இலங்கை உயிர்ப்பு ஞாயிறு குண்டுவெடிப்புகள் (Sri Lanka Easter bombings) 2019 ஏப்ரல் 21 உயிர்ப்பு ஞாயிறு அன்று இலங்கையின் வணிகத் தலைநகர் கொழும்பு உட்பட மூன்று நகரங்களில் இடம்பெற்றன. மூன்று கிறித்தவக் கோவில்களிலும், மூன்று ஐந்து நட்சத்திர உணவு விடுதிகளிலும் இத்தொடர் குண்டுவெடிப்புகள் காலை 08:30 இற்கும் 09:15 மணிக்குமிடையில் நிகழ்ந்தன. 39 வெளிநாட்டவர்கள்,[9] 3 காவல்துறையினர் உட்படக் குறைந்தது 253 பேர்[3] வரை கொல்லப்பட்டனர், 500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.[10][11][12][13][14][15][16] கொழும்பு கொச்சிக்கடை, மட்டக்களப்பு, நீர்கொழும்பு ஆகிய இடங்களில் உள்ள தேவாலயங்களில் உயிர்ப்பு ஞாயிறுதிருப்பலி நிகழ்வுகள் நடைபெற்ற போது குண்டுகள் வெடித்தன. ஏனைய குண்டுகள் கொழும்பின் நடுப்பகுதியில் அமைந்திருந்த சங்கிரி-லா உணவகம், சினமன் கிராண்ட் உணவகம், கிங்சுபரி உணவகம் ஆகிய மூன்று ஐந்து-நட்சத்திர உணவுவிடுதிகளில் வெடித்தன.[17][18][19] இத்தாக்குதல்கள் தொடர்பாக 13 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.[20]
இத்தாக்குதல்களில் ஒன்பது தற்கொலைதாரிகள் ஈடுபட்டதாகவும் இவர்கள் அனைவரும் இலங்கையர்கள் எனவும், தேசிய தவ்கீத் ஜமாத் என்ற உள்ளூர் அடிப்படைவாத இசுலாமிய ஆயுதக்குழுவைச் சேர்ந்தவர்கள் எனவும் இலங்கை அரசு அறிவித்தது.[6] 2019 மார்ச் 15 இல் நியூசிலாந்தில் இடம்பெற்ற கிறைஸ்ட்சேர்ச் பள்ளிவாசல் படுகொலைகளுக்குப் பழிவாங்கும் முகமாகவே இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கலாம் என இலங்கைப் பாதுகாப்பு இராசாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்தார்.[கு 1] இரு தாக்குதல்களுக்கும் நேரடித் தொடர்புகள் இருப்பதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என நியூசிலாந்து அரசு அறிவித்தது.[25][26][27]
2019 ஏப்ரல் 23 அன்று, இசுலாமிய அரசு (ஐஎஸ்) என்ற இசுலாமியத் தீவிரவாத ஆயுதக்குழுவின் பன்னாட்டுப் பரப்புரை இணையதள அமாக் செய்திச் சேவை இலங்கைத் தாக்குதல்களை தமது உறுப்பினர்களே நடத்தியதாக அறிவித்தது. தமது குழுவிற்கு எதிரான நாடுகளின் குடிமக்களைத் தாக்குவதற்காகவே இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.[8] ஆனாலும், இசுலாமிய அரசுக் குழுவிற்கு எதிரான கூட்டமைப்பில் இலங்கை இல்லை எனவும், கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் இலங்கையர்கள் எனவும் ஊடகங்களால் சுட்டிக்காட்டப்பட்டது.[28] இத்தாக்குதலில் ஈடுபட்டவர்களைப் புகழ்ந்து, இசுலாமிய அரசின் தலைவர் எனக் கருதப்படும் அபூ பக்கர் அல்-பக்தாதி என்பவர் 18-நிமிடங்கள் உரையாற்றிய காணொளி வெளியிடப்பட்டது.[29]
2009 ஆம் ஆண்டு ஈழப் போர் முடிவின் பின்னர் நாட்டில் இடம்பெற்ற முதலாவது பெரிய தாக்குதல் நிகழ்வுகள் இவையாகும்.[30]
பின்னணி
இலங்கையில் ஏறத்தாழ 7.4% மக்கள் கிறித்தவர்கள் ஆவர். இவர்களில் 82% போர்த்துக்கீச மரபு-வழி கத்தோலிக்கர் ஆவர். இலங்கைத் தமிழ்கத்தோலிக்கர்பிரான்சிஸ் சவேரியார் மற்றும் போர்த்துக்கீச மதப்பரப்புனர்களின் சமய மரபு வழி வந்தவர்கள். ஏனைய கிறித்தவர்கள் ஆங்கிலிக்கத் திருச்சபை, மற்றும் சீர்திருத்தத் திருச்சபையினர் ஆவார்.[31]உயிர்ப்பு ஞாயிறு நாளன்று இலங்கையில் பெருந்தொகையான கிறித்தவர்கள் தேவாலயங்களில் இடம்பெறும் திருப்பலிப் பூசைகளில் கலந்து கொள்வது வழக்கமாகும்.[32] இந்நிகழ்வுகளில் கிறித்தவர்கள் மட்டுமல்லாமல் ஏனைய சமயத்தவர்களும் கலந்து கொள்வர்.
