தேவநேயப் பாவாணர்
தேவநேயப் பாவாணர் (Devaneya Pavanar; 7 பெப்ரவரி 1902 – 15 சனவரி 1981) ஒரு தமிழ்நாட்டுத் தமிழறிஞரும், சொல்லாராய்ச்சி வல்லுநருமாவார். இவர் 40-இற்கும் மேலான மொழிகளின் சொல்லியல்புகளைக் கற்று சொல்லாராய்ச்சிகள் செய்துள்ளார். மறைமலை அடிகளார் வழியில் நின்று தனித்தமிழ் இயக்கத்திற்காக உழைத்தார். இவரது தமிழறிவும் பன்மொழியியல் அறிவும் கருதி, இவரின் மாணக்கரும் தமிழ்த்தேசியத்தந்தையுமாகிய பாவலரேறு பெருஞ்சித்திரனார் இவருக்கு "மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்" எனப் பெயர்சூட்டினார். "தமிழ், உலக மொழிகளில் மூத்ததும், மிகத்தொன்மையான காலத்திலேயே செம்மையான மொழியாக வடிவம் பெற்றது எனவும்; திராவிடத்திற்குத் தாயாகவும், ஆரியத்திற்கு மூலமாகவும் விளங்கிய மொழி"யென வழக்காடியவர். "கிரேக்கம், இலத்தீன், சமசுகிருதம் உள்ளிட்டவற்றுக்குத் தன் சொற்கள் பலவற்றை அளித்தது" என்று நிறுவியவர் பாவாணர் ஆவார். தமிழின் வேர்ச்சொல் வளத்தையும் செழுமையையும் சுட்டிக்காட்டி, அதன் வளர்ச்சிக்கான வழியையும் அவரின் நூல்களின் வழி உலகிற்கு எடுத்து இயம்பினார். தொடக்க வாழ்க்கைதேவநேயரின் தந்தை ஞானமுத்துவின் பெற்றோர் வள்ளியம்மாள் - முத்துசாமி ( தஞ்சாவூர் மாவட்டம் நீடாமங்கலத்தை சேர்ந்தவர்[1]). இருவரையும் தோக்கசு (Stokes) என்ற கிறித்தவ சமயக் குரு கிறித்துவர்களாக்கித் தன் மாளிகைக் காவலர்களாகப் பணியமர்த்தினார். ஞானமுத்துவையும் எடுத்து வளர்த்தார். ஞானமுத்து பின்னாளில் பரிபூரணம் என்பாரை மணந்தார். இன்றைய தென்காசி மாவட்டத்தில் உள்ள கோமதிமுத்துபுரம் என்ற சிற்றூரில் வாழ்ந்த இவ்விணையருக்குப் பத்தாவது மகவாகவும் நான்காவது மகனாகவும் 7 பிப்ரவரி 1902 (வெள்ளிக்கிழமை) அன்று மாலை 6 மணியளவில் பிறந்தார் தேவநேயர்.[a] 1906-இல் ஞானமுத்துவும் பரிபூரணமும் அடுத்தடுத்து இயற்கை எய்தினர். வட ஆர்க்காடு மாவட்டம், ஆம்பூரில் மூத்த தமக்கையான பாக்கியத்தாயின் பேணலில் வளர்ந்தார் தேவநேயர். இவர்களுக்கு யங் என்ற பிரித்தானிய அலுவலர் பொருளுதவி செய்தார். கல்வியங் தாளாளராக இருந்த உயர்தரப்பள்ளியில் (இராமநாதபுரம் மாவட்டம் முறம்பு என்னும் சீயோன் மலையில் உள்ளது) தேவநேயர் தொடக்கக் கல்வி பயின்றார். பின்னர் 1912 வாக்கில் சோழபுரம் விடையூழியப் பள்ளியில் தொடக்கக் கல்வியும், ஆம்பூரில் உள்ள மிசௌரி உலூத்தரன் விடையூழிய (M.E.L.M.) நடுநிலைப் பள்ளியில், எட்டாம் வகுப்பு வரையும் பயின்றார். 1916-இல் பாளையங்கோட்டைத் திருச்சபை விடையூழியக் கழக உயர்நிலைப்பள்ளியில் (C.M.S.) சேர்ந்து IV, V, VI ஆம் படிவங்களில் (இந்நாளில் 9, 10, 11 ஆகிய வகுப்புகள்) பயின்றார். 1924- மதுரைத் தமிழ்ச்சங்கப் பண்டிதத்தேர்வில் அவ்வாண்டு தேர்ச்சி பெற்ற ஒரேயொருவர் தேவநேயர் என்ற சிறப்பும் பெற்றார். 'ஞா.தேவநேசக் கவிவாணன், மிசன் உயர்தரப் பாடசாலை, ஆம்பூர்,வடார்க்காடு சில்லா (மாவட்டம்)' என்பது தேர்ச்சிக் குறிப்பு (செந்தமிழ் தொகுதி 22). 1926 - இல் திருநெல்வேலி தென்னிந்திய தமிழ்ச்சங்கத் தனித்தமிழ்ப் புலவர் தேர்வில் அவ்வாண்டு தேர்ச்சியடைந்த ஒரேயொருவர் தேவநேயரே. (செந்.செல்.4:336); அதே ஆண்டில் சென்னைப் பல்கலைக்கழக வித்துவான், கீ.க. தேர்வு (B.O.L) என்னும் இளநிலைத் தேர்விலும் வெற்றி பெற்றார். 1952-இல் தமிழ் முதுகலை பட்டம் (M.A.) பெற்றார். ஆசிரியப்பணி1919-இல் தாம் பயின்ற சீயோன் மலை உயர்தரப்பள்ளியிலேயே முதல் படிவ (ஆறாம் வகுப்பு) ஆசிரியராக இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார். 1921-இல் ஆம்பூர் உயர்நிலைப்பள்ளியில் உதவித் தமிழாசிரியராகப் பணிவுயர்வு பெற்று அங்கு மூன்றாண்டுகள் பணியாற்றினார். 1924-இல் சென்னை சென்ற தேவநேயர், பிரம்பூர் கலவல கண்ணன் செட்டி உயர்நிலைப்பள்ளியில் ஓராண்டு பணியாற்றினார். 1925-இல் சென்னை, திருவல்லிக்கேணி கெல்லற்று உயர்நிலைப்பள்ளியில் பணியாற்றினார் 1926 - சென்னை, தாம்பரம் கிறித்தவ உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்தார். 1929-இல் மன்னார்குடி பின்லே கல்லூரி உயர்நிலைப்பள்ளியில் ஆறாண்டுகள் பணிபுரிந்தார். இக்காலகட்டத்தில், இராசகோபாலர் என்பவரிடம் முறையாக இசை பயின்றார். திருச்சி பிசப் ஈபர் உயர்நிலைப்பள்ளியில் ஒன்பது ஆண்டுகள் (1934-1943) பணிசெய்தார். அதன்பின் சென்னை முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப்பள்ளியில் ஓராண்டு (1943-44) பணியாற்றினார். சேலம் நகராண்மைக் கல்லூரியில் (இப்போதைய சேலம் அரசினர் கலைக் கல்லூரி) தலைமைத் தமிழ்ப் பேராசிரியராக 1944 முதல் 1956 வரை பணியாற்றினார். 12 சூலை 1956 தொடங்கி ஐந்தாண்டுகள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் திரவிட மொழியாராய்ச்சித் துறை ஆலோசகராகப் பணியாற்றினார். அதன்பின் 24 செப்டம்பர் 1961 தொடங்கி சில ஆண்டுகள் காட்டுப்பாடியில் வாழ்ந்தார். தமிழ்ப்பணி1931-இல் பாவாணரின் 'மொழியாராய்ச்சி' - ஒப்பியன் மொழி நூல்' என்னும் மொழியாய்வுக் கட்டுரை செந்தமிழ்ச் செல்வி இதழில் வெளிவந்தது. 1935 - இல் "திரவிட மரபு தோன்றிய இடம் குமரி நாடே"என்னும் தலைப்பில் கீ.க.மு.(M.O.L.) பட்டத்திற்காகப் பாவாணர் இயற்றிய இடுநூல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஒப்படைக்கப்பட்டது. மறு ஆண்டில் அந்நூல் பல்கலைக்கழகத்தால் தள்ளப்பட்டதைத் தொடர்ந்து 'இனி எனது நூல்களையெல்லாம் ஒவ்வொன்றாக வெளியிடுவேன்' என உறுதிகொண்டார். 21 அக்டோபர் 1943 அன்று முதல் தமிழ் உணர்ச்சி மாநாட்டில் பங்கேற்றார். 6 அக்டோபர் 1968 அன்று உலகத் தமிழ்க் கழகம் (உ.த.க.) என்ற அமைப்பைத் திருச்சிராப்பள்ளியில் தோற்றுவித்தார். இவ்வமைப்பின் முதலாண்டு விழா, 1969-இல் பறம்புக்குடியில் திசம்பர் 28, 29 ஆகிய நாட்களில் நடைபெற்றது. இரண்டாமாண்டு விழா, மதுரையில் 9 சனவரி 1971 அன்று நடைபெற்றது. 1964-இல் தென்மொழி இதழின் பாவாணர் பொருட்கொடைத் திட்டம் தொடங்கியது.[2] 12 பிப்ரவரி 1971 அன்று தென்மொழி இதழின் பாவாணர் அகரமுதலித் திட்டம் தொடங்கியது.[சான்று தேவை] 31 திசம்பர் 1972 அன்று தஞ்சாவூரில் 'தமிழன் பிறந்தகம் குமரிநாடே' என்னும் தீர்மானிப்பு மாநாட்டில் பங்கேற்றார். 8 மே 1974 அன்று செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநராக அமர்த்தப்பெற்றார். படைப்புகள்
தனி வாழ்க்கை1926-இல் எசுந்தர் அம்மையாரை மணந்தார் தேவநேயர். அடுத்த இரு ஆண்டுகளில் எசுந்தர் மறைந்தார். இவர்களின் மகன் அழகிய மணவாள தாசன், வளர்ப்பு மகவாகத் தரப்பட்டார். 1930-இல் தேவநேயர், தன் தமக்கை பாக்கியத்தாயின் மகளான நேசமணியை மணந்தார்.[2] நேசமணி அம்மையார் 27 அக்டோபர் 1963 அன்று மறைந்தார். இவ்விணையருக்குக் கீழ்க்காணும் பிள்ளைகள் பிறந்தனர்.
