ராஜ ராஜேஸ்வரி (திரைப்படம்)
ராஜ ராஜேஸ்வரி 1944 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். சுந்தரம், எம். எல். டான்டன் ஆகிய இருவரின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கொன்னப்ப பாகவதர், செருகளத்தூர் சாமா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1] கொன்னப்ப பாகவதர் இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். கதைச்சுருக்கம்மகத இராஜ்யாதிபதி வீர்யவர்மன் அழகிற் சிறந்தவளும் சகல - கலைகளிலும் வல்லவளுமான தன்மகள் ராஜேஸ்வரிக்குத் தக்க கணவனைத்தேடும்படி தன் மந்திரி உக்ரவர்மன் பொறுப்பில் விடுகிறான். துர்க்குணம் நிறைந்த மந்திரி, பைத்தியமும் வலிப்பும் உள்ள தன் ஒரே மகன் காமராஜனுக்கு அரசகுமாரியை மணம் செய்வித்து, இராஜ்யத்தை அபகரிக்கச் சூழ்ச்சி செய்கிறான். ஜோஸ்யத்தில் வல்லவரான ஸத்யவாக் தன் மகன் அதிரூபனின் கல்வித்திறமையை வியந்து, அவனுடைய அற்பாயுளுக்காக தன்மனைவி துளசியுடன் வருந்துகிறார். இதையறிந்த அதிரூபன் தன் ஜோதிட வல்லமையால் தனக்கு தீர்க்காயுள் என்று அவர்களை நம்பும்படி செய்து அவர்கள் கண் காணாமல் இறக்கத் தீர்மானித்து வீட்டைத் துறந்துசெல்கிறான். நாரதர் கைலாசத்தில் விதிபெரிதா, சக்தி பெரிதா என்று சிவ பார்வதியினிடையே கலகத்தை விளைவித்துச் செல்கிறார். மந்திரியின் சூழ்ச்சியில் சிக்கிய அரசன் காமராஜனையே தன்மகளுக்கு கணவனாகத் தெரிந்தெடுக்கிறான். வழக்கமாக வலிப்பு வரும் பௌர்ணமியன்று சோதிடர் முகூர்த்தத்தை நிச்சயம் செய்து விடுகிறார். இதற்குத்தப்ப வழியறியாது தவித்துக் கொண்டிருந்த மந்திரி, தற்செயலாக தன் தோட்டத்தில் இளைப்பாறும் பொருட்டு வந்த அதிரூபனைக் காண்கிறான். சகல விதத்திலும் தன் மகனை ஒத்திருந்த அதிரூபனை, தன் மகனுக்குப் பதிலாக மணவறையில் உட்கார்ந்து மாங்கல்ய தாரணம் செய்ய ஏற்பாடு செய்கிறான். மந்திரியின் உபாயம் பலியாமல், அதிரூபன் பள்ளியறைக்குள் சென்று அரசகுமாரியின் மனத்தைத் தன் சாமர்த்தியத்தால் கவர்கிறான். மறுநாள் காலையில் மந்திரி, அதிரூபனை ரகசியமாக பல்லக்கில் வைத்து எல்லையைத் தாண்டியதும் மேட்டிலிருந்து உருட்டச் செய்கிறான். தன் ஆயுள் இன்னும் முடியாததால், அதிரூபன் தப்பி ஓர் ஏகாந்தமான சிவலாயத்தை அடைந்து தன்மீதி வாழ் நாளை மகேஸ்வர சேவையில் கழிக்கிறான். இரண்டாம் நாள் பள்ளியறையில், காமராஜனிடமிருந்து ராஜேஸ்வரி உண்மையை அறிந்து அவனை பயமுறுத்தி வைக்கிறாள். ராஜேஸ்வரி, தன் கணவன் க்ஷேமமாக வரவேண்டி அசரீரியின் ஆக்ஞைப்படி, தேவியின் விரதத்தை ஆரம்பிக்கிறாள். அவளுடைய பக்திக்கும் உறுதிக்கும் மெச்சிய ராஜராஜேஸ்வரி, பிரத்தியக்ஷமாகி அவள் மனோரதம் பூர்த்தியடையுமென்று ஆசீர்வதித்து மறைகிறாள். ராஜேஸ்வரி தன் தோழியுடன் ஆலோசித்து அதிரூபனைத் தேடி அழைத்துவர, தக்க அடையாளங்களுடன், தூதர்களை அனுப்புகிறாள். ஆயுள்முடிந்த அதிரூபன் இறந்து விடுகிறான். நாரதர் கைலை சென்று பார்வதியிடம் விஷயத்தை வெளியிடுகிறார். தேவி தன்வாக்கைக் காப்பாற்ற வேண்டுமென்று அரனிடம் பிடிவாதம் செய்ய, ஈஸ்வரனும் அதிரூபனுக்கு பூரண ஆயுள் அளித்து விடுகிறார். அதிரூபன் உயிர்பெற்று மகாதேவனை துதிக்கையில், தூதர்கள் அவனை அடையாளம் கண்டுபிடித்து விஷயங்களைத் தெரிவிக்கின்றனர். மாறுவேடத்தில் ஓர் சாதுபோலவரும் அதிரூபனை, தன் மகளின் விருப்பப்படி வீர்யவர்மன் சபாமண்டபத்தில் வரவேற்கிறான். உண்மை வெளியாகிறது. மந்திரி நாடுகடத்தப்படுகிறார். அதிரூபன் ராஜேஸ்வரியுடன் தன்பெற்றோரின் ஆசிர்வாதத்தைப் பெறுகிறான். நடிகர்கள்
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia