இறுதிச் சடங்கு (இந்து சமயம்)![]() ![]() ![]() ![]() ![]() அந்திமக் கிரியைகள் அல்லது மரணச் சடங்குகள் (Antyesti) (சமசுகிருதம்:अन्त्येष्टि) இந்து சமயத்தில் செய்யும் இறுதி மற்றும் 16வது சடங்காகும். இறந்தவரின் உடலை எரிக்கும் போது இச்சடங்கு மேற்கொள்ளப்படுகிறது. [2][3][4]ஒருவர் இறந்த பிறகு இச்சடங்கு அவரது உறவினர்களால் நிகழ்த்தப்பட்டாலும், அடுத்த உலகத்தின் மதிப்பு, நிகழ்காலத்தை விட அதிகமாக இருப்பதால் மரணச் சடங்கு முக்கியத்துவம் பெறுகிறது. இறுதி சடங்குகள் புரோகிதர் உதவியுடன் செய்யப்படுகிறது.[5][6] ஒருவர் இறந்த பிறகு முதலில் அவரது வாயில் துளசி இலைகள் கலந்த நீர் விட வேண்டும்.பின்னர் பசுவின் சாணத்தைப் பூசி சுத்திகரிக்கப்பட்ட தரையில் இறந்தவரை கிடத்த வேண்டும். இறந்தவரின் பழைய ஆடைகள் அகற்றப்பட்டு, நீரால் உடலைக் குளிப்பாட்ட வேண்டும். உடலை வெட்டப்படாத புதிய துணியால் சடலத்தை மூட வேண்டும். மூங்கில் கட்டைகளில் செய்த பாடையை, சணல் கயிறுகளால் கட்ட வேண்டும். சடலத்தை பாடையில் வைத்து சணல் கயிற்றால் கட்ட வேன்டும். சடலத்திற்கு மாலை அணிவிக்க வேண்டும். அந்நேரம் புரோகிதர் இறப்பு தொடர்பான வேத மந்திரங்களை உச்சரிப்பார். பின்னர் இறந்தவரின் நெருங்கிய உறவினர்கள் சடலத்துடன் கூடிய பாடையைச் சுற்றி வலம் வந்து ஆராத்தி எடுப்பர். பின்னர் இறந்தவரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர் சடலத்தை எரியூட்டும் (தகன மேடைக்கு) இடத்திற்கு கொண்டு செல்லும் போது கோவிந்தா, கோவிந்தா அல்லது ராமா, ராமா என தொடர்ந்து உச்சரிப்பர். வாழ்க்கைத் துணைவர்களில் ஒருவர் இறக்கும் போது, சுடுகாட்டிற்கு அக்னியை (நெருப்பு) பானையில் எடுத்துச் செல்லப்படும். அந்த அக்னியால் மட்டும் மட்டும் முதலில் சடலத்தை எரிக்கப் பயன்படுத்துவர். இச்சடங்கு தம்பதியரின் திருமணத்தின் முடிவையும்; மரணச் சடங்கின் துவக்கதையும் குறிக்கிறது. தகன மேடை மீது சடலம் வைக்கப்பட்ட பிறகு, உறவினர்கள் வாய்க்கரிசி போட்டும், நெய் ஊற்றியும் மற்றும் இரத்தத் தொடர்புடைய மூத்த மகன் அல்லது வேறு மகன்கள் அல்லது பங்காளியால் சிதைக்கு தீ மூட்டப்படுகிறது. எள் விதைகள் சிதை நெருப்பில் தெளிக்கப்படுகிறது. தற்போது தகனத்திற்கு மின்சார சூளை பயன்படுத்தப்படுவதால், வாரிசுகளால் சிதைக்கு தீ மூட்டும் சடங்கு செய்ய இயல்வதில்லை. பின்னர் பின்பற்றப்படும் சடங்குகள் மற்றும் அனுசரிப்புகள், இந்தியாவில் பிரதேச ரீதியிலும், இனக்குழுக்கள் ரீதியிலும் வேறுபடுகிறது. சடலத்தை தகனம் செய்வதன் மூலம், உடலின் ஐந்து அடிப்படை கூறுகளான பஞ்ச பூதங்களான பூமி, நீர், நெருப்பு, காற்று மற்றும் விண்வெளி ஆகியவை பிரபஞ்சத்திற்குத் திரும்புகிறது. ஈமக் கிரியைகளுக்கான சடங்குகள்வழக்கமாக அந்திமக் கிரியைகளுக்கான சடங்குகள் இறந்த ஒரு நாளுக்குள் செய்யப்படும். சடலத்தின் தலை தெற்கு திசை நோக்கி வைக்கப்படுகிறது. இச்சடங்கு இந்து சமூகக் குழுக்களிடையே சிறிது வேறுபாடுகளுடன் நடைபெறுகிறது. இறந்தவர் விதவை எனில் வெள்ளை துணி மற்றும் துளசி மாலை மட்டும் அணிவிக்கப்படுகிறது.. கணவர் இருக்கும் போது மனைவி இறப்பின், நெற்றில் திலகம் இட்டு, மஞ்சள் அல்லது வண்ண ஆடைகள் அணிவிக்கப்படுகிறது. இறந்தவரின் மூத்த