உலகக்கோப்பையிலும் வெற்றிகரமான சோதனையோட்டங்களுக்குப் பிறகு இதன் பயன்பாட்டிற்கு பிஃபா அனுமதி வழங்கியுள்ளது.[38]
போட்டிகள்
குழு நிலை
குழுவில் வெற்றி பெற்ற அணிகளும் அதற்கடுத்து வரும் அணிகளும் சுற்று 16க்கு முன்னேறும்.[39]
வாகையாளர்
இரண்டாமிடம்
மூன்றாமிடம்
நான்காமிடம்
கால் இறுதி
சுற்று 16
குழு நிலை
சமநிலையை முறி கட்டளை விதி
குழுவிலுள்ள ஓவ்வொரு அணிகளின் தரவரிசை பின்வருமாறு உறதி செய்யப்படும்:
எல்லா குழு போட்டிகளிலும் அதிக புள்ளி
எல்லா குழு போட்டிகளிலும் கோல் வித்தியாசம்
எல்லா குழு போட்டிகளிலும் அதிக கோல் அடித்தமை
சமநிலையில் முடிந்த அணிகளுக்கிடையில் போட்டியில் அதிக புள்ளிகள்
சமநிலையில் முடிந்த அணிகளுக்கிடையில் போட்டியில் கோல் வித்தியாசம்
சமநிலையில் முடிந்த அணிகளுக்கிடையில் போட்டியில் அதிக கோல் அடித்தமை
இவ்விளையாட்டுப் போட்டிக்கு பீபாவினால் உறுதி செய்யப்பட்ட மொத்தத் தொகை $ 576 மில்லியனாகும். இது 2010 உலகக்கோப்பை காற்பந்து போட்டிக்கு கொடுக்கப்பட்டதிலிருந்து 37 வீதம் அதிகரித்துள்ளது.[45] போட்டிக்கு முன்பாக 32 நாட்டு அணிகளும் தலா $1.5 மில்லியனை ஆயத்த செவுக்காகப் பெறும். போட்டிக்காக பின்வரும் பரிசுத் தொகை வழங்கப்படும்:
அ.டா$8 மில்லியன் – குழு நிலைப் போட்டியில் வெளியேறும் ஒவ்வொரு அணிக்கும் (16 அணிகள்)
அ.டா$9 மில்லியன் – 16 அணிகளின் சுற்று போட்டியில் வெளியேறும் ஒவ்வொரு அணிக்கும் (8 அணிகள்)
அ.டா$14 மில்லியன் – அரை இறுதி போட்டியில் வெளியேறும் ஒவ்வொரு அணிக்கும் (4 அணிகள்)
இந்த இறுதிப் போட்டிகளின் சின்னமான "அகவெழுச்சி"யை ஆபிரிக்கா எனப்படும் பிரேசிலிய நிறுவனம் உருவாக்கியுள்ளது.[46] மூன்று வெற்றிக்கரங்கள் கூட்டாக உலகக்கோப்பையை தூக்குவது போன்ற ஒளிப்படத்தை ஒட்டி இது வடிவமைக்கப்பட்டுள்ளது. மஞ்சள் மற்றும் பச்சை வண்ணங்கள் பிரேசில் உலகநாடுகளை வரவேற்பதாக அமைந்துள்ளது. ஜோகானஸ்பேர்க்கில் நடந்த 2010 உலகக்கோப்பையின் போது ஒரு நிகழ்ச்சியில் இச்சின்னம் வெளியிடப்பட்டது.[46] இந்த வடிவமைப்பு 25 பிரேசிலிய நிறுவனங்களுக்கிடையேயான போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டது.[47] இத்தேர்விற்கான நடுவர் குழாமில் தொழில்முறை கணினி பக்கவடிவமைப்பாளர் எவரும் இல்லை என்றும் இச்சின்னம் முகத்தில் கையை வைத்திருப்பது போல இருப்பதாகவும் பிரேசிலின் வரைகலை வடிவமைப்பாளர் அலெக்சாண்டர் வொல்னர் குறை கூறியுள்ளார்.[48]
பிஃபா சனவரி 2013இல் பிரேசிலிய கலைநிறுவனம் கிராமா உருவாக்கிய ஓர் அலுவல்முறை சுவரொட்டியை வெளியிட்டது.[49] அலுவல்முறை சுலோகமாக "அனைவரும் ஒரே தாளத்தில் " (போர்த்துக்கேயம்: "Juntos num só ritmo") தெரிந்தெடுக்கப்பட்டுள்ளது.[50]