தேசிய தவ்கீத் ஜமாத் என்ற தீவிரவாத இசுலாமிய அமைப்பு இலங்கையில் தற்கொலைத் தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக தாக்குதல் நடத்தப்படுவதற்கு 10 நாட்களுக்கு முன்னர் இலங்கைப் பாதுகாப்புப் பிரிவினருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக த நியூயார்க் டைம்ஸ், ஏஎஃப்பி ஆகிய செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டன[33][34][35] இது குறித்த தகவல்கள் நாட்டின் அமைச்சரவைக்கோ அல்லது மூத்த அரசியல்வாதிகளுக்கோ தெரியப்படுத்தப்படவில்லை.[34][35] அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, தனது டுவிட்டர் செய்திக்குறிப்பில், தேசிய தௌவீத் ஜமாத் அமைப்பின் முகம்மது சகரான் என்பவரின் தலைமையில் தற்கொலைக் குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு பிரிவினரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக கூறியிருக்கிறார். இது தொடர்பான கடிதம் ஒன்றையும் அவர் தனது செய்தியில் இணைத்துள்ளார். இக்கடிதத்தின்படி, இலங்கையிலுள்ள பல கிறித்தவக் கோவில்கள், இந்தியத் தூதரகம் ஆகியன இலக்கு வைக்கப்பட்டிருந்தன.[20][36]
தாக்குதல்கள்
தாக்குதல்கள் நடத்தப்பட்டபோது கிறித்தவர்கள் உயிர்ப்பு ஞாயிறு திருப்பலிப் பூசைகளில் கலந்து கொண்டிருந்தார்கள். உணவு விடுதிகளில் காலை உணவை அருந்துவதற்காகப் பல வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும், உள்நாட்டினரும் கூடியிருந்த வேளை. பெருமளவு உயிர்ச் சேதம் ஏற்படுத்துவதற்காகத் இத்தாக்குதல்கள் திட்டமிட்டு நடத்தப்பட்டிருந்தன. அனைத்துத் தாக்குதல்களும் தற்கொலைக் குண்டுதாரிகளால் நடத்தப்பட்டன.[34]
முதலாவது தாக்குதல் நீர்கொழும்பு, புனித செபஸ்தியான் கோவிலில் இடம்பெற்றது. இத்தாக்குதலில் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.[34][37] இரண்டாவது தாக்குதல் கொழும்பு, புனித அந்தோனியார் கோவிலில் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் 50 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.[38]
மூன்றாவது தாக்குதல் நாட்டின் மற்றொரு புறத்தில் மட்டக்களப்பு நகரில் சீர்திருத்தத் திருச்சபையின் சீயோன் தேவாலயம் மீது நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் 29 பேர் கொல்லப்பட்டனர்.[39]
தேவாலயங்கள் மீதான மூன்றாவது தாக்குதல் இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு நகரில் உள்ள கிறித்தவ சீர்திருத்த சபையின் நற்செய்திப் பறைசாற்று இயக்கக் கோவிலான சீயோன் தேவாலயம் மீது நடத்தப்பட்டது.[45] இத்தாக்குதலில் குறைந்தது 27 கொல்லப்பட்டனர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் ஞாயிறு பாடசாலையில் பயின்று வந்த சிறுவர்கள் எனக் கூறப்படுகிறது.[17][42][43] 300 இற்கும் அதிகமானோர் மட்டக்களப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என மருத்துவமனை தெரிவித்தது.[19]
தங்கும் விடுதிகள்
தாக்குதல்களுக்குள்ளான மூன்று 5-நட்சத்திர தங்கும் விடுதிகள்: சாங்கிரி-லா விடுதி, சின்னமன் கிராண்ட் விடுதி, கிங்ஸ்பரி விடுதி ஆகியனவாகும். இவை கொழும்பின் மத்திய பகுதியில் அமைந்துள்ளன.[10][46]