மறைவு1981-இல் மதுரையில் நடைபெற்ற ஐந்தாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் பங்கேற்ற பாவாணர், அம் மாநாட்டின் இரண்டாம் நாளான சனவரி 5 அன்று ஒரு பொதுநிலைக் கருத்தரங்கில், 'மாந்தன் தோற்றமும் தமிழர் மரபும்' எனும் தலைப்பில் 75 மணித்துளிகள் உரையாற்றினார். அன்றிரவில் மாரடைப்பு ஏற்பட்டமையால் அரசு இராசாசி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சனவரி 14 அன்று மீண்டும் பாவாணருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. மறுநாள் (சனவரி 15) காலை 12.30 மணியளவில் தன் 79-ஆம் அகவையில் காலமானார். சென்னைக்கு எடுத்துவரப்பட்ட அவர் உடல், சனவரி 16 அன்று கீழ்ப்பாக்கம் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. புகழ்தமிழ்த்தேசியத்தந்தையாகப் போற்றப்படும் பாவலரேறு பெருஞ்சித்திரனாருக்கு ஆசிரியராக இருந்த இவர், அவரின் தென்மொழி வாயிலாகவே உலகிற்கு வெளிப்பட்டார். தென்மொழி இயக்கமே அவரின் வளர்ச்சிக்கு பெரிதும் துணைநின்றது. மொழிஞாயிறு பட்டமும் தென்மொழியே வழங்கியது. வாழ்க்கை வரைவு நூல்தேவநேயரின் வாழ்க்கை வரலாற்றைப் பாவாணர் என்னும் தலைப்பில் இரா. இளங்குமரன் நூல்வடிவில் எழுதியுள்ளார். இந்நூல் 2000 இல் வெளிவந்தது. தேவநேயப் பாவாணரின் மகன் தே.மணி, தம் தந்தையாரின் வாழ்க்கை வரலாற்றைப் பாவாணர் நினைவலைகள் என்னும் தலைப்பில் 2006 இல் ஒரு நூலாக எழுதியுள்ளார். தொகைநூல்கள்தொகுப்பாசிரியர் இரா. இளங்குமரன், பாவாணரின் அண்ணளவான 600 கடிதங்களைத் தொகுத்து 1988-இல் பாவாணர் மடல்கள் என்ற நூலை வெளியிட்டார். பல்வேறு காலங்களில் பாவாணர் இயற்றிய 320-க்கும் மேலான பாடல்களும் இளங்குமரனின் தொகுப்பில் பாவாணர் பாடல்கள் என்ற தலைப்பில் 2000-இல் வெளியானது.[5] பல்வேறு இதழ்களிலும் மலர்களிலும் வெளிவந்து, நூல்வடிவம் பெறாத பாவாணரின் அரிய கட்டுரைகளை சென்னை தமிழ்மண் பதிப்பகம், "பாவாணர் தமிழ்க்களஞ்சியம்" எனும் தொகுப்புத் திட்டத்தின்கீழ் 12 தொகைநூல்களாக வெளியிட்டது. பின் 2009-இல் அந்நூல்களை மீள்பதிப்பு செய்தது. அவை கீழ்வருமாறு:
விருதுகள்
குறிப்புகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்தமிழ்
ஆங்கிலம் |
Portal di Ensiklopedia Dunia