அலுவல் முறை பாடல்
1962ஆம் ஆண்டுமுதல் ஒவ்வொரு உலகக்கோப்பைக்கும் ஒரு அலுவல்முறை பாடல் உருவாக்கப்பட்டு வருகிறது. On 24 January 2014, பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பும் சோனி இசை நிறுவனமும் சனவரி 24, 2014 அன்று சொல்லிசைக் கலைஞர் பிட்புல், ஜெனிஃபர் லோபஸ் மற்றும் கிளாடியா லெயிட் பாடிய "நாங்கள் ஒருவரே (ஒலே ஒலா)" என்ற பாடலை அலுவல்முறையான பாடலாக அறிவித்தனர்.[51] மேலும் சோனி உலகளவில் சூப்பர்சாங் என்றழைக்கப்படும் பாடலுக்கான போட்டியை அறிவித்தது. இது ஒரே விருப்பு, ஒரே தாளம் என்ற அலுவல்முறை இசைக்கோவையில் இடம் பெறும்.[52] பெப்ரவரி 10, 2014 அமெரிக்க எலிஜா கிங்கின் "விடா" ("வாழ்வு") என்ற பாடல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.இதனை எசுப்பானியர் ரிக்கி மாட்டின் பாடியுள்ளார்.[53]வாக்கா வாக்கா (இது ஆபிரிக்காவின் நேரம்) என்ற முந்தைய உலகக்கோப்பைக்கான அலுவல்முறை பாடலைப் பாடிய சக்கீரா "டேர் (ல ல லா)" என்ற பாடலை இதற்கேற்ப மாற்றிப் பாடியுள்ளார். இது இரண்டாம்நிலை அலுவல்முறைப் பாடலாக கொள்ளப்படுகிறது.[54] மார்ச்சு மாத இறுதியில் பிஃபா "டர் உம் ஜெய்தோ (வழி காணுவோம்)" என்ற பாடலை 2014 உலகக்கோப்பைக்கான அலுவல்முறைப் பண்ணாக தேர்ந்தெடுத்துள்ளது.[55]
ஆட்டப்பந்து
2014 உலகக்கோப்பைக்கான அலுவல்முறை பந்தாக அடிடாசு பிராசுகா விளங்கும்.1970 முதல் உலகக்கோப்பைஆட்டப் பந்தை வழங்கிவரும் அடிடாசு நிறுவனம், பிரேசிலின் பண்பாட்டுக் கூறுகளை வெளிப்படுத்தும் விதமாக மூன்று பெயர்களை குறும்பட்டியலிட்டிருந்தது. இதிலிருந்து 1 மில்லியனுக்கும் கூடுதலான பிரேசிலிய காற்பந்து விசிறிகள் இந்தப் பெயரைத் தேர்ந்தெடுத்தனர்.[56]
ஊடகம்
தொடர்ந்து நான்காம் முறையாக பிஃபா உலகக்கோப்பை இறுதியாட்டங்களின் காட்சிகளை இன்பிரண்ட் இசுபோர்ட்சு & மீடியா நிறுவனத்தின் துணைநிறுவனமான ஹோஸ்ட் பிராட்காஸ்ட் சர்வீசஸ் (HBS) வழங்குகிறது.[57] இந்த விளையாட்டுக்களை திரைபிடிக்கும் கருவிகளுக்கான அதிகாரபூர்வ நிறுவனமாக சோனி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக மீயுயர் வரையறை ஒளிதத் தயாரிப்பு திறனுள்ள பன்னிரெண்டு 40-அடி-நீள பெட்டிகளை சோனி உருவாக்கியுள்ளது. ஒவ்வொரு ஆட்டக்களத்திற்கும் ஒன்றாக இவற்றில் மிகவிரிவான கருவிகள் அமைக்கப்பெற்றுள்ளன.[58][59] ஒவ்வொரு ஆட்டமும் 37 சீர்தர ஒளிப்பிடிப்புக் கருவிகளையும் இரண்டு மிகவிரைவு நகர்வு ஒளிப்பிடிப்புக் கருவிகளையும் நேர்காணல்களுக்கான பிரத்யேக ஒளிப்பிடிப்பு சாதனங்களையும் பயன்படுத்தும். மேலும் வான்வழி ஒளிப்பிடிப்புக் கருவியும் கம்பி மூலமாக ஆட்டக்களத்தில் இயங்கும் ஒளிப்பிடிப்புக் கருவியும் இவற்றில் அடங்கும்.[59] இந்தப் போட்டியைக் குறித்தான அதிகாரபூர்வ திரைப்படமும் மூன்று ஆட்டங்களும்[nb 2]மீயுயர் வரையறைத் தொலைக்காட்சித் தொழினுட்பத்தில், (4K வரையறை), படம் பிடிக்கப்படும்.[60]
பரப்புகை உரிமங்கள் – தொலைக்காட்சி, வானொலி, இணையம் மற்றும் நகர்பேசி பரப்புகை – பிஃபாவால் நேரடியாகவோ அல்லது உரிமம் பெற்ற நிறுவனங்களாலோ தனித்தனி பகுதிகளில் விற்கப்பட்டுள்ளன.[61] உலகக்கோப்பை நடத்துவதால் பிஃபா பெரும் வருமானத்தில் இந்த விற்பனை 60% ஆக மதிப்பிடப்படுள்ளது.[62] பன்னாட்டு பரப்புகை மையம் இரியோ டி செனீரோவின் புறநகரில் பர்ரா டா டியுகாவில் ரியோசென்ட்ரோவில் அமைக்கப்பட்டுள்ளது.[63][64]
சர்ச்சைகளும் எதிர்ப்புகளும்
எதிர்ப்புகள்
ஆரம்ப நிகழ்வு தினத்தில் உலகக்கோப்பை எதிர்ப்புபிரேசிலியாவில் கட்டுமானப்பணியில் இறந்த ஒன்பது பேருக்கு நினைவஞ்சலி செலுத்தும் விதமாக நுழைவுச்சீட்டு வாயிலருகில் எதிர்ப்பு வாசகங்களுடன்
இந்த ஆர்பாட்டங்களும் மனக்குறைகளும் பிரேசில் அரசின் பொருளியல் மேலாண்மையை எதிர்த்து எழுந்த பரந்த ஆர்பாட்டங்களின் அங்கங்களாகும். பொது போக்குவரத்தில் உயர்த்தப்பட்ட கட்டணங்களும் இவற்றிற்கு காரணமாயின.[65][68] மேலும் கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டிகளின் மற்ற ஆட்டங்களின்போதும் அரங்கங்களுக்கு வெளியே இந்தப் போராட்டங்கள் தொடர்ந்தன.[69][70]
பிளாட்டர் "தங்கள் மனக்குறைகளை வெளிப்படுத்த காற்பந்தை பயன்படுத்தக் கூடாது" எனவும்[71] இந்த விளையாட்டுகளுக்காக செலவிடப்படும் பொதுப்பணம் "உலகக்கோப்பைக்கானது மட்டுமல்ல, வருங்காலத்திற்கானவை" எனவும் கூறினார்.[71] பொதுமக்களுக்கு ஆற்றிய உரையில் ரூசெஃப் கூறினார்: "இந்த விளையாட்டரங்கங்களுக்காக அரசு செலவழித்த பணம் ஓர் நிதி முதலீடு; இவற்றைப் பயன்படுத்தும் பின்னாள் அரசுகளும் நிறுவனங்களும் செலுத்தும் கட்டணங்களால் இது முறையே மீட்கப்படும்".[72]
விளையாட்டரங்கினுள் அத்துமீறல்
சூன் 18 அன்று எசுப்பானியாவிற்கும் சிலிக்கும் நடந்த பி குழு ஆட்டத்தின்போது 100 சிலியின் ஆதரவாளர்கள் மரக்கானா விளையாட்டரங்கதினுள் அத்துமீறி உட்புகுந்தார்கள். ஒருவர் உடல்நலக்கேடுடன் இருப்பதாக நடித்து காவலரின் கவனத்தை திசை திருப்ப, மற்றுவர்கள் இரு தடுப்புச் சுவர்களை உடைத்தும் ஊடக மையத்தின் கண்ணாடிக் கதவை உடைத்தும் விளையாட்டரங்கினுள் நுழைந்தார்கள். முன்னதாக சூன் 15 அன்றும் இத்தகைய அத்துமீறலை அர்கெந்தீனர்கள் எஃப் குழு ஆட்ட தினத்தன்று நடத்தினர்.[73][74]
லூயிசு சுவாரெசு கடி நிகழ்வு
2014 உலகக்கோப்பை போட்டிகளில் டி குழுவில் உருகுவைக்கும்இத்தாலிக்குமான இறுதியாட்டத்தின் 79வது நிமிடத்தில் உருகுவையின் ஆட்டக்காரர் லூயிசு சுவாரெசு இத்தாலிய ஆட்டக்காரர் ஜியார்ஜியோ சில்லினியின் இடது தோள்பட்டைக் கடித்தார்; உடனேயே செல்லினி ஆட்டநடுவருக்கு தமது கடிக் காயத்தைக் காண்பித்தார். இத்தாலிக்கு தடங்கலில்லா உதை வழங்கப்பட்டபோதும் அப்போது சுவாரெசிற்கு எந்த தண்டனைச் சீட்டும் வழங்கப்படவில்லை.[75] இத்தாலிய வீரர்கள் நடுவரிடம் முறையிட்டிருக்கையில் உருகுவைக்கு கோண உதை வாய்ப்பு கிட்டியது. இதில் உருகுவையின் டியாகோ கோடின் கோலடித்து ஆட்டத்தை உருகுவை 1-0இல் வென்றது. இதனால் டி குழுவில் இரண்டாமிடத்தை எட்டி அடுத்த நிலைக்கு தகுதி பெற்றது. ஆட்டத்திற்குப் பின்னர் சுவாரெசு "செல்லினியின் தோள் மீது தொடர்பு ஏற்பட்டதாகவும் வேறேதும் இல்லை எனவும்" "இவை நிகழ்வது இயல்பே" என்றும் கூறினார். இவ்வாறு ஓர் எதிராளியைக் கடிப்பது சுவாரெசிற்கு மூன்றாம் முறையாகும்.[75][76][77] சூன் 26 அன்று பிஃபாவின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு சுவாரெசை ஒன்பது பன்னாட்டு ஆட்டங்களிலில் பங்கேற்பதை உடனடியாகத் தடை செய்தது. இதனால் உலகக்கோப்பையில் மேலும் பங்கேற்க இயலாது போயிற்று. மேலும் காற்பந்து தொடர்புடைய, விளையாட்டரங்கினுள் நுழைவது உட்பட, எந்தவொரு செயற்பாட்டிலும் நான்கு மாதங்கள் அவர் பங்கேற்க தடை விதித்தது. இக்குழு அபராதத் தொகையாகவும் சுவிசு பிராங்க்100,000 (ஏறத்தாழ. US$112,000 அல்லது £65,700) விதித்தது.[78] இந்தத் தீர்ப்பு அவர் கழக மாற்றலுக்கு இடையூறாக இருக்காது.[79] இந்தத் தீர்ப்பை எதிர்த்து உருகுவை கால்பந்துச் சங்கம் (AUF) மேல்முறையீடு செய்யவிருப்பதாகக் கூறியுள்ளது.[80][81]
நெய்மார் எலும்பு முறிவு
கொலம்பியாவுடனான காலிறுதிப் போட்டியில் பந்தைத் தடுக்க முயலும்போது நெய்மாரின் முதுகில் பின்னாலிருந்து கொலம்பிய ஆட்டக்காரர் யுவான் கேமிலோ சுனிகா காலால் முட்டினார்; இதனால் காயமடைந்த நெய்மாரை தூக்குப் படுக்கையில் களத்தை விட்டு எடுத்துவர வேண்டியதாயிற்று. மருத்துவமனையில் பரிசோதனைகளுக்குப் பிறகு நெய்மாரின் முதுகுத்தண்டில் ஓர் முள்ளெலும்பு உடைந்துள்ளதாகவும் அதனால் அவரால் மேற்கொண்டு உலகக்கோப்பை ஆட்டங்களில் பங்கேற்க இயலாது என்றும் அறிவிக்கப்பட்டது.[82]
மேற்கோள்கள்
↑உலகக்கோப்பை வரலாற்றிலேயே பிரேசில் அணி இட்ட முதல் சுயகோல்[40]
↑மீயுயர் வரையறைத் தொலைக்காட்சியாக பிடிக்கப்படவிருக்கும் ஆட்டங்கள்:பதின்மச் சுற்றில் ஒன்று (28 சூன்), காலிறுதியில் ஒன்று (4 சூலை) மற்றும் இறுதியாட்டம்