சாங்கிரி-லா விடுதியில் காலை 08:57 மணிக்கு குண்டுவெடிப்பு நடைபெற்றது. விடுதியின் மூன்றாம் தளத்திலுள்ள "டேபிள் ஒன்" என்ற உணவகத்தில் பெரும்பாலும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நிறைந்திருந்த காலை உணவு நேரத்தில் தாக்குதல் நடந்தது.[47] இருவர் இத்தாக்குதலை நடத்தியுள்ளனர். இருவரும் முதல் நாள் அங்கு வந்து தங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. ஒருவர் உணவகத்திலும், மற்றவர் மூன்றாம் மாடியின் வேறோர் இடத்திலும் குண்டுகளை வெடிக்க வைத்தனர்.[48]
சின்னமன் கிராண்ட் விடுதியில் தாக்குதல் நடத்திய தீவிரவாதி அவ்விடுதியில் பொய்யான பெயரில் தான் ஒரு வர்த்தகர் எனக் கூறித் தங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.[48] இங்குள்ள "டாப்பிரபேன் உணவகத்தில்" காலை உணவுக்காக வரிசையில் நின்றவர்களுடன் இணைந்து இவரும் நின்று குண்டை வெடிக்க வைத்துள்ளார். இத்தாக்குதலில் அங்கு நின்றிருந்த உணவக முகாமையாளர் ஒருவரும் கொல்லப்பட்டார்.[49]
கொழும்பிலுள்ள உலக வரத்தக மையத்துக்கு அருகிலுள்ள கிங்ஸ்பரி நட்சத்திர விடுதியில் இன்னொரு தாக்குதல் இடம்பெற்றது.
கொழும்பின் பல பகுதிகளிலும் காவல்துறையினர் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போது மேலும் குண்டுகள் வெடித்தன. கொழும்பு, தெமட்டகொடையில் உள்ள வீடொன்றில் குண்டுகள் இருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு தேடுதல் நடத்தப்பட்ட போது, குண்டுகள் வெடித்ததில் மூன்று காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.[53][54]
இக்குண்டுவெடிப்புகளில் 253 பேர் உயிரிழந்தனர்,[3] 500 பேர் காயமடைந்தனர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் இலங்கையர்கள் ஆவர், 39 பேர் வெளிநாட்டவர்கள்[9]
இறந்தவர்களில் இலங்கைத் தொலைக்காட்சி சமையல் நிபுணர் சாந்தா மாயாதுன்னையும் அவரது மகளும் அடங்குவர். இவர் தாக்குதல் நடத்தப்படுவதற்கு சற்று முன்னர் உணவகத்தில் உணவருந்திய படங்களை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.[73]டென்மார்க் தொழிலதிபர் ஆன்டர்சு பவுல்சென் என்பவரின் மூன்று பிள்ளைகள் கொல்லப்பட்டார்கள்.[74]வங்காளதேச அரசியல்வாதி சேக் பசுலுல் செலிம் என்பவரின் பேரன் இறந்தவர்களில் ஒருவர் ஆவார்.[75][76][77]இந்தியசமயச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த நான்கு உறுப்பினர்கள் கொல்லப்பட்டார்கள்.[77] இறந்த வெளிநாட்டவர்களில் குறைந்தது 8 பேர் சிறுவர்கள் ஆவர்.[72][77][78]
ஏப்ரல் 23 அன்று, இறந்தவர்கள் பலரின் முதலாவது அடக்க நிகழ்வுகள் இடம்பெற்றன. இலங்கையில் இந்நாள் துக்க நாளாக அறிவிக்கப்பட்டது.[79]
↑இவர்களில் ஒருவர் சுவிசு-இடச்சுக் குடியுரிமையாளரும், இன்னும் ஒருவர் இடச்சு-இலங்கைக் குடியுரிமையாளர் ஆவார்.
↑இவர்களில் ஒருவர் இன்னும் ஒரு நாட்டின் குடியுரிமையைக் கொண்டுள்ளார். இலங்கைக் குடியுரிமையைக் கொண்ட இலங்கை-சுவிட்சர்லாந்து குடும்பம் இங்கு சேர்க்கப்படவில்லை.