சீலாந்து சண்டை
சீலாந்து சண்டை (Battle of Zeeland) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு சண்டை ஆகும். இது நெதர்லாந்து சண்டையின் ஒரு பகுதியாகும். இதில் நாசி ஜெர்மனியின் படைகள் நெதர்லாந்தின் சீலாந்துப் பகுதியைத் தாக்கிக் கைப்பற்றின. மே 10, 1940 அன்று ஜெர்மனியின் மேற்குப் போர்முனைத் தாக்குதல் தொடங்கியது. பெல்ஜியம், பிரான்சு, லக்சம்பர்க் மற்றும் நெதர்லாந்து ஆகிய நான்கு நாடுகளையும் ஒரே நேரத்தில் ஜெர்மானியப் படைகள் தாக்கின. நான்கு நாட்கள் சண்டைக்குப் பிறகு மே 14ம் தேதி நெதர்லாந்திய அரசு சரணடைந்தது. ஆனால் அந்நாட்டு சீலாந்து மாகாணத்திலிருந்த படைகள் சரணடைய மறுத்து விட்டன. மேலும் நான்கு நாட்கள் ஜெர்மானியரை எதிர்த்துப் போரிட்டு வந்தன. அவர்களுக்கு ஆதரவாக பிரெஞ்சுப் படைகளும் இச்சண்டையில் பங்கேற்றன. ஆனால் மேற்குப் போர்முனையெங்கும் ஜெர்மானியப் படைகள் எளிதில் வெற்றி பெற்றதால், சீலாந்து பிரதேசத்தில் நெதர்லாந்துப் படைகளின் எதிர்ப்பு அர்த்தமற்றுப் போனது. மே 18ம் தேதி சுற்றி வளைக்கப்பட்ட நெதர்லாந்துப் படைகள் சரணடைந்தன. |
Portal di Ensiklopedia Dunia