மங்கள சமரவீர
மங்கள சமரவீர (Mangala Pinsiri Samaraweera, சிங்களம்: මංගල පින්සිරි සමරවීර; 21 ஏப்ரல் 1956[1] – 24 ஆகத்து 2021),[2] இலங்கை அரசியல்வாதி ஆவார். இவர் 2017 முதல் 2019 வரை நிதி அமைச்சராகவும், 2005 முதல் 2007 வரையும், 2015 முதல் 2017 வரையும் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். 2007 ஆம் ஆண்டில் அன்றைய அரசுத்தலைவர் மகிந்த ராசபக்ச இவரைத் தனது அமைச்சரவையில் இருந்து நீக்கியதை அடுத்து, இலங்கை சுதந்திரக் கட்சி (மகாஜன) என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். இக்கட்சி 2010 இல் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்தது.[3] 30 ஆண்டுகள் வரை அரசியலில் ஈடுபட்டிருந்த இவர் 2020 இல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.[4] மங்கள சமரவீர 1994, 2000, 2001, 2004 ஆகிய தேர்தல்களில் இலங்கை சுதந்திரக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு நாடாளுமன்றம் சென்றார். 2010 தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் மாத்தறை மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்டார். வாழ்க்கைக் குறிப்புசிறிமாவோ பண்டாரநாயக்காவின் அரசில் அமைச்சராக இருந்த மகாநாம சமரவீர, முன்னாள் மாத்தறை நகரசபை உறுப்பினர் கேமா பத்மாவதி அமரவீர ஆகியோருக்குப் பிறந்த மங்கள, கொழும்பு றோயல் கல்லூரி, இலண்டன், வோல்த்தாம் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றார். பின்னர் இலண்டன் புனித பார்ட்டின் பாடசாலையில் ஆடை வடிவமைப்பு, தொழில்நுட்பத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். களனி பல்கலைக்கழகம், அழகியல் ஆய்வுக் கழகத்தில் வருகைதரு விரிவுரையாளராகப் பணியாற்றினார்.[5][6] அரசியலில்மங்கள 1983 இல் இலங்கை சுதந்திரக் கட்சியின் மாத்தறை மாவட்ட ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் கட்சியின் துணைச் செயலாளர், ஒருங்கிணைப்புச் செயலாளர் போன்ற பதவிகளை வகித்தார்.[7] அத்துடன் 1980களில் ரணசிங்க பிரேமதாசா அரசுத்தலைவராக இருந்த போது, மங்கள மனித உரிமை செயற்பாட்டாளராகவும் செயல்பட்டார்.[8] 1989 தேர்தலில் மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றம் சென்றார். 1994 இல் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் அமைச்சரவையில் அஞ்சல், தொலைத்தொடர்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[9] அதே அமைச்சரவையில், பின்னர் நகர அபிவிருத்தி அமைச்சராகவும், பின்னர் துணை நிதி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். 2001 இல் கட்சி தோல்வியடைந்ததை அடுத்து, சுதந்திரக் கட்சியின் பொருளாளராக நியமிக்கப்பட்டார். 2004 இல் சந்திரிக்காவின் அமைச்சரவையில் துறைமுக, வான் போக்குவரத்து, மற்றும் ஊடகத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[10] சூன் 2005 இல், அரசுத்தலைவர் சந்திரிக்காவுடன் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து, ஊடக அமைச்சுப் பதவி அவரிடம் இருந்து பறிக்கப்பட்டது, ஆனாலும் அவர் துறைமுக, வான் போக்குவரத்து அமைச்சராகத் தொடர்ந்து பதவியில் இருந்தார்.[11] பிரதமர் மகிந்த ராசபக்சவின் அரசுத்தலைவர் வேட்பாளருக்கான பிரச்சார மேலாளராகப் பணியாற்றினார்.[12] 2005 நவம்பரில் மகிந்த ராசபக்ச தேர்தலில் வெற்றியடைந்ததை அடுத்து, அவரது அமைச்சரவையில் மங்கள சமரவீர வெளியுறவுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[13] 2007 சனவரியில் வெளியுறவுத்துறை அமைச்சுப் பதவி அவரிடம் இருந்து பறிக்கப்பட்டது. ஆனாலும் துறைமுக, வான் போக்குவரத்து அமைச்சராகத் தொடர்ந்து பதவியில் இருந்தார்.[14] 2007 பெப்ரவரி 9 இல், மகிந்தவுடன் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து, அமைச்சர்கள் அனுரா பண்டாரநாயக்கா, சிறீபதி சூரியாராச்சி ஆகியோருடன், மங்கள சமரவீரவும் அமைச்சுப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டனர்.[15] இதனை அடுத்து சுந்தந்திரக் கட்சி (மகாசன) என்ற புதிய கட்சியை ஆரம்பித்தார். 2010 இல் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தார். 2015 அரசுத்தலைவர் தேர்தலில், எதிர்க்கட்சிக் கூட்டணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் பேச்சாளராக இருந்து அவரின் வெற்றிக்குப் பெரும் உறுதுணையாக இருந்தார்.[6][16] 2015 சனவரி 12 இல், மைத்திரிபால சிறிசேனவின் அமைச்சரவையில் மங்கள வெளியுறவுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[17][18] 2019 அரசுத்தலைவர் தேர்தலை அடுத்து, மங்கள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் புதிதாக உருவான ஐக்கிய மக்கள் சக்தியில் சேர்ந்தார்.[19] 2020 சூனில், 2020 நாடாளுமன்றத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என அறிவித்தார்.[20][21] 2020 சூன் 9 இல், அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.[22][23] சர்ச்சைகள்சூன் 2005 தேர்தல்களில் பிரச்சாரப் பிரிவுத் தலைவராத் தொழிற்பட்ட போது, இத்தேர்தல் வெற்றிக்காக மகிந்த ராஜப்பக்ச விடுதலைப் புலிகளுக்கு பணம் கொடுத்து ரணில் விக்கிரமசிங்கவிற்கு வடக்குக் கிழக்கில் தமிழர்கள் வாக்களிக்காமல் செய்ததாகப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.[24][25] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia