முலைத் தட்டையாக்கல்முலைத் தட்டையாக்கல் ( breast flattening) அல்லது முலைத் தேய்த்தல் (breast ironing)[1]) சிறுமியரின் மார்பகம் பெரிதாகும்போதே கடினமான அல்லது சூடான பொருட்களைக் கொண்டு அடித்தோ அல்லது தேய்த்தோ அவை வளர்வதைத் தடுப்பதாகும்.[2][3] இதனை பொதுவாக சிறுமியின் தாய் நிகழ்த்துகிறார்; சிறுமியை பாலியல் துன்புறுத்தல் மற்றும் வன்கலவியிலிருந்து காக்கவும்[3] இளம் வயதில் கர்ப்பமுற்று குடும்பப் பெயரைக் கெடுக்காதிருக்கவும்[4] அல்லது இளவயது திருமணத்திலிருந்து காப்பாற்றி கல்வியைத் தொடரவும் இவ்வாறு செய்கின்றனர்.[2][4] இது பெரும்பாலும் கமரூன் பகுதிகளில் நடத்தப்படுகிறது; முலை வளர்ந்த பெண்கள் பாலுறவிற்கு தயாரானவர்கள் என்ற கருத்து இங்குள்ள சிறுவர்/ஆண்களிடையே பரவலாக உள்ளது.[2] இது ஆபிரிக்கக் கண்டத்தில் மட்டுமன்றி கமரூன் மக்கள் குடிபெயர்ந்துள்ள, பிரித்தானியா போன்ற இடங்களிலும் நடைபெறுவதாக அஞ்சப்படுகிறது.[5] முலைத் தட்டையாக்க பெரும்பாலும் மரத்தினாலான குழவி பயன்படுத்தப்படுகிறது; இலைகள்,[1] வாழைக்காய், தேங்காய் மூடிகள்,[2] அரவைக் கற்கள், கரண்டிகள், துடுப்புக் கரண்டிகள்,[4] கரி மீது சூடுபடுத்தப்பட்ட சுத்தியல்கள் ஆகியனவும் பயன்படுத்தப்படுகின்றன.[6] நிகழ்படுகைமுலைத் தட்டையாக்கல் கமரூனின் அனைத்து பத்து மண்டலங்களிலும் கடைபிடிக்கப்படுகிறது.[4] மேற்கு மற்றும் நடு ஆப்பிரிக்கா, பெனின், சாட், கோட் டிவார், கினி-பிசாவு, கினி, கென்யா, டோகோ, சிம்பாப்வே பகுதிகளில் கடைபிடிக்கப்படுகிறது. முலை "துடைத்தல்" தென்னாப்பிரிக்காவில் நடைபெறுவதாக அறியப்படுகிறது.[1] கமரூனின் 200 இனக்குழுக்களும் இதில் ஈடுபடுகின்றன.[7] சமயம், சமூக-பொருளியல் நிலை போன்றவைக்கும் முலைத் தட்டையாக்கலுக்கும் தொடர்பில்லை.[1] சூன் 2006இல் செருமானிய வளர்ச்சி முகவை ஒன்று நடத்திய கருத்துக் கணிப்பின்படி நால்வரில் ஒருவருக்கு முலை தட்டையாக்கப்பட்டிருக்கிறது; ஏறத்தாழ நான்கு மில்லியன் சிறுமிகள் பாதிக்கப்பட்டிருப்பதாக மதிப்பிட்டுள்ளது. இந்தக் கருத்துக் கணிப்பின்படி இது பெரும்பாலும் பாலியல் வன்முறைக்கு வாய்ப்புமிக்க நகரப் பகுதிகளிலேயே நடைபெறுகிறது.[3] கமரூனின் கடற்கரையோர தென்கிழக்குப் பகுதியில் 53 விழுக்காடாக உள்ளது.[6] கிறித்தவர்களும் ஆத்மவாதிகளும் வாழும் தென்பகுதியுடன் ஒப்பிடும்போது முசுலிம்கள் வாழும் வடபகுதியில் குறைவாக உள்ளது. இங்கு 10% பெண்களே பாதிப்பிற்குள்ளாயுள்ளனர்.[3] சிலர் இதற்கு வடக்குப் பகுதிகளில் இளவயது திருமணங்கள் நடப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம் என்கின்றனர்.[1] அண்மைக் காலத்தில் முலைத் தட்டையாக்கல் கூடுதலாக நடைபெறுவதற்கு கடந்த 50 ஆண்டுகளில் மேம்பட்ட உணவுப் பழக்கவழக்கங்களால் இளவயதில் வயதுக்கு வருவது காரணமாகக் கூறப்படுகிறது.[8] ஒன்பது அகவைக்கு குறைவாகவே வயதுக்கு வந்த கமரூன் பெண்களில் பாதிக்கு மேற்பட்டவர்களுக்கு முலை தட்டையாக்கப்பட்டுள்ளது.[8] 11 வயதில் பெரியவரானவர்களில் 38% பேருக்கு தட்டையாக்கப்பட்டுள்ளது.[3] தவிரவும், 1976 முதல், 19 அகவைக்கு குறைந்து திருமணமானவர்களின் விழுக்காடு 50%இலிருந்து 20%ஆகக் குறைந்துள்ளது; இது வயதுக்கு வருவதற்கும் திருமணத்திற்கும் இடையே உள்ள காலத்தை விரிவாக்கியுள்ளது. திருமண வயது கூடியிருப்பதற்கு கல்வியும் பணியாற்றலும் காரணமாக அமைந்துள்ளன.[1] இந்த நடைமுறை கமரூன் மக்கள் குடிபெயர்ந்துள்ள பிரித்தானியா போன்ற இடங்களுக்கும் பரவியுள்ளதாக அஞ்சப்படுகிறது.[5] கமரூன் பெண்கள் மற்றும் சிறுமியர் வளர்ச்சி அமைப்பு இலண்டனின் பெருநகரக் காவல்துறையுடன் இணைந்து இந்தப் பிரச்சினை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றது.[5] இதனையும் காண்கமேற்சான்றுகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia