பிளாக்காக் நடவடிக்கை
பிளாக்காக் நடவடிக்கை (Operation Blackcock) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு போர் நடவடிக்கை. ஜனவரி 1945ல் நேசநாட்டுப் படைகள் நெதர்லாந்து, ஜெர்மனி எல்லைப் பகுதியிலிருந்த ரோயர் முக்கோணப் பகுதியினை நாசி ஜெர்மனியின் படைகளிடமிருந்து கைப்பற்றின. இது ரோயர் முக்கோணம் சண்டை என்றும் அறியப்படுகிறது. 1944ம் ஆண்டின் இறுதியில் கடந்த நான்காண்டுகளாக ஜெர்மானிய ஆக்கிரமிப்பிலிருந்த நெதர்லாந்தின் பெரும்பாலான பகுதிகள் நேசநாட்டுப் படைகளால் மீட்கப்பட்டுவிட்டன. ஒரு சிறு பகுதி மட்டும் ஜெனரல் கஸ்டாவ் அடால்ஃப் வான் சாங்கன் தலைமையிலான ஜெர்மானிய 15வது ஆர்மியின் கட்டுப்பாட்டில் இருந்தது. மியூசே ஆறு, சிக்ஃபிரைட் கோடு மற்றும் சேஃபலர் பீக் சிற்றாறு ஆகியவற்றுக்கு இடைப்பட்ட இப்பகுதி முக்கோண வடிவில் இருந்ததால் ரோயர்மண்டு முக்கோணம் என்றழைக்கப்பட்டது. 1945 ஜனவரி மாதம் நேசநாட்டுப் படைகள் இந்த முக்கோணப் பகுதியைக் கைப்பற்ற முயன்றன. பிரிட்டானிய 2வது ஆர்மி ஜனவரி 14 தேதி இந்தத் தாக்குதலை நிகழ்த்தியது. அடுத்த இரு வாரங்கள் இரு தரப்புக்கும் கடுமையான சண்டை நிகழ்ந்தது. நேச நாட்டுத் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் மெல்ல ஜெர்மானியப் படைகள் பின்வாங்கி மியூசே ஆற்றைக் கடந்து ஜெர்மனிக்குள் சென்று விட்டன. ஜனவரி 27ம் தேதி இப்பகுதி முழுவதும் மீட்கப்பட்டுவிட்டது. |
Portal di Ensiklopedia Dunia