மகன், இறந்தவரின் வாயில் எள்ளு அல்லது அரிசியை வைத்து, சடலம் மீது நெய் தெளிப்பார், யமன், காலன் மற்றும் ஏற்கனவே நீத்த முன்னோர்களை நினைத்து சடலத்தின் மீது தர்ப்பைப் புல்லில் மூன்று கோடுகள் இடுவர். சடலத்தின் தலைக்கு அருகில் நீர் பானையை உடைக்கும் முன், அந்த பானையை தோளில் சுமந்து சிதையை மூன்று முறை வலம் வரவேண்டும். பின் சிதைக்கு நெருப்பு மூட்டிய பின்னர் இறந்தவரின் வாரிசுகள் மற்றும் உறவினர்கள் சிதையை மூன்று முறை வலம் வருவர். சடலத்தை எரியூட்டிய பின்னர் அனைவரும் விரைவில் குளிக்க வேண்டும்..[7] தகனத்திலிருந்து சேகரிக்கப்பட்ட சாம்பல் மற்றும் எலும்புகள் பின்னர் அருகிலுள்ள நதி அல்லது கடலில் கரைக்கப்படுகிறது. புனிதப்படுத்தப்படுகிறது. தமிழ்நாடு போன்ற சில பிரதேசங்களில், இறந்தவரின் மகன்கள் மற்றும் பிற ஆண் உறவினர்கள் தங்கள் தலை மற்றும் தாடியை மழித்துக் கொண்டு, பத்தாம், பதினொன்றாவது அல்லது பன்னிரண்டாம் நாளில், இறந்தவரின் நினைவாக அனைத்து உறவினர்களுக்கும் எளிய உணவு வழங்கப்படுகிறது.. சில சமூகங்களில், இந்நாளில் இறந்தவர்களின் நினைவாக ஏழைகளுக்கு உணவு வழங்கப்படுகிறது.[8] அஸ்தி கரைத்தல்சடலத்தை தகனம் செய்த பிறகு கிடைக்கும் சாம்பல் மற்றும் எலும்புத் துண்டுகள் எனப்படும் அஸ்திய ஒரு சிறு மண் கலயத்தில் சேகரிக்கப்படுகிறது. சில சமூகங்களில் அஸ்தியை பால் மற்றும் புனித நீரால் கழுவுவது வழக்கம். அஸ்தி கலயத்தை இராமேசுவரம் அக்னி தீர்த்தம், தாமிரபரணி ஆறு, காவேரி ஆறு, கங்கை ஆறு , நர்மதை ஆறு, கோதாவரி ஆறு, கிருஷ்ணா ஆறு போன்ற புனித நதிகள் அல்லது திரிவேணி சங்கத்தில் கரைக்கப்படுகிறது.[9] எரியூட்டிய பிறகு செய்யும் சடங்குகள்இறந்தவரின் மூத்த மகனும், புரோகிதரும் இறுதிச் சடங்குகளைச் செய்கிறார்கள். அதன்பிறகு 10 நாட்களுக்கு இறப்பு துக்கம் அனுசரிப்பார்கள். உடனடியான குடும்ப உறுப்பினர்கள் தூய்மையற்றவர்களாகக் கருதப்படுவார்கள் மற்றும் சில தடைகளுக்கும் உட்பட்டவர்கள். இந்த காலகட்டத்தில், அவர்கள் இறந்தவரின் ஆத்மாவுக்கு ஒரு புதிய ஆன்மீக உடலை வழங்குவதற்காக சிரார்த்தம் போன்ற சடங்குகளை செய்கிறார்கள்.[10][11] சிரார்த்தம் சடங்கில் பால், தயிர், தண்ணீர் மற்றும் அரிசி உருண்டைகளை பிண்டங்களாக (இறந்தவருக்குக்கான உணவு) வழங்குவர். இதனால் தீட்டு கழிவதால், இறந்தவரின் நெருங்கிய உறவினர்கள் தொடர் வாழ்க்கைக்கு திரும்பலாம். பின்னர் மாதந்தோறும் 12 அமாவாசை நாளில், இறந்தவர் நலம் வேண்டி தர்ப்பணம் செய்தல் வேண்டும்.[12][6]இறந்த தமது முன்னோர்களின் நினைவாக மகாளய அமாவாசை அன்று பித்ரு பட்சம் எனும் நீத்தார் வழிபாடு செய்வது இந்துக்களின் கடமையாகும்.[13][14][15] சடலத்தைப் புதைத்தல் - சமாதி12 வயதிற்கும் கீழ் இறந்து போன குழந்தைகளை புதைப்பது இந்து சமயத்தில் வழக்கம்.. மேலும் இறந்த துறவிகள், குருமார்கள், ஆதீன கர்த்தாக்கள் மற்றும் ஞானிகள் போன்ற மகான்களின் உடலை புதைத்து சமாதி எழுப்பும் வழக்கும் இந்து சமயத்தில் உள்ளது. சமாதி மீது சிவ லிங்கம் நிறுவியும்; துளசி செடி நட்டும் நினைவிடம் எழுப்புவர். இதனையும் காண்கமேற்கோள்கள்
மேலும் படிக்க
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia